Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - யுத்த காண்டம்
முதல் பகுதி /படலங்கள் 1- 9

rAmAyaNam of kampar
canto 6 (yutta kAnTam), part 1
(paTalams 1-9, verses 6186-6986)
In tamil script, unicode/utf-8 format



    Acknowledgements:
    Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for
    providing us with a romanized transliterated version of this work and for permissions
    to publish the equivalent Tamil script version in Unicode encoding
    We also thank Mr. S. Govindarajan for proof-reading the Tamil script version
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2016.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are :
    http://www.projectmadurai.org/


கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி 1) /படலங்கள் 1-9

6.0 கடவுள் வாழ்த்து (6186)
6.1 கடல் காண் படலம் (6187 - 6197)
6.2 இராவணன் மந்திரப் படலம் (6198 - 6315)
6.3 இரணியன் வதைப் படலம் (6316 - 6491)
6.4 வீடணன் அடைக்கலப் படலம் (6492 - 6643)
6.5 இலங்கை வேள்விப் படலம் (6644 - 6717)
6.6 வருணனை வழி வேண்டு படலம் (6718 - 6802)
6.7 சேது பந்தனப் படலம் 6803-6873)
6.8 ஒற்றுக் கேள்விப் படலம் (6874-6938)
6.9 இலங்கை காண் படலம் (6939-6986)


கடவுள் வாழ்த்து (6186)

6186. ஒன்றே என்னின் ஒன்று ஏ ஆம், பல என்று உரைக்கின் பல ஏ ஆம்,
அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆம் ஏ ஆம்,
இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கில் உளதேயாம்,
நன்றே நம்பி குடிவாழ்க்கை! நமக்கு இங்கு என் ஓ! பிழைப்பு? அம்மா!
------------

6.1 கடல் காண் படலம் (6187- 6197)

வானரம் படை தென்கடற்கரையிற் சென்று தங்குதல்

6187. ஊழி திரியும் காலத்தும் உலையாநிலைய உயர்கிரியும்
வாழி வற்றா மறிகடலும் மண்ணும் வடபால் வான் தோய
பாழித் தறெ்கு உள்ளன கிரியும் நிலனும் தாழப் பரந்து எழுந்த
ஏழு பத்தின் பெருவெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால்.         6.1.1

இராமன் கடலைக் காணுதல்

6188. பொங்கிப் பரந்த பெருஞ்சேனை புறத்தும் அகத்தும் புடைசுற்றச்
சங்கின் பொலிந்த கையாளைப் பிரிந்த பின்பு தமக்கு இனமாம்
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வு உற்று, இதழ் குவிக்கும்
கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலைக் கண்ணுற்றான்.         6.1.2

அலைப்பரப்பின் தோற்றம்

6189. சேய காலம் பிரிந்து அகலத் திரிந்தான், மீண்டும் சேக்கையின் பால்
மாயன் வந்தான், இனி வளர்வான் என்று கருதி, வரும் தென்றல்,
தூய மலர்போல் நுரைத் தொகையும் முத்தும் சிந்திப் புடை சுருட்டிப்
பாயல் உதறிப் படுப்பதே ஒத்த திரையின் பரப்பு; அம்மா!         6.1.3

தென்றலால் இராமன் வருந்தல் (6190-6191)

6190. வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த
பழிக்கும், காமன் பூங்கணைக்கும் பற்றாநின்றான் பொன் தோளைச்
சுழிக்கும் கொல்லன் ஒல் உலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னே!
கொழிக்கும் கடலின் நெடும் திரைவாய்த் தென்றல் தூற்றும் குறுந்து திவலை.         6.1.4

6191. நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய், நிலைதளர்வான்
தன்னைக் கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்வாய்ப்
பின்னல் திரைமேல் தவழ்கின்ற பிள்ளைத் தென்றல், கள் உயிர்க்கும்
புன்னைக் குறும் பூ நறுஞ்சுண்ணம் பூசாது ஒருகால் போகாதே.         6.1.5

பவளம் தோன்றுதல்

6192. சிலை மேல் கொண்ட திரு நெடும் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப
நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன் தன்முன் படி ஏழும்
தலை மேல் கொண்ட கற்பினாள், மணிவாய் என்னத் தனிதோன்றிக்
கொலைமேற் கொண்டு, ஆர் உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ கொடிப் பவளம்.         6.1.6

முத்து வெளிப்படல்

6193. தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல,
வீரம் வில்லி, நெடுமானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு,
'ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு'ஏழை
மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ?         6.1.7

கடலின் தோற்றம் (6194-6196)

6194. இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன்
தந்த பாவை தவப்பாவை தனிமை தகவோ? எனத் தளர்ந்து
சிந்துகின்ற நறும் தரளக் கண்ணீர் ததும்பத் திரைத்து எழுந்து
வந்து வள்ளல் மலர்த் தாளில் வீழ்வது ஏய்க்கும், மறி கடலே.         6.1.8

6195. பள்ளி அரவில் பேர் உலகம் பசுங்கல் ஆகப் பனிக் கற்றை
துள்ளி நறு மென் புனல்தெளிப்பத் தூ நீர்க் குழவி முறை சுழற்றி,
வெள்ளி வண்ண நுரைக் கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு
அள்ளி அப்பத் திரைக் கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி.         6.1.9

6196. கொங்கைக் குயிலைத் துயர் நீக்கி, இமையோர்க்கு உற்ற குறை முற்ற,
வெம் கைசிலையன் தூணியினன் விடாத முனிவின் மேல் செல்லும்
கங்கைத் திருநாடு உடையானைக் கண்டு நெஞ்சம் களி கூர
அம் கைத் திரைகள் எடுத்து ஓடி, ஆர்த்தது ஒத்தது அணி ஆழி.         6.1.10

இராமன் மேல்விளைவு எண்ணிக் கடற்கரையில் தங்குதல்

6197. இன்னது ஆய கருங்கடலை எய்தி அதனுக்கு எழுமடங்கு
தன்னது ஆய நெடுமானம் துயரம் காதல் இவை தழைப்ப
என்னது ஆகும் மேல்விளைவு? என்று இருந்தான் இராமன்; இகல் இலங்கைப்
பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம்.         6.1.11
----------------

6.2 இராவணன் மந்திரப் படலம் (6198 - 6315)

அனுமனால் எரியுண்ட இலங்கை மயனால் புதுப்பிக்கப்படுதல்

6198.பூவரும் அயனொடு புகுந்து'பொன்னகர்
மூவகை உலகினும் அழகு முற்றுற
ஏவு'என இயற்றினன் கணத்தின் என்பரால்
தேவரும் மருள்கொளத் தயெ்வத் தச்சனே.         6.2.1

இலங்கையின் அமைதி நோக்கிய இராவணன் சினம் நீங்குதல்

6199.பொன்னினும் மணியினும் அமைந்த பொற்பு உடை
நல் நகர் நோக்கினான் நாக நோக்கினான்
'முன்னையின் அழகு உடைத்து'என்று மொய்கழல்
மன்னனும் உவந்து தன் முனிவு மாறினான்.         6.2.2

இலங்கையின் எழில் மிகுதிக்குக் காரணம்

6200. முழுப் பெருந்தனி முதல் உலகின் முந்தையோன்
எழில் குறிகாட்டி நின்று இயற்றி ஈந்தனன்
பழிப்பரும் உலகங்கள் எவையும் பல முறை
அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிது உண்டாகுமோ.         6.2.3

இராவணன் பிரமனைப் பூசித்தனுப்புதல்

6201. திருநகர் யாவையும் திருந்த நோக்கிய
பொரு கழல் இராவணன் அயற்குப் பூசனை
வரன்முறை இயற்றி'நீ வழிக் கொள்வாய்'என்றான்;
அரியன தச்சற்கும் உதவி ஆணையான்.         6.2.4

இராவணன் ஆலோசனை மண்டபத்தில் சிங்காதனத்தில் வீற்றிருத்தல்

6202. அவ்வழி ஆயிரம் ஆயிரம் அவிர்
செவ்வழிச் செம்மணித் தூண்கள் சேர்த்திய
எவ்வம் இல் மண்டபத்து அரிகள் எந்திய
வெவ்வழி ஆசனத்து இனிது மேவினான்.         6.2.5

இராவணன் அமைச்சர் முதலியோர் சூழ விளங்குதல்

6203. வரம்பு அறு சுற்றமும் மந்திரத் தொழில்
நிரம்பிய முதியரும் சேனை நீள் கடல்
தரம்பெறு தலைவரும் தழுவத் தோன்றினான்
அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான்.         6.2.6

இராவணன் ஆலோசனை மண்டபத்திலிருந்து முனிவர் முதலியோரைப் போக்குதல்

6204. 'முனைவரும் தேவரும் மற்றும் உற்றுேளார்
எனைவரும் தவிர்க'என ஏய ஆணையான்
புனைகுழல் மகளிரோடு இளைஞர்ப் போக்கினான்;
நினைவு உறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான்.         6.2.7

இராவணன் அமைச்சரோடு தங்குதல்

6205. 'பண்டிதர் பழையவர் கிழவர் பண்பினர்
தண்டலில் மந்திரத் தலைவர் சார்க எனக்
கொண்டு உடன் இருந்தனன்; கொற்ற ஆணையான்
வண்டொடு காலையும் வரவு மாற்றினான்.         6.2.8

சுற்றத்தாருள் மக்களும் தம்பியரும் அல்லாதாரை மண்டபத்தினின்று போக்குதல்

6206. ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண் தொழிற்கு
ஏன்றவர் நண்பினர் எனினும் யாரையும்
வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர்
போன்றவர் அல்லரைப் புறத்துப் போக்கினான்.         6.2.9

மந்திரம் நிகழும் மண்டபத்தின் காவல் மிகுதி

6207. திசை தொறும் நிறுவினன் உலகு சேரினும்
பிசைதொழில் மறவரை; பிறிது என் பேசுவ?
விசை உறு பறவையும் விலங்கும் வேற்றவும்
அசை தொழில் அஞ்சின; சித்திரத்தினே.         6.2.10

இராவணன் மந்திரக்கிழவரை நோக்கி வருந்தியுரைத்தல் (6208-6211)

6208. 'தாழ்ச்சி இங்கு இதனின்மேல் தருவது என்? இனி
மாட்சி ஓர் குரங்கினால் அழிதல் மாலைத்தே?
ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று'எனாச்
சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான்.         6.2.11

6209. சுட்டது குரங்கு; எரி சூறை ஆடிடக்
கெட்டது கொடிநகர்; கிளையும் நண்பரும்
பட்டனர்; பரிபவம் பரந்தது எங்கணும்;
இட்டது இவ் அரியணை இருந்தது என் உடல்.         6.2.12

6210. ஊறுகின்றன கிணறு உதிரம்; ஒள் நகர்
ஆறுகின்றில தழல்; அகிலும் நாவியும்
கூறும் மங்கையர் நறுங் கூந்தலின் சுறு
நாறுகின்றது; நுகர்ந்து இருந்தம் நாம் எலாம்.         6.2.13

6211. மற்று இலது ஆயினும்'மலைந்த வானரம்
இற்று இலது ஆகியது'என்னும் வார்த்தையும்
பெற்றிலம்; பிறந்திலம் என்னும் பேறு அலால்
முற்றுவது என் இனிப் பழியின் மூழ்கினோம்.         6.2.14

படைத்தலைவன் கூறுதல் (6212-6218)

6212. என்று அவன் இயம்பலும் எழுந்து இறைஞ்சினான்;
கன்றிய கருங்கழல் சேனை காவலன்
'ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள்'எனா
நின்றனன் நிகழ்த்தினன் புணர்ப்பு இல் நெஞ்சினான்.         6.2.15

6213. வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல்
பஞ்சின் நல் மெல் அடி மயிலைப் பற்றுதல்
அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அது
தஞ்சு என உணர்ந்திலை; உணரும் தன்மையோய்.         6.2.16

6214. கரன்முதல் வீரரைக் கொன்ற கள்வரை
விரிகுழல் உங்கை மூக்கு அரிந்த வீரரைப்
பரிபவம் செய்ஞ்ஞரைப் படுக்கலாது நீ அரசியல் அழிந்தது என்று அயர்திபோலுமால்.         6.2.17

6215. தண்டம் என்று ஒரு பொருட்கு உரிய தக்கரைக்
கண்டவர் பொறுப்பரோ? உலகம் காவலர்
வண்டு அமர் அலங்கலாய்! வணங்கி வாழ்வரோ?
விண்டவர் உறுவலி அடக்கும் வெம்மையோர்.         6.2.18

6216. செற்றனர் எதிர் எழும் தேவர் தானவர்
கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற
முற்றி மூன்று உலகுக்கும் முதல்வன் ஆயது
வெற்றியோ? பொறைகொலோ? விளம்ப வேண்டுமால்.         6.2.19

6217. விலங்கினர் உயிர்கெட விலங்கி மீள்கிலாது
இலங்கையின் இனிது இருந்து இன்பம் துய்த்துமேல்
குலம் கெழு காவல! குரங்கில் தங்குமோ?
உலங்கும் நம்மேல் வரவு ஒழிக்கல் பாலதோ?         6.2.20

6218. போயின குரங்கினைத் தொடர்ந்துபோய் அவண்
ஏயினர் உயிர்குடித்து எவ்வம் தீர்கிலம்;
வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல்
ஓயும் நம் வலி என உணரக் கூறினான்.         6.2.21

மகோதரன் கூறுதல் (6219-6224)

6219. மற்று அவன் பின் உற மகோதரப் பெயர்க்
கல்தடம் தோளினன் எரியும் கண்ணினான்
முற்று உற நோக்கினன் முடிவும் அன்னதால்
கொற்றவ கேள் என இனைய கூறினான்.         6.2.22

6220. தேவரும் அடங்கினர் இயக்கர் சிந்தினர்
தாஅரும் தானவர் தருக்குத் தாழ்ந்தனர்
யாவரும் இறைவர் என்று இறைஞ்சும் மேன்மையர்
மூவரும் ஒதுங்கினர் உனக்கு மொய்ம்பினோய்.         6.2.23

6221. ஏற்றம் என் பிறிது இனி? எவர்க்கும் இன்னுயிர்
மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை
கூற்றுவான் தன் உயிர் கொள்ளும் கூற்று எனத்
தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால்.         6.2.24

6222. வெள்ளி அம் கிரியினை விடையின் பாகனோடு
அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய்!
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள்வலிக்கு
எள்ளுதி போலும் நின் புயத்தை எம்மொடும்.         6.2.25

6223. மண்ணினும் வானினும் மற்றும் முற்றும் நின்
கண்ணினின் நீங்கினர் யாவர்? கண்டவர்
நண்ணரும் வலத்தினர் யாவர்? நாயக!
எண் இலர் இறந்தவர் எண்ணல் ஆவதோ?         6.2.26

6224. இடுக்கு இவண் இயம்புவது இல்லை; ஈண்டு எனை
விடுக்குவை ஆம் எனில் குரங்கை வேர் அறுத்து
ஒடுக்கரு மனிதரை உயிர் உண்டு உன் பகை
முடிக்குவென் யான்'என முடியக் கூறினான்.         6.2.27

வச்சிரதந்தன் கூறுதல் (6225-6227)

6225. இச் சிரத்தவன் உரைத்து இறுக்கும் எல்வையின்
வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறினான்
அச் சிரத்தைக்கு ஒரு பொருள் இன்று ஆயினும்
பச்சிரத்தம் பொழி பருதிக் கண்ணினான்.         6.2.28

6226. 'போய் இனி மனிசரைக் குரங்கைப் பூமியில்
தேயுமின் கைகளால் தின்மின்'என்று எமை
ஏயினை இருக்குவது அன்றி என் இனி
ஆயும் இது? எம் வயின் அயிர்ப்பு உண்டாம் கொலோ?         6.2.29

6227. எவ்உலகத்தும் நின் ஏவல் கேட்கிலாத்
தெவ்வினை அறுத்து உனக்கு அடிமை செய்த யான்
தவ்வின பணி உளதாகத்தான் கொலோ
இவ்வினை என்வயின் ஈகலாது என்றான்.         6.2.30

துன்முகன் சொல்லுதல் (6228-6234)

6228. 'நில் நில்'என்று அவன் தனை விலக்கி'நீ இவை
என்முனும் எளியர்போல் இறுத்தியோ?'எனா
மன்முகம் நோக்கினன் வணங்கி வன்மையால்
துன்முகன் என்பவன் இனைய சொல்லினான்.         6.2.31

6229. திக்கயம் வலி இல; தேவர் மெல்லியர்;
முக்கணான் கயிலையும் முரண் இன்றாயது;
மக்களும் குரங்குமே வலியவாம் எனின்
அக்கட! இராவணற்கு அமைந்த ஆற்றலே.         6.2.32

6230. பொலிவது பொது உற எண்ணும் புன்தொழில்
மெலியவர் கடன்; நமக்கு இறுதி வேண்டுவார்
வலியினர் எனின் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ
ஒலிகழல் ஒருவ! நம் உயிருக்கு அன்பினால்.         6.2.33

6231. கண்ணிய மந்திரக் கருமம் காவல!
மண்ணியல் மனிசரும் குரங்கும் மற்றும்; நாம்
உண்ணிய அமைந்தன உணவுக்கு உட்குமேல்
திண்ணிய அரக்கரில் தீரர் யாவரே.         6.2.34

6232. எரி உற மடுப்பதும் எதிர்ந்துேளார் படப்
பொரு தொழில் யாவையும் புரிந்து போவதும்
வருவதும் குரங்கு; நம் வாழ்க்கை ஊர் கடந்து
அரிதுகொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல்?         6.2.35

6233. வந்து நம் இருக்கையும் அரணும் வன்மையும்
வெம் தொழில் தானையின் விரிவும் வீரமும்
சிந்தையின் உணர்பவர் யாவரே சிலர்
உய்ந்து தம் உயிர் கொடு இவ் உலகத்துள் உளார்.         6.2.36

6234. ஒல்வது நினையினும் உறுதி ஓரினும்
வெல்வது விரும்பினும் வினையம் வேண்டினும்
செல்வது அங்கு; அவர் உழை சென்று தீர்ந்து அறக்
கொல்வது கருமம் என்று உணரக் கூறினான்.         6.2.37

மகா பார்சுவன் கூறுதல் (6235-6238)

6235. காவலன் கண் எதிர் அவனைக் கை கவித்து
'யாவது உண்டு; இனி நமக்கு? என்னச் சொல்லினான்
'கோவமும் வன்மையும் குரங்குக்கே'எனா
மா பெரும் பக்கன் என்று ஒருவன் வன்மையான்.         6.2.38

6236. முந்தினர் முரண் இலர் சிலவர் மொய் அமர்
நந்தினர் தம்மொடு நனி நடந்ததோ?
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால்
வெந்ததோ? இலங்கையோடு அரக்கர் வெம்மையும்.         6.2.39

6237. மானிடர் ஏவுவார் குரங்கு வந்து இவ் ஊர்
தான் எரிமடுப்பது நிருதர் தானையே
ஆனவர் அது குறித்து அழுங்குவார்
மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ?         6.2.40

6238. நின்று நின்று இவை சில விளம்ப நேர்கிலன்
'நன்று இனி நரரொடு குரங்கை நாம் அறக்
கொன்று தின்று அல்லது ஓர் எண்ணம் கூடுமோ?
என்றனன்; இகல் குறித்து எரியும் கண்ணினான்.         6.2.41

பிசாசன் பேசுதல்

6239. 'திசாதிசை போதும் நாம்; அரசன் செய்வினை
உசாவினன் உட்கினன்; ஒழிதும் வாழ்வு'என்றான்;
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய்கழல்
நிசாசரன் உருப் புணர் நெருப்பின் நீர்மையான்.         6.2.42

சூரியசத்துரு சொல்லுதல்
6240. 'ஆரியன் தன்மை ஈது ஆயின் ஆய்வு உறு
காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால்
சீரியர் மனிதரே; சிறியம் யாம்'எனச்
சூரியன் பகைஞன் என்று ஒருவன் சொல்லினான்.         6.2.43

வேள்வியின் பகைவன் விளம்புதல்

6241. 'ஆள் வினை நிலைமையும் அரக்கர் ஆற்றலும்
தாழ்வினை இதனின் மேல் பகரத் தக்கதோ
சூழ்வினை மனிதரால் தோன்றிற்று ஆம்'என
வேள்வியின் பகைஞனும் உரைத்து வெள்கினான்.         6.2.44

புகைநிறக் கண்ணன் புகலுதல்

6242. 'தொகை நிறக் குரங்கு உடை மனிதர்ச் சொல்லி என்?
சிகைநிறச் சூலிதன் திறத்துச் செல்லினும்
தகை நிறத்து எண்ணலன்; சமைதல் நன்று'எனாப்
புகைநிறக் கண்ணனும் புகன்று பொங்கினான்         6.2.45

மற்றையோர் கூறுதல்

6243. மற்று அவன்பின் உற மற்றையோர்களும்
'இற்று இதுவே நலம்; எண்ண மற்று இல்'என்று
உற்றன உற்றன உரைப்ப தாயினார்
புற்று உறை அரவு எனப் புழுங்கும் நெஞ்சினார்.         6.2.46

கும்பகருணன் கூறுதல் (6244-6253)

6244. வெம்பு இகல் அரக்கரை விலக்கி'வினை தேரா
நம்பியர் இருக்க'என நாயகனை முன்னா
'எம்பி எனகிற்கில் உரை செய்வல் இதம்'என்னாக்
கும்பகருணப் பெயரினான் இவை குறித்தான்.         6.2.47

6245. நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்
ஆயிரம் மறை பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்;
தீவினை நயப்பு உறுதல் செய்தனை; தெரிந்தால்
ஏ! இனம் உறத்தகைய இ துணையவேயோ.         6.2.48

6246. ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய்;
கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன்
தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ?
பாவியர் உறும்பழி இதின் பழியும் உண்டோ.         6.2.49

6247. நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால்
உன் உயிர் எனத் தகைய தேவியர்கள் உன்மேல்
இன் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள்
பொன் அடி தொழத் தொழ மறுத்தல் புகழ்போலாம்.         6.2.50

6248. என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய்
வன் தொழிலினாய் முறை துறந்து சிறை வைத்தாய்
அன்று ஒழிவது ஆயின அரக்கர் புகழ்; ஐயா!
புன்தொழிலின் நாம் இசை பொறுத்தல் புலமைத்தோ!         6.2.51

6249. ஆசு இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம்
மாசு இல் புகழ் காதல் உறுவேம்; வளமை கூரப்
பேசுவது வீரம் இடை பேணுவது காமம்;
கூசுவது மானிடரை; நன்று நம கொற்றம்.         6.2.52

6250. சிட்டர் செயல் செய்திலை; குலச்சிறுமை செய்தாய்;
மட்டு அவிழ் மலர்க் குழலினாளை இனி மன்னா!
விட்டிடுது மேல் எளிய மாதும்; அவர் வெல்லப்
பட்டிடுது மேல் அதுவும் நன்று; பழி அன்றால்.         6.2.53

6251. 'மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால்
கரன் படை படுத்து அவனை வென்று களைகட்டான்;
நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்பால்
உரம் படுவதே; இதனின்மேல் உறுதி உண்டோ?'         6.2.54

6252. வென்றிடுவர் மானிடவரேனும் அவர் தம்மேல்
நின்று இடைவிடாது நெறிசென்று உற நெருக்கித்
தின்றிடுதல் செய்கிலம் எனின் செறுநரோடும்
ஒன்றிடுவர் தேவர்; உலகு ஏழும் உடன் ஒன்றாம்.         6.2.55

6253. 'ஊறு படை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே
ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம்
வேறு பெயராதவகை வேரோடும் அடங்க
நூறுவதுவே கருமம்'என்பது நுவன்றான்.         6.2.56

இராவணன் கும்பகருணன் கூறியதற்கு இசைந்து கூறுதல்

6254. நன்று உரை செய்தாய்! குமர! நான் அது நினைந்தேன்;
ஒன்றும் இனி ஆய்தல் பழுது; ஒன்னலரை எல்லாம்
கொன்று பெயர்வோம்; நம கொடிப் படையை எல்லாம்
'இன்று எழுக என்க'என இராவணன் இசைத்தான்.         6.2.57

இந்திரசித்து இராவணனைத் தடுத்து யானே சென்று
பகைவென்று வருவேன் எனல் (6255-6261)

6255. என்று அவன் இயம்பியிடும் எல்லையினில்'வல்லே
சென்று படையோடு சிறு மானிடர் சினப்போர்
வென்று பெயர்வாய் அரச! நீ கொல்? என வீரம்
நன்று பெரிது'என்று மகன் நக்கு இவை நவின்றான்.         6.2.58

6256. ஈசன் அருள் செய்தனவும் ஏடு அவிழ் மலர்ப் பேர்
ஆசனம் உவந்தவன் அளித்தனவும் ஆய
பாசம் முதல் வெம்படை சுமந்து பலர் நின்றார்;
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ.         6.2.59

6257. 'முற்றும் முதலாய் உலகம் மூன்றும் எதிர் தோன்றிச்
செற்ற முதலோரோடு செறுத்தது ஓர் திறத்தும்
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின் என்னைப்
பெற்றுமிலை; யான் நெறி பிறந்தும் இலென்'என்றான்.         6.2.60

6258. குரங்கு பட மேதினி குறைத்தலை படப் போர்
அரங்கு பட மானிடர் அலந்தலை படப் பேர்
இரங்கு படர் சீதை பட இன்று இருவர் நின்றார்
சிரம் குவடு எனக் கொணர்தல் காணுதி சினத்தோய்!         6.2.61

6259. சொல் இடை கழிக்கில சுருங்கிய குரங்கு என்
கல் இடை கிழிக்கும் உருமின் கடுமை காணும்
வில் இடை கிழித்த மிடல்வாளி வெருவித் தம்
பல் இடை கிழித்து இரிவ கண்டு பயன் உய்ப்பாய்.         6.2.62

6260. யானை இலர் தேர் புரவி யாதும் இலர்; ஏவும்
தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாம் ஓர்
கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்;
ஆனவரும் மானிடர் நம் ஆண்மை இனிது அன்றோ!         6.2.63

6261. நீரும் நிலனும் நெடிய காலும் நிமிர் வானும்
பேர் உலகு யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே
யாரும் ஒழியாமல் நரர் வானரர்கள் என்பார்
வேரும் ஒழியாதவகை கொன்று அலது மீளேன்.         6.2.64

இந்திரசித்து கூறியது கேட்டு வீடணன் சினந்து விளம்புதல் (6262-6268)

6262. என்று அடி இறைஞ்சினன் எழுந்து'விடை ஈமோ
வன் தொழிலினாய்'! எனலும் வாள் எயிறு வாயில்
தின்றனன் முனிந்து நனி தீவினையை எல்லாம்
வென்றவரின் நன்று உணரும் வீடணன் விளம்பும்.         6.2.65

6263. நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினர்
போலுமால் உறு பொருள் புகலும் பூட்சியோர்
காலம் மேல் விளைபொருள் உணரும் கற்பு இலாப்
பாலன் நீ இனையன பகரற் பாலையோ.         6.2.66

6264. கருத்து இலான் கண் இலான் ஒருவன் கைக்கொடு
திருத்துவான் சித்திரம் அனைய செப்புவாய்
விருத்த மேதகையவர் வினைய மந்திரத்து
இருத்தியோ? இளமையால் முறைமை எண்ணலாய்.         6.2.67

6265. தூயவர் முறைமையே தொடங்கும் தொன்மையோர்
ஆயவர் நிற்க; மற்று அவுணர் ஆதியாம்
தீயவர் அறத்தினால் தேவர் ஆயது
மாயமோ? வஞ்சமோ? வன்மையே கொலோ?         6.2.68

6266. அறம் துறந்து அமரரை வென்ற ஆண் தொழில்
திறம் தெரிந்திடின் அது தானும் செய்தவம்
நிறம் திறம்பாவகை இயற்றும் நீர்மையால்
மறம் துறந்தவர் தரும் வரத்தின் வன்மையால்.         6.2.69

6267. மூவரை வென்று மூன்று உலகும் முற்றுறக்
காவலின் நின்று தம் களிப்புக் கைம் மிக
வீவது முடிவு என வீந்தது அல்லது
தேவரை வென்றவர் யாவர்? தீமையோர்!         6.2.70

6268. வினைகளை வென்று மேல் வீடு கண்டவர்
எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையால்
முனைவரும் அமரரும் முன்னும் பின்னரும்
அனையவர் திறத்துளர் யாவர்? ஆற்றினார்.         6.2.71

வீடணன் இராவணனை நோக்கிக் கூறுதல் (6269-6296)

6269. 'பிள்ளைமை விளம்பினை பேதை நீ'என
ஒள்ளிய புதல்வனை உரப்பி'என் உரை
எள்ளலை ஆம் எனின் இயம்பல் ஆற்றுவென்
தெள்ளிய பொருள்;'என அரசற் செப்பினான்.         6.2.72

6270. எந்தை நீ யாவும் நீ எம் முன் நீ தவம்
வந்தனைத் தயெ்வம் நீ மற்றும் முற்றும் நீ
இந்திரப் பெரும்பதம் இழக்கின்றாய் என
நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன்.         6.2.73

6271. கற்று உறும் மாட்சி என்கண் இன்று ஆயினும்
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும்
சொற்றுறு சூழ்ச்சியின் துணிவு சோரினும்
முற்றுறக் கேட்டபின் முனிதி மொய்ம்பினோய்!         6.2.74

6272. கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
யானவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ? 75

6273. எண் பொருட்டு ஒன்றி நின்று, எவரும் எண்ணினால்
'விண் பொருட்டு ஒன்றிய உயர்வும் மீட்சியும்
பெண் பொருட்டு'அன்றியும், பிறிது உண்டாம் எனின்
மண் பொருட்டு, அன்றியும் வரவும் வல்லவோ?         6.2.76

6274. மீன் உடை நெடுங்கடல் இலங்கை வேந்தன் முன்
தான் உடை நெடுந்தவம் தளர்ந்து சாய்வது, ஓர்
மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி
தேன் உடை அலங்கலாய்! இன்று தீர்ந்ததோ         6.2.77

6275. ஏறிய நெடுந்தவம் இழைத்த எல்லை நாள்
ஆறிய பெருங்குணத்து அறிவன் ஆணையால்
கூறிய மனிதர்பால் கொற்றம் கொள்ளலை;
வேறு இனி அவர் வயின் வென்றி ஆவதோ?         6.2.78

6276. ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ?
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்துவாய்
ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை
மேயினை ஆம் எனின் விளம்ப வேண்டுமோ?         6.2.79

6277. 'மேல் உயர் கயிலையை எடுத்த மேலை நாள்
நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்
கூல வான் குரங்கினால் குறுகும் கோளது வாலிபால் கண்டனம்; வரம்பு இல் ஆற்றலாய்'         6.2.80

6278. தீ இடைக் குளித்த அத் தயெ்வக் கற்பினாள்
வாய் இடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ?
'நோய் உனக்கு யான்'என நுவன்றுளாள் அவள்
ஆயவள் சீதை பண்டு அமுதில் தோன்றினாள்.         6.2.81

6279. சம்பரப் பெயர் உடைத் தானவர்க்கு இறைவனைத் தனு வலத்தால்
அம்பரத்து உம்பர் புக்கு அமரிடைத் தலை துமித்து அமரர் உய்ய
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி
இம்பரில் பணி செயத் தயரதப் பெயரினான் இசை வளர்த்தான்.         6.2.82

6280. மிடல் படைத்து ஒருவனாய் அமரர் கோன் விடையதாய் வெரிநின் மேலாய்
உடல் படைத்து, அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும்
அடல் படைத்து அவனியைப் பெருவளம் தருக என்று அருளினானும்
கடல் படைத்தவர் நெடுங் கங்கை தந்தவன் வழிக் கடவுள் மன்னன்.         6.2.83

6281. பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம் அறப் பொருது தன்வேல்
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான்
மை உரைத்து உலவு கண் மனைவிபால் வரம் அளித்தவை மறாதே
மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான்.         6.2.84

6282. அனையவன் சிறுவர் எம்பெரும! உன் பகைஞர், அன்னவரை அம்மா!
இனையர் என்று உணர்தியேல், இருவரும் ஒருவரும் எதிர் இலாதார்;
முனைவரும் அமரரும் முழுதுணர்ந் தவர்களும் முற்றும் மற்றும்
நினைவருந் தகையர்; நம் வினையினால் மனிதராய் எளிதின் நின்றார்.         6.2.85

6283. கோசிகப் பெயர் உடைக் குல முனித் தலைவன் அக் குளிர் மலர்ப் பேர்
ஆசனத் தவனொடு எவ் உலகமும் தருவன் என்று அமையலுற்றான்
ஈசனில் பெறு படைக்கலம் இமைப் பளவின் எவ் உலகும் யாவும்
நாசம் உற்றிட நடப்பன கொடுத்தவை பிடித்துடையர் நம்பா!         6.2.86

6284. எறுழ்வலிப் பொருவில் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து,
உறுதிறல் கலுழன்மீது ஒருவன் நின்று அமர் செய்தான் உடைய வில்லும்,
தறெு சினத்தவர்கள் முப்புரம் நெருப்பு , உருத்து எய்த அம்பும்
குறுமுனிப் பெயரினான் நிறைதவர்க்கு இறை தரக் கொண்டு நின்றான்.         6.2.87

6285. நாவினால் உலகை நக்கிடுவ; திக்கு அளவிடற்கு உரிய; நாளும்
மேவு தீவிடம் உயிர்ப்பன; வெயில் பொழி எயிற்றன; அவ் வீரர்
ஆவமாம் அரிய புற்று உறைவ; முற்று அறிவருக்கு அழிவு செய்யும்
பாவ காரியர் உயிர்ப் பதம் அலாது இரை பெறா; பகழி நாகம்.         6.2.88

6286. பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது; இவ் பெரியவேனும்
நாரும் மூரியும் அறா; நம்முடைச் சிலைகள் போல் நலிவவாமோ?
தாருவோ? வேணுவோ? தாணுவாய் உலகினைத் தழுவி நிற்கும்
மேருவோ மால்வரைக் குலமெலாம் அல்லவோ? வில்லு மன்னோ.         6.2.89

6287. உரம் ஒருங்கியது நீர்கடையும் வாலியது மார்பு; உலகை மூடும்
மரம் ஒருங்கிய, கர ஆதியர் விராதனது மால் வரைகள் மானும்
சிரம் ஒருங்கின; இனிச் செரு ஒருங் குளது எனில் தெவ்வர் என்பார்
பரம் ஒருங்குவது அலால் பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ?         6.2.90

6288. சொல் வரம் பெரிய மா முனிவர் என்பவர்கள், தம் துணை இலாதார்
ஒல்வரம் பெரிய தோள் இருவரே அமரரோடு உலகம் யாவும்
வெல்வர் என்பது தெரிந்து எண்ணினார்; நிருதர் வேர் முதலும் வீயக்
கொல்வர் என்று உணர்தலால், அவரை வந்து அணைவது ஓர் இசைவு கொண்டார்.         6.2.91

6289. துஞ்சுகின்றிலர்களால் இரவும் நன்பகலும், நிற் சொல்ல ஒல்கி
நெஞ்சு நின்று அயரும் இந் நிருதர்;
'பேர் சனகியாம் நெடியது ஆய
நஞ்சு தின்றவர்கள் தாம் நண்ணுவார் நரகம்'என்று, எண்ணி, நம்மை
அஞ்சுகின்றிலர்கள், நின் அருள் அலால் சரண் இலா அமரர்; ஐயா!         6.2.92

6290. புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறுமை கூர
நகல் மதிக்கில, மறுப்பொலிய வாள் ஒளி இழந்து உதயம் நண்ணும்
பகல் மதிக்கு உவமை ஆயின எலாம் இரவு கால் பருவ நாளின்
அகல் மதிக்கு உவமையாயின தபோதனர் உளார் வதனம் அம்மா!         6.2.93

6291. சிந்து முந்து உலகினுக்கு இறுதி புக்கு உரு ஒளித்து உழல்தல் செய்வார்
இந்துவின் திருமுகத்து இறைவி நம் உறையுளாள் என்றலோடும்
அந்தகன் முதலினோர் அமரரும் முனிவரும் பிறரும் அஞ்சார்
வந்துதம் உலகமும் வானமும் கண்டு உவந்து அகல்வர் மன்னோ.         6.2.94

6292. சொலத் தகாத் துன் நிமித்தங்கள் எங்கணும் வரத்தொடர்வ; ஒன்னார்
வெலத்தகா அமரரும் அவுணரும் செருவில் விட்டன விடாத
குலத்தகால் வய நெடும் குதிரையும் அதிர்குரல் குன்றும் இன்றும்
வலத்த கால் முந்துறத் தந்து, நம் மனை இடைப் புகுதும் மன்னோ!         6.2.95

6293. வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார் நிருதர்; வைகும்
பேயினும் பெரிது பேய் நரிகளும் புரிதரும்; பிறவும் எண்ணின்
கோயிலும் நகரமும் மடநலார் குழலும் நம் குஞ்சியோடும்
தீயின் வெந்திடும்; அலால், ஒரு நிமித்தம் பெறும் திறனும் உண்டோ?         6.2.96

6294. சிந்த மா நாகரைச் செரு முருக்கிய கரன், திரிசிரத்தோன்,
முந்தமான் ஆயினான், வாலியே முதலினோர் முடிவு கண்டால்,
அந்த மான் இடவனோடு ஆழிமா வலவனும் பிறரும், ஐயா!
இந்த மானிடவராம் இருவரோடு எண்ணலாம் ஒருவர் யாரே?         6.2.97

6295. இன்னம் ஒன்று உரைசெய்வான்,'இனிதுகேள், எம்பிரான்! இருவர் ஆய
அன்னவர் தம்மொடும் வானரத் தலைவராய் அணுகி நின்றார்,
மன்னும் நம் பகைஞராம் வான் உேளார்; அவரோடும் மாறுகோடல்
கன்னம் அன்று;'இது நமக்கு உறுதி'என்று உணர்தலும் கருமம் அன்றால். 98

6296. இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச
வசையும் கீழ்மையும் மீக்கொளக் கிளையொடும் மடியாது
அசைவில் கற்பின் அவ் அணங்கை விட்டு அருளுதி இதன்மேல்
விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான்.         6.2.99

இராவணன் வீடணனைப் பரிகசித்துரைத்தல் (6297-6306)

6297. கேட்ட ஆண்தகை, கரத்தொடு கரதலம் கிடைப்பப்
பூட்டி, வாய்தொறும் பிறை குலம் வெண்ணிலாப் பொழிய,
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும்
தோள் தடங்களும் குலுங்க நக்கு, இவை இவை சொன்னான்.         6.2.100

6298. இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென் என்றாய்!
பிச்சர் சொல்லுவ சொல்லினை; என் பெரு விறலைக்
கொச்சை மானிடர் வெல்குவர் என்றனை; குறித்தது
அச்சமோ? அவர்க்கு அன்பினோ? யாவதோ? ஐயா!         6.2.101

6299. "'ஈங்கு மானிடப் பசுக்களுக்கு இலை வரம்" என்றாய்
தீங்கு சொலினை; திசைகளை உலகொடும் செருக்கால்
தாங்கும் ஆனையைத் தள்ளி, அத்தழல் நிறத்தவனை
ஓங்கல் தன்னொடும் எடுக்கவும் வரம் கொண்டது உண்டோ?'         6.2.102

6300. மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை; வானோர்
சினக் கொடும் படை செருக்களத்து என்னை என் செய்த?
எனக்கு நிற்க; மற்று என்னொடு இங்கு ஒருவயிற்று உதித்த
உனக்கு மானிடர் வலியராம் தகைமையும் உளதோ?         6.2.103

6301. சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை; பன் முறை தோற்றும்
வெல்லும் ஆற்றலும், ஒருமுறை பொறுத்தனன்; விண்ணைக்
கல்லும் ஆற்றல் என் கிளையையும் என்னையும் களத்தில்
கொல்லும் மாற்றலர் உளர் எனக் கோடலும் கோேளா?         6.2.104

6302. தேவரின் பெற்ற வரத்தினது என் பெருஞ் செருக்கேல்
மூவரில் பெற்றம் உடையவன் தன்னொடு முழுதும்
காவலின் பெற்ற திகிரியோன் தன்னையும் கடந்தது
ஏவரில் பெற்ற வரத்தினால்? இயம்புதி இளையோய்!         6.2.105

6303. நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின், நம்பால்
வந்த சாபங்கள் எனைப்பல; அவை செய்த வலி என்?
இந்தியாதிகள் அவித்தவர் தேவர் நம் இறுதி
சிந்தியாதவர் யார்? அவை நம்மை என் செய்த?         6.2.106

6304. அரங்கில் ஆடுவாற்கு அன்பு பூண்டு உடை வரம் அறியேன்,
இரங்கி யான் நிற்ப, என்வலி அவன்வயின் எய்த,
வரம் கொள் வாலிபால் தோற்றனென்; மற்றும் வேறு உள்ள
குரங்கெலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி?         6.2.107

6305. நீல கண்டனும் நேமியும் நேர்நின்று நேரின்,
ஏவலும் அன்னவர் உடைவலி அவன்வயின் எய்தும்;
சாலும் நல்வரம் நினைந்து, அவன் எதிர்செலல் தவிர்ந்து,
வாலி தன்னை அம் மனிதனும் மறைந்துநின்று எய்தான்.         6.2.108

6306. ஊன வில் இறுத்து, ஓட்டை மாமரத்துள் அம்பு ஓட்டிக்
கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி,
யான் இழைத்திட இல் இழந்து இன் உயிர் சுமக்கும்
மானிடன் வலி நீ அலாது ஆர் உளர்? மதித்தார்.         6.2.109

வீடணன் மீட்டும் உறுதியுரைத்தல் (6307-6308)

6307. என்று தன் உரை இழித்து,'நீ உணர்விலி'என்னா
'நன்று, போதும் நாம்; எழுக'எனும் அரக்கனை நணுகா,
'ஒன்று கேள் இனம் உறுதி'என்று அன்பினன் ஒழியான்
துன்று தாரவன், பின்னரும் இனையன சொன்னான்.         6.2.110

6308. தன்னின் முன்னிய பொருள் இலா ஒருதனித் தலைவன்
அன்ன மானிடன் ஆகிவந்து, அவதரித்து அமைந்தான்
சொன்ன நம்பொருட்டு உம்பர்தம் சூழ்ச்சியின் துணிவால்
இன்னம் ஏகுதிபோலும் என்று அடி தொழுது இரந்தான்.         6.2.111

இராவணன் மீட்டும், வீடணன் கூறியதை மறுத்துரைத்தல் (6309-6314)

6309. அச் சொல் கேட்டு அவன், ஆழியான் என்றனை ஆயின்
கொச்சைத் துன்மதி எத்தனை போர் இடைக் குறைந்தான்
இச்சைக்கு ஏற்றன யான் செய்த இத்தனை காலம்
முச்சு அற்றான் கொல் அம் முழு முதலோன் என முனிந்தான்.         6.2.112

6310. இந்திரன் தனை இருஞ்சிறை இட்டநாள், இமையோர்
தந்தி கோடு இறத் தகர்த்த நாள், தன்னை யான் முன்னம்
வந்த போர்தொறும் துரந்த நாள், வானவர் உலகைச்
சிந்த வென்ற நாள் சிறியன்கொல்? நீ சொன்ன தேவன்.         6.2.113

6311. சிவனும் நான்முகத்து ஒருவனும் திருநெடு மாலாம்
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்கப்
புவனம் மூன்றும் நான் ஆண்டு உளது ஆண்ட அப் பொருவில்
உவன் இலாமையிலோ? வலி ஒதுங்கியோ? உரையாய்.         6.2.114

6312. ஆயிரம் பெருந்தோள்களும், அத்துணைத் தலையும்,
மாயிரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும்,
தீய; சாலவும் சிறிது; என நினைந்து, நாம் தின்னும்
ஓயும் மானிட உருவு கொண்டனன் கொலாம்! ஒருவன்.         6.2.115

6313. பித்தன் ஆகிய ஈசனும் மாலும் என் பெயர் கேட்டு
எய்த்த சிந்தையர்; ஏகுழி ஏகுழி எல்லாம்
கைத்த ஏற்றினும் கடவிய புள்ளினும் முதுகில்
தைத்த வாளிகள் நின்று உள; குன்றின் வீழ் தடித்து இன். 116

6314. 'வெம் சினம் தரு போரில் என்னுடன் எழ வேண்டா;
இஞ்சி மா நகர் இடம் உடைத்து, ஈண்டு இனிது இருத்தி;
அஞ்சல்! அஞ்சல்!'என்று அயல் இருந்தவர் முகம் நோக்கி
நஞ்சின் வெய்யவன், கை எறிந்து, உரும் என நக்கான்.         6.2.117

வீடணன் மீட்டும் கூறுதல்
6315. பின்னும் வீடணன், ஐய! நின் தரம் அலாப் பெரியோர்
முன்னை நாள், இவன் முனிந்திடக் கிளையொடு முடிந்தார்
இன்னம் உண்டு, நான் இயம்புவது, இரணியன் என்பான்
தன்னை உள்ளவா கேட்டி என்று உரைசெயச் சமைந்தான்.         6.2.118
------------------------

6.3 இரணியன் வதைப் படலம் ( 6316 - 6491)

இரணியனது இயல்பும் ஆற்றலும் (6316-6333)

6316. வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே ஈந்தான்;
போதம் கண்ணிய வரம் அவன் தரக் கொண்டு போந்தான்;
காதும் கண்ணுதல், மால், அயன், கடைமுறை காணாப்
பூதம் கண்ணிய வலி எலாம் ஒருதனி பொறுத்தான்.         6.3.1

6317. 'எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும், அயனும்,
கற்றை அம் சடைக் கடவுளும் காத்து, அளித்து, அழிக்கும்
ஒற்றை அண்டத்தின் அளவனோ? அதன்புறத்து உலவா
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான்.         6.3.2

6318. 'பாழி வன் தடம் திசை சுமந்து ஓங்கிய பணைக்கைப்
பூழி வன்கரி இரண்டு இருகை கொடு பொருத்தும்;
ஆழம் காணுதற்கு அரியவாய், அகன்ற பேர் ஆழி
ஏழும் தன் இருதாள் அளவு எனக் கடந்து ஏறும்.         6.3.3

6319. 'வண்டல் தணெ்திரை ஆற்றுநீர் சில என்று மருவான்;
கொண்டல் கொண்டநீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான்;
பண்டைத் தணெ்திரைப் பரவை நீர் உவர் என்று படியான்;
அண்டத்தைப் பொதுத்து அப்புறத்து அப்புனல் ஆடும்.         6.3.4

6320. சாரும் மானத்தில், சந்திரன் தனிப்பதம் சரிக்கும்;
தேரின் மேவி நின்று இரவிதன் பெரும்பதம் செலுத்தும்;
பேரின் எண்திசைக் காவலர் கருமமும் பிடிக்கும்;
மேரு மால்வரை உச்சிமேல் அரசு வீற்றிருக்கும்.         6.3.5

6321. 'நிலனும், நீரும், வெங் கனலொடு காலும் ஆய், நிமிர்ந்த
தலனுள், நீடிய அவற்றின் அத் தலைவரை மாற்றி,
உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய், உலகின்
வலியும் செய்கையும் வருணன்தன் கருமமும் ஆற்றும்.         6.3.6

6322. 'தாமரைக் கண்ணன் தழல் கண்ணன் பேர் அவை தவிர,
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில,
தூம வெங் கனல் அந்தணர் முதலினர் சொரிந்த
ஓம வேள்வியுள் இமையவர் பேறு எலாம் உண்ணும்.         6.3.7

6323. 'காவல், காட்டுதல், துடைத்தல், என்று இத்தொழில் கடவ
மூவரும் அவை முடிக்கிலர், பிடிக்கிலர் முறைமை;
ஏவர் மற்றவர்? யோக்கியர் உறுபதம் இழந்தார்;
தேவரும் அவன் தாள் அலால் அருச்சனை செய்யார்.         6.3.8

6324. 'மரபின், மாபெரும் புறக்கடல் மஞ்சனம் மருவி,
அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி,
பரவும் இந்திரன் பதியிடைப் பகல்பொழுது அகற்றி
இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்.         6.3.9

6325. 'பண்டு வானவர் தானவர் யாவரும் பற்றித்,
தணெ் திரைக் கடல் கடைதர, வலியது தேடிக்
கொண்ட மத்தினைக் கொற்றத் தன் குவவுத் தோட்கு அமைந்த
தண்டு எனக் கொளல் உற்று,'அது நொய்து'எனத் தவிர்ந்தான்.         6.3.10

6326. 'மண்டலம் தரு கதிரவன் வந்து போய் மறையும்
எண் தலம் தொடற்கு அரியன தடவரை இரண்டும்,
கண் தலம் பசும் பொன்னவன் முன்னவன் காதில்
குண்டலங்கள்; மற்று என், இனிப் பெருவிறல் கூறல்?         6.3.11

6327. 'மருக்கொள் தாமரை நான்முகன் முதலிய வானோர்
குருக்கேளாடு கற்று, ஓதுவது, அவன் பெருங் கொற்றம்;
சுருக்கு இல் நான்மறை தொன்றுதொட்டு உரைதொறும் தோன்றாது
இருக்கும் தயெ்வமும்'இரணியனே! நம!'என்னும்.         6.3.12

6328. 'மயரும், மன் நெடுஞ் சேவடி மண் இடை வைப்பின்;
அயரும், வாள் எயிற்று ஆயிரம் பணம் தலை அநந்தன்;
உயருமேல், அண்ட முகடு தன்முடி உற உயரும்;
பெயருமேல், நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும்.         6.3.13

6329. 'பெண்ணின், பேர் எழில் ஆணினின், அலியினின், பிறிதின்,
உள் நிற்கும் உயிர் உள்ளதின், இல்லதின், உலவான்;
கண்ணின் காண்பன, கருதுவ, யாவினும் கழியான்;
மண்ணின் சாகிலன், வானினும் சாகிலன்; வரத்தால்.         6.3.14

6330. 'தேவர் ஆயினர் ஏவரும் திரிதரும் இயக்கர்
யாவர் ஆயினும் எண்ணவும் துதிக்கவும் இயன்ற
கோவை மால் அயன் மான் இடன் யாவரும் கொல்ல
ஆவி தீர்கிலன்; ஆற்றலும் தீர்கிலன் அனையான்.         6.3.15

6331. 'நீரின் சாகிலன்; நெருப்பினும் சாகிலன்; நிமிர்ந்த
மாருதத்தினும், மண்ணின் மற்று எவற்றினும், மாளான்;
ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்பச்
சாரும் சாபமும், அன்னவன் தனைச் சென்று சாரா.         6.3.16

6332. 'உள்ளில் சாகிலன்; புறத்தினும் உலக்கிலன்; உலவாக்
கொள்ளைத் தயெ்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா;
நள்ளில் சாகிலன்; பகலிடைச் சாகிலன்; நமனார்
கொள்ளச் சாகிலன்; ஆர் இனி அவன் உயிர் கொள்வார்?         6.3.17

6333. 'பூதம் ஐந்தொடும் பொருந்திய உணர்வினில் புணரா
வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான்;
தாதை தன்னைத்தான் தனிக்கொலை சூழினும் சாகான்;
ஈது அவன் நிலை; எவ் உலகங்கட்கும் இறைவன்.         6.3.18

இரணியன் மகன் பிரகலாதன் தன்மை

6334. 'ஆயவன் தனக்கு அருமகன், அறிஞரின் அறிஞர்ன்,
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயன்,
நாயகன் தனி ஞானி, நல் அறத்துக்கு நாதன்,
தாயினி மன்னுயிர்க்கு அன்பினன், உளன் ஒரு தக்கோன்.         6.3.19

இரணியன் தன் மகனை வேதம் ஓதுமாறு பணித்தல்
6335. 'வாழியான் அவன்தனைக் கண்டு மனம் மகிழ்ந்து உருகி,
"ஆழி ஐய! நீ அறிதியால் மறை" என அறைந்தான்
ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான், உலகம்
ஏழும் ஏழும் வந்து அடிதொழ, அரசு வீற்றிருந்தான்.         6.3.20

இரணியனது ஏவலால் அந்தணன் ஒருவன் பிரகலாதனுக்கு வேதம் ஓதுவிக்கத் தொடங்குதல்

6336. 'என்று, ஓர் அந்தணன் எல்லையில், அறிஞனை ஏவி,
"நன்று நீ இவற்கு உதவுதி மறை" என நவின்றான்.
சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான்;
அன்று நான்மறை முதலிய ஓதுவான் அமைந்தான்.         6.3.21

ஆசிரியன்'இரணியாயநம'என்று கூறுமாறு பணிக்கப் பிரகலாதன்'ஓம் நமோநாராயணாய'என்று கூறுதல்

6337. 'ஓதம் புக்கு, அவன்,"உந்தை பேர் உரை" எனலோடும்,
போதத் தன் செவித்தொளை இரு கைகளால பொத்தி,
"மூதக்கோய்! இது நல்தவம் அன்று" என மொழியா,
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் பெயரினை விரித்தான்.         6.3.22

பிரகலாதனது திருமால் பத்தியைக் கண்டு ஆசிரியன் அஞ்சி நடுங்கி அவனைக் கடிந்துரைத்தல் (6338-6339)

6338. "ஓம் நமோ நாராயணாய!" என்று உரைத்து, உளம் உருகி,
தான் அமைந்து, இரு தடக்கையும் தலையின்மேல் தாங்கி,
பூ நிறக் கண்கள் புனல் உக, மயிர் புறம் பொடிப்ப,
ஞான நாயகன் இருந்தனன்; அந்தணன் நடுங்கி.         6.3.23

6339. "கெடுத்து ஒழிந்தனை, என்னையும் உன்னையும்; கெடுவாய்!
படுத்து ஒழிந்தனை; பாவி! எத்தேவரும் பகர்தற்கு
அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர, நின் அறிவின்
எடுத்தது என் இது? என் செய்த வண்ணம் நீ?''என்றான்.         6.3.24

பிரகலாதன் குருவுக்கு ஏற்ற மறுமொழி கூறுதல்

6340. "'என்னை உய்வித்தேன்; எந்தையை உய்வித்தேன்; நினைய
உன்னை உய்வித்து, இவ் உலகையும் உய்விப்பான் அமைந்து,
முன்னை வேதத்தின் முதல் பெயர் மொழிவது மொழிந்தேன்;
என்னை குற்றம் நான் இயம்பியது? இயம்புதி''என்றான்.         6.3.25

அந்தணனாகிய குரு பிரகலாதனுக்கு அறிவுரை கூறுதல்

6341. "'முந்தை வானவர் யாவர்க்கும், முதல்வர்க்கும் முதலோன்
உந்தை; மற்று அவன் திருப்பெயர், உரைசெயற்கு உரிய;
அந்தணாளன் யான்; என்னினும் அறிதியோ? ஐயா!
இந்த! இப்பெயர் உரைத்து, எனைக் கெடுத்திடல்''என்றான்.         6.3.26

பிரகலாதன் குருவின் சொல்லை மறுத்து, வேதப் பொருளாய் விளங்கும் திருமாலின் பெருமையை விரித்துரைத்தல் (6342-6348)

6342. "வேத பாரகன் அவ் உரை விளம்பலும், விமலன்,
"ஆதி நாயகன் பெயர் அன்றி, யான் பிறிது அறியேன்;
ஓத வேண்டுவது இல்லை; என் உணர்வினுக்கு ஒன்றும்
போதியாததும் இல்லை''என்று, இவை இவை புகலும்.         6.3.27

6343. "'தொல்லை நான்மறை வரன்முறை துணிபொருட்கு எல்லாம்
எல்லை கண்டவன் அகம் புகுந்து, இடம் கொண்டது என் உள்;
இல்லை, வேறு இனிப் பெரும் பதம்; யான் அறியாத,
வல்லையேல், இனி, ஓதுவி, நீதியின் வழாத.         6.3.28

6344. "'ஆரைச் சொல்லுவது அந்தணர் அருமறை? அறிந்தோர்
ஓரச் சொல்லுவது எப்பொருள், உபநிட தங்கள்,
தீரச் சொல்பொருள்; தேவரும் முனிவரும் செப்பும்
பேரைச் சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ?         6.3.29

6345. "'வேதத்தானும், நல் வேள்வியினானும், மெய் உணர்ந்த
போதத்தானும், அப்புறத்துள எப் பொருளானும்,
சாதிப்பார் பெறும் பெரும்பதம் தலைக்கொண்டு சமைந்தேன்;
ஓதிக் கேட்பது பரம்பொருள்; இன்னம் ஒன்று உளதோ?         6.3.30

6346. "'காடு பற்றியும், கனவரை பற்றியும், கலைத் தோல்
மூடி முற்றியும், முண்டித்தும், நீட்டியும், முறையால்
வீடு பெற்றவர்,'பெற்றதின் விழுமிது'என்று உரைக்கும்
மாடு பெற்றனென், மற்று, இனிஎன் பெற வருந்தி?         6.3.31

6347. "'செவிகளால் பல கேட்கிலர் ஆயினும், தேவர்க்கு
அவிகொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார்;
கவிகள் ஆகுவார்; காண்குவார், மெய்ப்பொருள்; காலால்
புவிகொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார்.         6.3.32

6348. "'எனக்கும் நான்முகத்து ஒருவற்கும், யாரினும் உயர்ந்த
தனக்கும் தன்நிலை அறிவு அரும் ஒரு தனித் தலைவன்,
மனக்கு வந்தனன்; வந்தன யாவையும்; மறையோய்!
உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல்''என உரைத்தான்.         6.3.33

குரு இரணியனை அடைந்து நிகழ்ந்த செய்தியைக் கூறுதல் (6349-6350)

6349. 'மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன், மறையவன்; மறுகி,
"ஏற்றம் என்? எனக்கு இறுதி வந்து எய்தியது" என்னா,
ஊற்றம் இல்லவன் ஓடினன், கனகனை உற்றான்;
தோற்ற வந்ததோர் கனவு கண்டான் எனச் சொன்னான்;         6.3.34

6350. "'எந்தை! கேள் : எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்பச்
சிந்தையால் இறை நினைதற்கும் அடாதன செப்பி,
'முந்தையே உணர்ந்தேன் பொருள் முற்றும்'என்று உரைத்து, உன்
மைந்தன் ஓதிலன் வேதம்''என்று உரைத்தனன், வணங்கி.         6.3.35

இரணியன் குருவை நோக்கித் தன் மகன் கூறிய சொல்லைக் கூறுமாறு பணித்தல்

6351. 'அன்ன கேட்டவன்,"அந்தண! அந்தணர்க்கு அடாத,
முன்னர் யாவரும் மொழிதரும் முறைமையின் படாத,
தன்னது உள்ளுறும் உணர்ச்சியால் புதுவது தந்தது,
என்ன சொல்? அவன் இயம்பியது இயம்புதி''என்றான்.         6.3.36

குரு'அச் சொல்லைக் கூறின் நான் நரகம் எய்துவேன்'எனக் கூறுதல்

6352. "அரசன் அன்னவை உரைசெய, மறையவன் அஞ்சி,
சிரதலம் கரம் சேர்த்திடா," செவித்தொளை சேர்ந்த
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரைசெயின், உரவோய்!
நரகம் எய்துவென்; நாவும் வெந்து உகும்''என நவின்றான்.         6.3.37

இரணியனது ஏவலால் அழைக்கப்பட்டு வந்த பிரகலாதன் தன் தந்தையை வணங்குதல்

6353. "'கொணர்க என் மைந்தனை வல் விரைந்து" என்றனன், கொடியோன்,
உணர்வு இல் நெஞ்சினன்; ஏவலர் கடிதினின் ஓடி,
கணனின் எய்தினர்,"பணி" என, தாதையைக் கண்டான்;
துணை இலான்தனைத் துணை என உடையவன் தொழுதான்.         6.3.38

இரணியன் தன்னை வணங்கிய மைந்தனை மார்போடணைத்து அருகிருத்தி'நீ குருவின்முன் சொல்லிய சொல்லினைக் கூறுக'எனப் பணித்தல்

6354. 'தொழுத மைந்தனை, சுடர்மணி மார்பிடைச் சுண்ணம்
எழுத, அன்பினோடு இறுகுறத் தழுவி, மாடு இருத்தி,
முழுதும் நோக்கி,"நீ, வேதியன் கேட்கிலன் முனிய,
பழுது சொல்லியது என்? அது பகருதி''என்றான்.         6.3.39

பிரகலாதன் தான் சொல்லிய திருப்பெயரின் சிறப்பினைக் கூறுதல்

6355. "'சுருதி ஆதியில் தொடங்கு உறும் எல்லையில் சொன்ன
ஒருவன், யாவர்க்கும் நாயகன், திருப்பெயர், உணரக்
கருதக் கேட்டிடக் கட்டுரைத்து இடர்க் கடல் கடக்க
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல்''என உரைத்தான்.         6.3.40

இரணியன், அப்பெயரைக் குறித்துக் கூறுக எனப் பணித்தல்

6356. 'தேவர் செய்கையன் அங்ஙனம் உரைசெய தீயோன்
"தா இல் வேதியன் தக்கதே உரைசெயத் தக்கான்;
ஆவது ஆகுக; அன்று எனின் அறிகுவம்" என்றே
"யாவது அவ் உரை? இயம்புதி இயம்புதி" என்றான்.         6.3.41

பிரகலாதன் திரு எட்டெழுத்தின் பெருமையை விரித்துரைத்தல் (6357-6361)
6357. "'காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்
சேம வீடு உறச் செய்வதும் செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம்; அன்னது கேள்; நமோ நாராயணாய.         6.3.42

6358. "'மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும்
எண்ணில் பூதங்கள், நிற்பன திரிவன, இவற்றின்
உள் நிறைந்துள, கரணத்தின் ஊங்கு உள உணர்வும்,
எண்ணுகின்றது, இவ் எட்டு எழுத்தே; பிறிது இல்லை.         6.3.43

6359. "'முக்கண் தேவனும் நான்முகத்து ஒருவனும் முதலா
மக்கள் காறும் இம் மந்திரம் மறந்தவர் மறந்தார்;
புக்குக் காட்டுவது அரிது இது; பொதுவுறக் காண்பார்
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார்.         6.3.44

6360. "'தோற்றம் என்னும் அத் தொல்வினைத் தொடு கடல் சுழிநின்று
ஏற்று நன்கலன், அருங்கலன், யாவர்க்கும் இனிய
மாற்ற மங்கலம், மாதவர் வேதத்தின் வரம்பின்
தேற்ற மெய்ப்பொருள், தெரிந்த மற்று இதின் இல்லை, சிறந்த.         6.3.45

6361. "'உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இவ் உலகத்தின் உள்ள
மன்னுயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்துச்
சொன்னது இப்பெயர்''என்றனன், அறிஞரின் தூயோன்;
மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான்.         6.3.46

இரணியன் பிரகலாதனை வெகுண்டுரைத்தல் (6362-6371)

6362. "'அற்றை நாள்முதல், யான் உள நாள்வரை, அப்பேர்
சொற்ற வாயையும் கருதிய மனத்தையும் சுடும், என்
ஒற்றை ஆணை; மற்று, யார் உனக்கு இப்பெயர் உரைத்தார்?
கற்றது ஆரொடு? சொல்லுதி விரைந்து''எனக் கனன்றான்.         6.3.47

6363. "'முனைவர் வானவர் முதலினர், மூன்று உலகத்தும்
எனைவர் உள்ளவர், யாவரும், என் இரு கழலே
நினைவது; ஓதுவது என்பெயர்; நினக்கு இது நேர
அனையர் அஞ்சுவர்; மைந்த! நீ யாரிடை அறிந்தாய்?         6.3.48

6364. "'மறம்கொள் வெஞ்செரு மலைகுவான் பல்முறை வந்தான்,
கறங்குவெஞ் சிறைக் கலுழன்தன் கடுமையின், கரந்தான்;
பிறங்கு தணெ்திரைப் பெருங்கடல் புக்கு, இ(ன்)னம் பெயராது,
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார்?         6.3.49

6365. "'பரவை நுண் மணல் எண்ணினும் எண்ண அரும் பரப்பின்
குரவர் நம்குலத்து உள்ளவர் அவன் கொ(ல்)லக் குறைந்தார்;
அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால், அதற்கு
விரவும் நன்மை என்? துன்மதி! விளம்பு''என வெகுண்டான்.         6.3.50

6366. "வயிற்றினுள் உலகு ஏழினோடு ஏழையும் வைக்கும்
அயிர்ப்பு இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி
எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம்
பயிற்றவோ நினைப் பயந்தது நான்?''எனப் பகர்ந்தான்.         6.3.51

6367. "'ஒருவன், யாவர்க்கும் எவற்றிற்கும் உலகிற்கும் முதல்வன்,
தருதல், காத்து, அவை தவிர்த்தல் என்று இவை செயத் தக்கோன்,
கருமத்தால் அன்றிக் காரணத்தால் உள்ள காட்சி
திருவிலீ! மற்று இது எம்மறைப் பொருள் எனத் தெரிந்தாய்?         6.3.52

6368. "'ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை, பேர் உலகில்;
வேதம் எங்ஙனம், அங்ஙனம் அவை சொன்ன விதியால்,
கோது இல் நல்வினை செய்தவர் உயர்குவர்; குறித்துத்
தீது செய்தவர் தாழ்குவர்; இது மெய்ம்மை, தெரியின்.         6.3.53

6369. "'செய்த மாதவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று
எய்தினர் பதம் இழந்தனர் யான் தவம் இயற்றிப்
பொய் இல் நாயகம் பூண்டபின், இனி அது புரிதல்
நொய்யது ஆகும் என்று, ஆரும் என் காவலின் நோலார்.         6.3.54

6370. "'வேள்வி ஆதிய புண்ணியம் தவத்தொடும் விலக்கி,
கேள்வி யாவையும் தவிர்த்தனென், 'இவை கிளர்பகையைத்
தாழ்வியாதன செய்யும்'என்று; அனையவர் தம்பால்
வாழ்வு யாது? அயல் எவ் வழிப் புறங்கொண்டு வாழ்வார்?         6.3.55

6371. "'பேதைப் பிள்ளை நீ; பிழைத்தது பொறுத்தனென்; பெயர்த்தும்,
ஏது இல் வார்த்தைகள் இனையன விளம்பலை; முனிவன்
யாது சொல்லினன், அவை அவை இதம் என எண்ணி,
ஓது; போதி''என்று உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன்.         6.3.56

பிரகலாதன், தன் தந்தையாகிய இரணியனுக்குத் திருமாலாகிய பரம்பொருளின்
இயல்பினை அறிவுறுத்தல் (6372-6393)

6372. "'உரை உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்;
விரை உள அலங்கலாய்! வேத வேள்வியின்
கரை உளது; யாவரும் கற்கும் கல்வியின்
பிரை உளது" என்பது மைந்தன் பேசினான்.         6.3.57

6373. "'வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை; வேந்த! நின்
பித்து இன்றி உணர்தியேல், அளவைப் பெய்குவன்;
'உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல் பாற்று! எனா,
கைத்து ஒன்று நெல்லி அம் கனியின் காண்டியால்.         6.3.58

6374. "'தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை
தன்னுளே நின்று தான் அவற்றுள் தங்குவான்
பின் இலன் முன் இலன் ஒருவன்; பேர்கிலன்;
தொல் நிலை ஒருவரால் துணியற் பாலதோ?         6.3.59

6375. "'சித்து என அருமறைச் சிரத்தின் தேறிய
தத்துவம் அவன்; அது தம்மைத் தாம் உணர்
வித்தகர் அறிகுவர்; வேறு வேறு உணர்
பித்தரும் உளர் சிலர்; வீடு பெற்றிலார்.         6.3.60

6376. "'அளவையான் அளப்ப அரிது; அறிவின் அப்புறத்து
உளவை ஆய் உபநிடதங்கள் ஓதுவ;
கிளவியால் பொருள்களால் கிளக்குறாதவன்
களவை யார் அறிகுவார்? மெய்ம்மை கண்டிலார்.         6.3.61

6377. "'மூவகை உலகும் ஆய் குணங்கள் மூன்றும் ஆய்
யாவையும் எவரும் ஆய் எண் இல் வேறுபட்டு
ஓவல் இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை
தேவரும் முனிவரும் உணரத் தேயுமோ?         6.3.62

6378. 'சாங்கியம் யோகம் என்று இரண்டு தன்மைய
வீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன;
ஆங்கு அவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன்
ஓங்கிய மேல் நிலை உணரற் பாலதோ?         6.3.63

6379. "'கருமமும் கருமத்தின் பயனும் அப்பயன்
தரு முதல் தலைவனும் தானும் ஆனவன்;
அருமையும் பெருமையும் அறிவரேல் அவர்
இருமை என்று உரைசெயும் கடல்நின்று ஏறுவார்.         6.3.64

6380. "'மந்திரம் மாதவம் என்னும் மாலைய
தந்துறு பயன் இவை முறையின் சாற்றிய
நந்தல் இல் தயெ்வம் ஆய் நல்கும்; நான்மறை
அந்தம் இல் வேள்விமாட்டு அவிசும் ஆம்         6.3.65

6381. "'முற்பயப் பயன் தரும் முன்னி நின்று அவர்
பிற்பயப் பயன் தரும் பின்பு போய் அவன்;
தன் பயன் தான் தரும் தருமம் இல்லை; அஃது
அற்புத மாயையால் அறிகிலார் பிறர்.         6.3.66

6382. "'ஒரு வினை ஒரு பயன் அன்றி உய்க்குமோ?
இரு வினை என்பவை இயற்றி இட்டவை;
கருதின கருதின காட்டுகின்றது
தரு பரன் அருள்; இனிச் சான்று வேண்டுமோ?         6.3.67

6383. "'ஒர் ஆவுதி கடைமுறை வேள்வி ஓம்புவோர்
அரா அணை அமலனுக்கு அளிப்பிரேல் அது
சராசரம் அனைத்தினும் சாரும் என்பது
பராவ அரும் மறைப் பொருள்; பயனும் அன்னதால்.         6.3.68

6384. "'பகுதியின் உள் பயன் பயந்தது; அன்னதின்
விகுதியின் மிகுதிகள் எவையும் மேலவர்
வகுதியின் வசத்தன; வரவு போக்கு அது
புகுதி இல்லாதவர் புலத்திற்று ஆகுமோ?         6.3.69

6385. "'எழுத்து இயல் நாளத்தின் எண் இலா வகை
முழுத் தனி நான்முகன் முதல முற்று உயிர்
வழுத்து அரும் பொகுட்டது ஓர் புரையின் வைகுமால்
விழுத் தனிப் பல் இதழ் விரை உலாம் முகிழ்.         6.3.70

6386. "'கண்ணினும் கரந்து உளன்; கண்டு காட்டுவான்;
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையான்;
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும்
எண்ணினும் நெடியவன்; ஒருவன்; எண் இலான்         6.3.71

6387. "'சிந்தையின் செய்கையின் சொல்லின் சேர்ந்துளன்;
இந்தியம் தொறும் உளன்; உற்றது எண்ணினால்
முந்தை ஓர் எழுத்து என வந்து மும்முறைச்
சந்தியும் பதமும் ஆய்த் தழைத்த தன்மையான்.         6.3.72

6388. "'காமமும் வெகுளியும் முதல கண்ணிய
தீமையும் வன்மையும் தீர்க்கும் செய்கையான்
நாமமும் அவன் பிற நலிகொடா நெடுஞ்
சேமமும் பிறர்களாற் செப்பற் பாலவோ?         6.3.73

6389. "'காலமும் கருவியும் இடனும் ஆய் கடைப்
பால் அமை பயனும் ஆய் பயன் துய்ப்பானும் ஆய்
சீலமும் அவைதரும் திருவும் ஆய் உளன்
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்.         6.3.74

6390. "'உள்ளுற உணர்வு இனிது உணர்ந்த ஓசை ஓர்
தெள்விளி யாழிடைத் தெரியும் செய்கையின்
உள் உளன்; புறத்து உளன்; ஒன்றும் நண்ணலான்;
தள்(ள) அரு மறைகளும் மருளும் தன்மையான்.         6.3.75

6391. "'ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர்
ஆம் அவன், அறிவினுக்கு அறிவும் ஆயினான்
தாம மூவுலகமும் தழுவிச் சார்தலால்,
தூமமும் கனலும்போல் தொடர்ந்த தோற்றத்தான்.         6.3.76

6392. "'காலையின் நறுமலர் ஒன்றக் கட்டிய
மாலையின் மலர்புரை சமய வாதியர்
சூலையின் திருக்கு அலால் சொல்லுவோர்க்கு எலாம்
வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான்.         6.3.77

6393. "'இன்னது ஓர் தன்மையன் இகழ்வுற்று எய்திய
நல் நெடுஞ் செல்வமும் நாளும் நாம் அற
மன்னுயிர் இழத்தி என்று அஞ்சி வாழ்த்தினேன்
சொன்னவன் நாமம்" என்று உணரச் சொல்லினான்.         6.3.78

இரணியன் எல்லையற்ற வெகுளியுடையனாய்த் தன் புதல்வனைக் கொல்லுமாறு வீரர்களை ஏவுதலும் அவர்கள் பிரகலாதனைப் பற்றுதலும் (6394-6395)

6394. 'எதிரில் நின்று, அவன், இவை உரைத்திடுதலும், எவ் உலகமும் அஞ்ச,
முதிரும் வெம் கதம் மொழிகொடு மூண்டது, முது கடல் கடு ஏய்ப்ப;
கதிரும் வானமும் சுழன்றன; நெடுநிலம் கம்பித்த; கனகன் கண்
உதிரம் கான்றன; தோன்றின புகைக் கொடி; உமிழ்ந்தன கொடுந் தீயே.         6.3.79

6395. "'வேறும் என்னொடு தரும்பகை பிறிது இனி வேண்டல் என்? வினையத்தால்
ஊறி, என்னுளே உதித்தது; குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால்;
ஈறு இல் என்பெரும் பகைஞனுக்கு அன்புசால் அடியென் யான் என்கின்றான்;
கோறிர்''என்றனன்; என்றலும் பற்றினர், கூற்றினும் கொலை வல்லார்.         6.3.80

இரணியனது ஆணையினை மேற்கொண்ட அசுர வீரர்கள் பிரகலாதனைப் பல வழிகளில் கொல்ல முயலுதலும், பிரகலாதன் இறைவன் நாமத்தை இடைவிடாது எண்ணுதலால் அவ் விடையூறுகளிலிருந்து தப்பி உய்தலும் (6396-6431)

6396. 'குன்று போல் மணிவாயிலின் பெரும் புறத்து உய்த்தனர், மழுக்கூர்வாள்,
ஒன்று போல்வன ஆயிரம் மீது எடுத்து ஓச்சினர்,"உயிரோடும்
தின்று தீர்குதும்''என்குநர், உரும் எனத் தழெிக்குநர், சின வேழக்
கன்று புல்லிய கோள் அரிக் குழு எனக் கனல்கின்ற தறுகண்ணார்.         6.3.81

6397. 'தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் தன்னை, அத் தவம் எனும் தகவு இல்லோர்
"ஏ" என் மாத்திரத்து எய்தன எறிந்தன எறிதொறும் எறிதோறும்
தூயவன்தனைத் துணை என உடைய அவ் ஒருவனைத் துன்னாதார்
வாயின் வைதன ஒத்தன அத்துணை மழுவொடு கொலை வாளும்.         6.3.82

6398. 'எறிந்த, எய்தன, எற்றின, குற்றின, ஈர்ந்தன, படையாவும்
முறிந்த, நுண்பொடி ஆயின, முடிந்தன; முனிவு இலான் முழுமேனி
சொறிந்த தன்மையும் செய்தில ஆயின; தூயவன் துணிவு ஒன்றா
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன்; அயர்த்திலன், அவன் நாமம்.         6.3.83

6399. "'உள்ள வான்பெரும் படைக்கலம் யாவையும் உக்கன - உரவோய் நின்
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது; இனிச் செயல் என்கொல் பிறிது?''என்ன,
"கள்ள உள்ளத்தன் கட்டினன் கருவிகள்; கதுமெனக் கனல் பொத்தித்
தள்ளுமின்''என உரைத்தனன்; வயவரும், அத்தொழில் தலை நின்றார்.         6.3.84

6400. 'குழியில் இந்தனம் அடுக்கினர், குன்று என; குடம் தொறும் கொணர்ந்து எண்ணெய்
இழுது நெய் சொரிந்திட்டனர்; நெருப்பு எழுந்திட்டது, விசும்பு எட்ட,
அழுது நின்றவர் அயர்வுற, ஐயனைப் பெய்தனர்;'அரி'என்று
தொழுது நின்றனன், நாயகன் தாள் இணை; குளிர்ந்தது சுடுதீயே.'         6.3.85

6401. 'கால வெங்கனல் கதுவிய காலையில் - கற்புடையவள் சொற்ற
சீல நல் உரைச் சீதம் மிக்கு அடுத்தலின், கிழியொடு நெய் தீற்றி,
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்தன்
கூலம் ஆம் என, என்பு உறக் குளிர்ந்தது, அக் குருமணித் திருமேனி.'         6.3.86

6402. "'சுட்டது இல்லை நின் தோன்றலை, சுடர்க் கனல் சுழிபடர் அழுவத்துள்
இட்ட போதினும்; என் இனிச் செயத்தக்கது?''என்றனர், இகல் வெய்யோர்;
"கட்டி, தீயையும் கடுஞ்சிறை இடுமின்; அக் கள்வனைக் கவர்ந்து உண்ண
எட்டுப் பாம்பையும் விடுமின்கள்'' என்றனன், எரி எழு தறுகண்ணான்.'         6.3.87

6403. அனந்தனே முதலாகிய நாகங்கள், "அருள் என் கொல்" என, அன்னான்
நினைந்த மாத்திரத்து எய்தின, நொய்தினின்; நெருப்பு உகு பகு வாயால்,
வனைந்ததாம் அன்ன மேனியினான் தன்மேல், வாள் எயிறு உற ஊன்றிச்
சினம் தலைக் கொளக் கடித்தன; துடித்திலன், திருப்பெயர் மறவாதான்.         6.3.88

6404. 'பக்கம் நின்று அவை பயத்தினின் புயல் கறை பசும்புனல் பகுவாயின்
கக்க, வெஞ்சினக் கலுழனும் நடுக்குற, கவ்விய காலத்து,
செக்கர் மேகத்துச் சிறு பிறை நுழைந்து அ(ன்)ன செய்கைய, வலி சிந்தி
உக்க, பற்குலம்; ஒழுகின எயிற்று இரும் புரைதொறும் அமிழ்து ஊறி.         6.3.89

6405. "'சூழப் பற்றின சுற்றும் எயிற்றின்
போழக் கிற்றில" என்று புகன்றார்;
"வாழித் திக்கின் மயக்கின் மதம் தாழ்
வேழத்துக்கு இடுமின்" என விட்டான்.         6.3.90

6406. 'பசையில் தங்கல் இல் சிந்தையர் பல்லோர்
திசையில் சென்றனர்;'செப்பினன்'என்னும்
இசையின் தந்தனன் இந்திரன் என்பான்
விசையின் திண்பணை வெஞ்சின வேழம்.         6.3.91

6407. 'கையில் கால்களில் மார்பு கழுத்தில்
தயெ்வப் பாசம் உறப் பிணி செய்தார்;
மையல் காய் கரி முன் உற வைத்தார்;
பொய் அற்றானும் இது ஒன்று புகன்றான்.         6.3.92

6408. "'எந்தாய்! பண்டு ஒர் இடங்கர் விழுங்க
முந்தாய் நின்ற முதற் பொருளே!" என்று
உம் தாய் தந்தை இனத்தவன் ஓத
வந்தான் என்றன் மனத்தினன் என்றான்.         6.3.93

6409. 'என்னா முன்னம் இருங் களிறும் தன்
பொன் ஆர் ஓடை பொருந்த நிலத்தின்
அன்னானைத் தொழுது அஞ்சி அகன்றது;
ஒன்னார் அத்திறம் எய்தி உரைத்தார்.         6.3.94

6410. "'வல் வீரைத் துயில்வானை மதித்து என்
நல் வீரத்தை அழித்தது; நண்ணுற்று
ஒல்வீர்! ஒற்றை உரக் கரி தன்னைக்
கொல்வீர்" என்றனன் நெஞ்சு கொதிப்பான்.         6.3.95

6411. 'தன்னைக் கொல்லுநர் சாருதலோடும்
பொன்னைக் கொல்லும் ஒளிப் புகழ் பொய்யா
மன்னைக் கொல்லிய வந்தது; வாரா
மின்னைக் கொல்லும் வெயில் தின் எயிற்றால்.         6.3.96

6412. 'வீரத் திண்திறல் மார்பினில் வெள் கோடு
ஆரக் குத்தி அழுத்தியது ஆக
வாரத் தண் குலை வாழை மடல் சூழ்
ஈரத் தண்டு என இற்றன எல்லாம்.         6.3.97

6413. 'வெண் கோடு இற்றன மேவலர் செய்யும்
கண்கோடல் பொறியின் கடிது ஏகி
'எண் கோடற்கு அரிது'என்ன வெகுண்டான்
திண் கோடைக் கதிரின் தறெு கண்ணான்.         6.3.98

6414. "'தள்ளத் தக்கு இல் பெருஞ் சயிலத்தோடு
எள்ளக் கட்டி எடுத்து விசித்து
கள்ளத்து இங்கு இவனைக் கரை காணா
வெள்ளத்து உய்த்திடுவீர்" என விட்டான்.         6.3.99

6415. "'ஒட்டிக் கொல்ல உணர்ந்து வெகுண்டான்;
விட்டிட்டான் அலன்" என்று விரைந்தார்
கட்டிக் கல்லொடு கால் விசையின்போய்
இட்டிட்டார் கடலின் நடு எந்தாய்!’         6.3.100
        6.3.
6416. 'நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற்கின்றிலன் ஆதலின் வேலை
மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய்
குடுவைத் தன்மையது ஆயது குன்றம்.         6.3.101

6417. 'மோதுற்று ஆர் திரை வேலையில் மூழ்கான்
மீதுற்று ஆர் சிலைமீது கிடந்தான்
ஆதிப் பண்ணவன் ஆயிர நாமம்
ஓதுற்றான் மறை எல்லை உணர்ந்தான்’         6.3.102

6418. 'தலையில் கொண்ட தடக் கையினான் தன்
நிலையின் தீர்வு இல் மனத்தின் நினைந்தான்;
சிலையில் தண்புனலில் சினை ஆலின்
இலையில் பிள்ளை எனப் பொலிகின்றான்.         6.3.103

6419. "'அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால்
ஒடியா வலி யான் உடையேன் உளெனோ?
கொடியாய்! குறியாய்! குணம் ஏதும் இலாய்!"
நெடியாய்! அடியேன் நிலை நேர்குதியோ?         6.3.104

6420. "'கள்ளம் திரிவாரவர் கைதவன் நீ;
உள்ளம் தெரியாத உனக்கு உளவோ?"
துள்ளும் பொறியின் நிலை சோதனைதான்
வெள்ளம் தரும் இன் அமுதே! விதியோ?’         6.3.105

6421. "'வரு நான்முகனே முதல் வானவர்தாம்
திரு நான்மறையின் நெறியே திரிவார்
பெரு நாள் தெரிகின்றிலர்; பேதைமையேன்
ஒரு நாள் உனை எங்ஙனம் உள்ளுவெனோ?         6.3.106

6422. "'செய்யாதனவோ இலை தீவினைதான்
பொய்யாதன வந்து புணர்ந்திடுமால்;
மெய்யே உயிர் தீர்வது ஒர் மேல்வினை நீ
ஐயா! ஒரு நாளும் அயர்த்தனையோ?         6.3.107

6423. "'ஆயப்பெறும் நல்நெறி தம் அறிவு என்று
ஏயப்பெறும் ஈசர்கள் எண்ணிலரால்;
நீ அப்புறம் நிற்க நினைக்கிலர்; நின்
மாயப் பொறி புக்கு மயங்குவரால்.         6.3.108

6424. "'தாமே தனி நாயகராய்'எவையும்
போமே பொருள்'என்ற புராதனர் தாம்
'யாமே பரம்'என்றனர்; என்ற அவர்க்கு
ஆமே? பிறர் நின் அலது ஆர் உளரே?         6.3.109

6425. "'ஆதிப் பரம் ஆம் எனில் அன்று எனல் ஆய்
ஓது அப்பொருள் நூல்கள் உலப்பு இலவால்;
பேதிப்பன; நீ அவை பேர்கிலையால்;
வேதப் பொருளே! விளையாடுதியோ?         6.3.110

6426 "'அம்போருகனார் அரனார் அறியார்;
எம்போலியர் எண்ணிடின் என் பலவா?
கொம்போடு அடை பூ கனி காய் எனினும்
வம்போ'மரம் ஒன்று'எனும் வாசகமே?         6.3.111

6427. "'நின்னின் பிறிதாய் நிலையின் திரியா
தன்னின் பிறிது ஆயினதாம் எனினும்
உன்னின் பிறிது ஆயினவோ உலகம்?
பொன்னின் பிறிது ஆகில பொற்கலனே.         6.3.112

6428. "'தாய் தந்தை எனும் தகை வந்தனைதான்
நீ தந்தனை; நீ உறு நெஞ்சினன் நான்;
நோய் தந்தவனே நுவல் தீர்வும்" எனா
வாய் தந்தன சொல்லி வணங்கினனால்.         6.3.113

6429. 'அத்தன்மை அறிந்த அருந் திறலோன்
"உய்த்து உய்ம்மின் என்முன்" என உய்த்தனரால்;
"பித்துண்டது பேர்வுறுமா பெறுதும்;
கைத்தும் கடு நஞ்சின்" எனக் கனலா         6.3.114

6430. 'இட்டார் கடு வல்விடம்; எண்ணுடையான்
தொட்டான் நுகரா ஒரு சோர்வு இலனால்;
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன்
விட்டான்; அவன்மேல் அவர் வீசினரால்.         6.3.115

6431. 'வெய்யார் முடிவு இல்லவர் வீசியபோது
"உய்யான்" எனும் வேலையின்"உள் உறைவோன்
கை ஆயிரம் அல்ல; கணக்கு இல" என்று
எய்யா உலகு யாவையும் எண்ணினனால்.         6.3.116

பிரகலாதனைப் பலவகையாகக் கொல்ல முயன்றும் அவன் இறவாமையை அறிந்த இரணியன்'யானே இவனுயிரை உண்பேன்'என அவனை நெருங்குதல்

6432. "'ஊனோடு உயிர் வேறுபடா உபயம்
தானே உடையன் தனி மாயையினால்;
யானே உயிர் உண்பல்" எனக் கனலா
வான் ஏழும் நடுங்கிட வந்தனனால்.         6.3.117

பிரகலாதனுக்கும் இரணியனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் (6433-6441)

6433. 'வந்தானை வணங்கி"என் மன்னுயிர்தான்
எந்தாய்! கொள எண்ணினையேல் இதுதான்
உந்தா; அரிது அன்று; உலகு யாவும் உடன்
தந்தார் கொள நின்றதுதான்" எனலும்.         6.3.118

6434. "'ஏவரே உலகம் தந்தார்? என் பெயர் ஏத்தி வாழும்
மூவரே? அல்லர் ஆகின் முனிவரே? முழுதும் தோற்ற
தேவரே? பிறரே? யாரே? செப்புதி தெரிய''என்றான்,
கோவம் மூண்டு எழுந்தும் கொல்லான், காட்டுமேல் காட்சி கொள்வான்.         6.3.119

6435. "'உலகு தந்தானும், பல்வேறு உயிர்கள் தந்தானும், உள் உற்று,
உலைவு இலா உயிர்கள் தோறும் அங்கு அங்கே உறைகின்றானும்,
மலரினில் வெறியும் எள்ளில் எண்ணெயும் மான, எங்கும்
அலகு இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரிகாண் அத்தா         6.3.120

6436. 'என்கணால் நோக்கிக் காணாய், எங்கணும் உளன்காண், எந்தை!
உன்கண் நான் அன்பிற் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய்;
நின் கணால் நோக்கிக் காண்டற்கு எளியனோ? நினக்குப் பின்னோன்
பொன் கணான் ஆவி உண்ட புண்டரீகக் கண் அம்மான்.         6.3.121

6437. "'மூன்று அவன் குணங்கள்; செய்கை மூன்று; அவன் உருவம் மூன்று;
மூன்று கண், சுடர்கொள் சோதி மூன்று; அவன் உலகம் மூன்று;
தோன்றலும் இடையும் ஈறும் தொடங்கிய பொருள்கட்கு எல்லாம்
சான்று அவன்; இதுவே வேத முடிவு : இது சரதம்''என்றான்.         6.3.122

6438. என்றலும் அவுணர் வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான்,
"ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன்'என்றாய்;
நன்று, அது கண்டு பின்னர் நல்லவா புரிது; தூணின்
நின்றுளன் என்னின், கள்வன், நிரப்புதி நிலைமை''என்றான்.         6.3.123

6439. "'சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சதகூறு இட்ட
கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை
காணுதி விரைவின்'என்றான்; 'நன்று'எனக் கனகன் சொன்னான் :         6.3.124

6440. "'உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டாய் ஆகில்,
கும்பத்திண் கரியைக் கோள்மாக் கொன்றென, நின்னைக் கொன்று உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்''என்றான்.         6.3.125

6441. "'என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று; யான் முன்
சொன்னவன் தொட்ட தொட்ட இடந்தொறும் தோன்றான் ஆயின்,
என் உயிர் யானே மாய்ப்பல்; பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்,
அன்னவற்கு அடியேன் அல்லேன்'' என்றனன் அறிவின் மிக்கான்.         6.3.126

இரணியன், அங்குள்ள தூண்களில் ஒன்றினைத் தன் கையினால் அறைந்து தாக்க அத்தூணின்கண்ணே நரசிங்கம் தோன்றிச் சிரித்தல்

6442. 'நசை திறந்து இலங்கப் பொங்கி, "நன்று, நன்று" என்ன நக்கு,
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்ன ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது, அச் செங்கண் சீயம்.         6.3.127

சிங்கத்தின் சிரிப்பொலி கேட்டுப் பிரகலாதன் மகிழ்தல்

6443. "'நாடி நான் தருவென்" என்ற நல் அறிவாளன், நாளும்
தேடி நான்முகனும் காணாச் சேயவன் சிரித்தலோடும்,
ஆடினான்; அழுதான்; பாடி அரற்றினான்; சிரத்தில் செங்கை
சூடினான்; தொழுதான்; ஓடி உலகெலாம் துகைத்தான், துள்ளி.         6.3.128

தூணினுள் நின்று சிரித்த இறைவனைப் போருக்குப் புறப்படுக என இரணியன் அறைகூவி அழைத்தல்

6444. "'ஆர் அடா சிரித்தாய்? சொன்ன அரிகொலோ? அஞ்சிப் புக்க
நீர், அடா, போதாது என்று, நெடுந்தறி நேடினாயோ?
போர் அடா பொருதி ஆயின், புறப்படு! புறப்படு!''என்றான்
பேர் அடா நின்ற தாேளாடு உலகு எலாம் பெயரப் பேர்வான்.         6.3.129

நரசிங்கப்பிரான் தூணைப் பிளந்து வெளிப்பட்டுப் பேருருவம் கொள்ளுதல்

6445. 'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப்புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்?
கிளர்ந்தது; ககனமுட்டை கிழிந்தது கீழும் மேலும்.         6.3.130

நரசிங்கமூர்த்தியின் பேருருவத் தோற்றம் (6446-6451)
6446. 'மன்றல் அம் துளபம் மாலை மானிட மடங்கல், வானில்
சென்றது தெரிதல் தேற்றாம்; சேவடி படியில் தீண்ட
நின்றது ஓர் பொழுதின், அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன்
அன்று அவன் உந்தி வந்தானாம் எனத் தோன்றினானால்         6.3.131

6447. "'எத்துணை போதும் கை?" என்று இயம்பினால் எண்ணற்கு ஏற்ற
வித்தகர் உளரோ? அந்தத் தானவர் விரிந்த சேனை
பத்து நூறு அமைந்த கோடி வெள்ளத்தால் பகுதி செய்த
அத்தனை கடலும் மாளத் தனித்தனி அள்ளிக் கொண்ட.         6.3.132

6448. 'ஆயிரம் கோடி வெள்ளத்து அயில் எயிற்று அவுணர்க்கு அங்கு அங்கு
ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம், இரட்டி பொன் தோள்,
தீ எனக் கனலும் செங்கண் சிரம் தொறும் மூன்று, தயெ்வ
வாய் எனில், கடல்கள் ஏழும், மலைகளும், மற்றும், முற்றும்.         6.3.133

6449. 'முடங்கு வார் உளை, அ(வ்) அண்டம் முழுவதும் முடிவின் உண்ணும்
கடம் கொள் வெம் காலச் செந்தீ அதனை வந்து அழிக்கும்; கால
மடங்கலின் உயிர்ப்பு, மற்று அக்காற்றினை மாற்றும்; ஆனால்,
அடங்கலும் பகுவாய் யாக்கை அப்புறத்து அகத்தது அம்மா!         6.3.134

6450. 'குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டை முட்டப்
பயிற்றிய பருவம் ஒத்த காலத்துள் அமுது பல்கும்
எயிற்று வன் பகு வாயுள் புக்கு இருக்குந இருக்கை எய்தி;
வயிற்றின் வந்து அந்நாள் இந்நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ.         6.3.135

6451. 'நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ, கேடு? நான்முகத்தோன் ஆதி
தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறம் அத்து ஒடும் தொடர்ந்திலோரை
அன்வயித்து, ஓரும் தீய அவுணர் அல்லாரை அந்நாள்
தன் வயிறு அகத்து வைத்துத் தந்தது, அச் சீயம், தாயின்.         6.3.136

நரசிங்கமூர்த்தி அசுரர்களை அழித்தல் (6452-6458)

6452. 'பேர் உடை அவுணர் தம்மைப் பிறை எயிற்று அடக்கும்; பேரா,
பார் இடைத் தேய்க்கும்; மீளப் பகிரண்டத்து அடிக்கும்; பற்றி,
மேருவில் புடைக்கும்; மாள விரல்களின் பிசையும்; வேலை
நீர் இடை குமிழி ஊட்டும்; நெருப்பு இடைச் சுரிக்க நீட்டும்;         6.3.137

6453. 'வகிர்படத் துணிக்கும்; பற்றி வாய்களைப் பிளக்கும்; வன்தோல்
சுகிர்படுத்து உரிக்கும்; செந்தீக் கண்களைச் சூலும்; சுற்றிப்
பகிர்படக் குடரைக் கொய்யும்; பசை அறப் பிசையும்; பல்கால்
உகிர்புரைப் புக்கோர் தம்மை உகிர்களால் உறக்கும், ஊன்றி;         6.3.138

6454. "யானையும், தேரும், மாவும், யாவையும், உயிர் இராமை,
ஊனொடும் தின்னும்; பின்னை, ஒலிதிரைப் பரவை ஏழும்
மீனொடும் குடிக்கும்; மேகத்து உருமொடும் விழுங்கும் விண்ணில்;
"தான் ஒடுங்காது" என்று, அஞ்சித் தருமமும் சலித்தது அம்மா!         6.3.139

6455. 'ஆழி மால் வரையோடு எற்றும், சிலவரை; அண்ட கோளச்
சூழ் இருஞ் சுவரில் தேய்க்கும், சிலவரை; துளக்கு இல் குன்றம்
ஏழினோடு எற்றிக் கொல்லும், சிலவரை; எட்டுத் திக்கும்
தாழ் இருட் பிழம்பின் தேய்க்கும், சிலவரைத் தடக்கை தாக்கி.         6.3.140

6456. 'மலைகளின் புரண்டு வீழ, வள் உகிர் நுதியால், வாங்கி,
தலைகளைக் கிள்ளும்; அள்ளித் தழல் எழப் பிசையும்; தக்க
கொலைகளின் கொல்லும்; வாங்கி உயிர்களைக் குடிக்கும்; வன
நிலைகளில் பரக்க, வேலை நீர்களை நிரம்பத் தூர்க்கும்;         6.3.141

6457. 'முப்புறத்து உலகத் துள்ளும் ஒழிவு அற முற்றும் பற்றி,
தப்பு உறல் இன்றிக் கொன்று, தையலார் கருவும் தள்ளி,
இப்புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி,
அப்புறத்து அண்டம் தோறும் தடவின, சிலகை அம்மா!         6.3.142

6458. 'கனகனும், அவனில் வந்த வானவர் களைகண் ஆன
அனகனும் ஒழிய, பல்வேறு அவுணர் ஆனவரை எல்லாம்
நினைவதன் முன்னம் கொன்று நின்றது அந்நெடுங்கண் சீயம்
வனைகழலவனும், மற்று அ(ம்) மடங்கலின் வரவு நோக்கி,         6.3.143

சினமிக்க இரணியன், வாளும் கேடகமும் ஏந்தி நரசிங்கத்துடன் போர் செய்யப் புறப்படுதல்

6459. 'வயிர வாள் உறையின் வாங்கி, வானகம் மறைக்கும் வட்டச்
செயிர் அறு கிடுகும் பற்றி, வானவர் உள்ளம் தீய,
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச, ஆர்த்து, அங்கு
உயிருடை மேரு என்ன வாய் மடித்து, உருத்து நின்றான்.         6.3.144

அது கண்ட பிரகலாதன், நரசிங்கப்பிரானைப் பணிந்து உய்தி பெறுமாறு இரணியனுக்கு அறிவுறுத்தல்

6460. 'நின்றவன் தன்னை நோக்கி, "நிலை இது கண்டு, நீயும்
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே;
வன்தொழில் ஆழி வேந்தை வணங்குதி; வணங்கவே, உன்
புன்தொழில் பொறுக்கும்''என்றான் உலகு எலாம் புகழ நின்றான்.         6.3.145

அதற்கு உடம்படாமல் இரணியன் பிரகலாதனைச் சினந்து சூளுரைத்து நகுதல்

6461. "'கேள், இது; நீயும் காண, கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல்
தோெளாடு தாளும் நீக்கி, நின்னையும் துணித்து, பின், என்
வாளினைத் தொழுவது அல்லால், வணங்குதல் மகளிர் ஊடல்
நாளினும் உளதோ?''என்னா அண்டங்கள் நடுங்க நக்கான்.         6.3.146

நரசிங்கப்பிரான் இரணியனது மார்பைப் பிளந்து அவனது உயிரைப் போக்குதல் (6462-6468)

6462. 'நகை செயா, வாயும் கண்ணும் வாெளாடு நடந்த தாளும்
புகைசெயா, நெடுந் தீப் பொங்க உருத்து எதிர்பொருந்தப் புக்கான்;
தொகை செயற்கு அரிய தோளால் தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான்;
மிகை செய்வார் வினைகட்கு எல்லாம் மேற்செயும் வினையம் வல்லான்.         6.3.147

6463. 'இருவரும் பொருந்தப் பற்றி, எவ் உலகுக்கும் மேலாய்,
'ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின்,
வெரு வரு தோற்றத்து, அஞ்சா, வெஞ்சின, அவுணன், மேரு
அருவரை ஒத்தான்; அண்ணல், அல்லவை எல்லாம் ஒத்தான்.         6.3.148

6464. 'ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர்ப் பாரம் ஆன்ற
ஏற்று அருங் கரத்தின், பல்வேறு எறிதிரைப் பரப்பின் உற்ற,
பாற்கடல், பரந்து பொங்கிப் பங்கயத்து ஒருவன் நாட்டின்
மேல் சென்றது ஒத்தான் மாயன்; கனகனும் மேரு ஒத்தான்.         6.3.149

6465. 'வாெளாடு தோளும், கையும், மகுடமும், மலரோன் வைத்த
நீள் இருங் ககன முட்டை நெடுஞ்சுவர் தேய்ப்ப, நேமி
கோெளாடும் திரிவது என்னக் குலமணிக் கொடும் பூண் மின்ன,
தாள் இணை இரண்டும் பற்றிச் சுழற்றினன்; தடக்கை ஒன்றால்.         6.3.150

6466. 'சுழற்றிய காலை, காதில் தூங்கு குண்டலங்கள் நீங்கி,
கிழக்கொடு மேற்கின் ஓடி விழுந்தன கிடந்த, இன்றும்
அழல்தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தம் ஆன;
நிழல் தரும், காலை மாலை, நெடு மணிச் சுடரின் நீத்தம்.         6.3.151

6467. "'போன்றன இனைய தன்மை; பொருவியது இனையது" என்று
தான் தனி ஒருவன், தன்னை உரைசெயும் தரத்தினானோ?
வான்தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின்
ஊன்றலும், உதிர வெள்ளம் பரந்துளது, உலகம் எங்கும்.         6.3.152

6468. 'ஆயவன் தன்னை, மாயன் அந்தியின், அவன் பொன் கோயில்
வாயிலில், மணிக் கவான்மேல், வயிர வாள் உகிரின், வானின்
மீ எழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு
தீ எழப் பிளந்து நீக்கி, தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்.'         6.3.153

முன்பு இரணியனுக்கு அஞ்சியோடி ஒளிந்திருந்த தேவர்கள் அவன் இறந்த நிலையில் அங்கு வந்து குழுமி நரசிங்கத்தின் தோற்றத்தைக் கண்டு அஞ்சி நிற்றல்(6469-6470)

6469. 'முக்கணான் எண்கணானும், முளரி ஆயிரக் கணானும்,
திக்கண் ஆம் தேவரோடு முனிவரும், பிறரும், தேடிப்
புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார், புகுந்து மொய்த்தார்;
"எக்கணால் காண்டும் எந்தை உருவம்" என்று இரங்கி நின்றார்.'         6.3.154

6470. 'நோக்கினார் நோக்கினார் முன், நோக்குறு முகமும் கையும்
ஆக்கையும் தாளும் ஆகி, எங்கணும் தானே ஆகி,
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா,
மேக்கு உயர் சீயம் தன்னைக் கண்டனர் வெருவு கின்றார்.'         6.3.155

பிரமதேவன் நரசிங்கப்பிரானைத் துதித்தல் (6471-6475)

6471. 'பல்லொடு பல்லுக்கு எல்லை ஆயிரக் காதப் பத்தி,
சொல்லிய வதனம் கோடி கோடி மேல் விளங்கித் தோன்ற,
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி,
அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான்.'         6.3.156

6472. "'தன்னைப் படைத்ததுவும் தானே எனும் தன்மை
பின்னைப் படைத்ததுவே காட்டும்; பெரும் பெருமை
உன்னைப் படைத்தாய் நீ என்றால், உயிர் படைப்பான்
என்னைப் படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ?         6.3.157

6473. "'பல் ஆயிரங்கோடி அண்டம், பனிக் கடலுள்
நில்லாத மொக்குள் எனத் தோன்றுமால், நின்னுழையே;
எல்லா உருவமும் நீ என்றக்கால், இவ் உருவம்
வல்லே குறித்தால், வரம்பு இன்மை வாராதோ?         6.3.158

6474. "'பேரை ஒரு பொருட்கே பல் வகையால் பேர்த்து எண்ணும்
தாரை நிலையை; தமியை; பிறர் இல்லை;
யாரைப் படைக்கின்றது? யாரை அளிக்கின்றது?
ஆரைத் துடைக்கின்றது? ஐயா! அறியேமால்.         6.3.159

6475. "'நின்னுளே என்னை நிருமித்தாய்; நின் அருளால்,
என்னுளே, எப்பொருளும் யாவரையும் யான் ஈன்றேன்;
பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே!
பொன்னுளே தோன்றியது ஓர் பொன் கலனே போல்கின்றேன்.         6.3.160

நரசிங்கப்பிரான் சீற்றம் தணிந்து தேவர்கட்கு அபயம் அளித்தல் (6476-6477)

6476. 'என்று ஆங்கு இயம்பி இமையாத எண் கணனும்
வன்தாள் மழுவோனும் யாரும் வணங்கினார்;
நின்றார் இருமருங்கும்; நேமிப் பெருமானும்
ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான்.         6.3.161

திருமகளாகிய பெரிய பிராட்டியை நரசிங்கப்பிரான் அருகில் செல்லுமாறு தேவர்கள் வேண்டியனுப்ப, அப் பிராட்டியைச் சிங்கப்பிரான் அருெளாடு நோக்குதல் (6478-6479)

6477. "எஞ்சும், உலகு அனைத்தும் இப்பொழுதே" என்று என்று,
நெஞ்சு நடுங்கும் நெடுந் தேவரை நோக்கி,
"அஞ்சன்மின்" என்னா, அருள் சுரந்த நோக்கினான்,
கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான்.         6.3.162

6478. 'பூவில் திருவை, அழகின் புனைகலத்தை,
யாவர்க்கும் செல்வத்தை, வீடு ஈனும் இன்பத்தை,
ஆவித் துணையை, அமுதின் பிறந்தாளை,
தேவர்க்கும் தம் மோயை, ஏவினார், பாற் செல்ல.         6.3.163

6479. 'செந் தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும்
நந்தா விளக்கை, நறுந்தாள் இளங் கொழுந்தை,
முந்தா உலகும் உயிரும் முறை முறையே
தந்தாளை நோக்கினான், தன் ஒப்பு ஒன்று இல்லாதான்.         6.3.164

நரசிங்கப்பிரான் தன்பால் அன்புடைய பிரகலாதனை நோக்கி அருள் செய்தல் (6480-6483)

6480. 'தீது இலா ஆக உலகு ஈன்ற தயெ்வத்தைக்
காதலால் நோக்கினான்; கண்ட முனிக் கணங்கள்
ஓதினார் சீர்த்தி; உயர்ந்த பரஞ்சுடரும்
நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான்.         6.3.165

6481. "'உந்தையை உன்முன்னே கொன்று, உடலைப் பிளந்து அளைய,
சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய்!
அந்தம் இலா அன்பு என்மேல் வைத்தாய்! அளியத்தாய்!
எந்தை! இனி இதற்குக் கைம்மாறு யாது?''என்றான்         6.3.166

6482. "'அயிரா இமைப்பினை ஓர் ஆயிரம் கூறு இட்ட
செயிரின் ஒரு பொழுதின் உந்தையை யான் சீறி,
உயிர் நேடுவேன் போல், உடல் அளையக், கண்டும்
செயிர் சேரா உள்ளத்தாய்க்கு, என் இனியான் செய்கேனே?         6.3.167

6483. "'கொல்லேன், இனி உன் குலத்தோரை, குற்றங்கள்
எல்லை இலாதன செய்தாரே என்றாலும்;
நல்லேன், உனக்கு; என்னை நாணாமல் நான் செய்வது
ஒல்லை உளதேல், இயம்புதியால்''என்று உரைத்தான்.         6.3.168

பிரகலாதன் அன்பே பெரும்பேறென வேண்டுதல்

6484. "'முன்பு பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுவேனேல்
என்பு பெறாத இழிபிறவி எய்திடினும்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்" என்றான்.         6.3.169

நரசிங்கப்பிரான் அருள்புரிதல் (6485-6488)

6485. 'அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய்
"என் ஆனை வல்லன்" என மகிழ்ந்த பேர் ஈசன்
"முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும்
உன் நாள் உலவாய் நீ என்போல் உளை" என்றான்.         6.3.170

6486. "'மின்னைத் தொழு வளைத்தது அன்ன மிளிர் ஒளியாய்!
முன்னைத் தொழும்புக்கே ஆம் அன்றோ மூ உலகும்?
என்னைத் தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி
உன்னைத் தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம்.         6.3.171

6487. "'ஏனவர்க்கு வேண்டின், எளிது ஒன்றோ? எற்கு அன்பர்
ஆனவர்கள் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார்;
தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ?
வானவர்க்கும் நீயே இறை - தொல்மறை வல்லோய்!         6.3.172

6488. "'நல் அறமும், மெய்ம்மையும், நான்மறையும், நல் அருளும்,
எல்லை இலா ஞானமும், ஈறு இலா எப்பொருளும்,
தொல்லை சால் எண்குணனும், நின் சொல் தொழில் செய்க;
நல்ல உரு ஒளியாய், நாளும் வளர்க நீ.         6.3.173

நரசிங்கப்பிரான் தேவர்களை நோக்கிப் பிரகலாதனுக்கு முடிசூட்டுவதற்கு ஆவன செய்யுமாறு பணித்தல்
6489. 'என்று வரம் அருளி எவ் உலகும் கை கூப்ப
முன்றில் முரசம் முழங்க முடி சூட்ட
"நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு
ஒன்று பெருமை உரிமை புரிக" என்றான்.         6.3.174

பிரகலாதன் முடிசூட்டப் பெறுதல்

6490. 'தே மன் உரிமை புரிய திசை முகத்தோன்
ஓமம் இயற்ற உடையான் முடி சூட்ட
கோ மன்னவன் ஆகி மூ உலகும் கைக் கொண்டான்;
நாம மறை ஓதாது ஓதி நனி உணர்ந்தான்.         6.3.175

வீடணன் இராவணனை நோக்கிக் கூறிய முடிப்புரை

6491. "'ஈது ஆகும், முன் நிகழ்ந்தது; எம் பெருமான்! என் மாற்றம்
யாதானும் ஆக நினையாது, இகழ்தியேல்,
தீது ஆய் விளைதல் நனி திண்ணம்''எனச் செப்பினான்,
மேதாவிகட்கு எல்லாம் மேலாய மேன்மையான்.         6.3.176
------------------

6.4 வீடணன் அடைக்கலப் படலம் (6492- 6643)

இராவணன் வீடணன் சொல்லைக் கேட்டுச் சினந்து கூறுதல் (6492-6500)

6492. கேட்டனன் இருந்தும் அக் கேள்வி தேவியின்
கோட்டிய சிந்தையான் உறுதி கொண்டிலன்
மூட்டிய தீ என முடுகிப் பொங்கினான்
ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண்கணான்.         6.4.1

6493. "'இரணியன் என்பவன் எம்மனோரினும்
முரணியன்; அவன்தனை முருக்கி முற்றினான்,
அரணியன்''என்று, அவற்கு அன்பு பூண்டனை
மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய்'         6.4.2

6494. 'ஆயவன் வளர்த்த தன் தாதை ஆகத்தை
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்
ஏயும் நம் பகைவனுக்கு இனிய நண்பு செய்
நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ         6.4.3

6495. பாழிசால் இரணியன் புதல்வன் பண்பு எனச்
சூழ் வினை முற்றி யான் அவர்க்குத் தோற்ற பின்
ஏழை நீ என் பெருஞ் செல்வம் எய்திப் பின்
வாழவோ கருத்து? அது வர வற்று ஆகுமோ?         6.4.4

6496. 'முன்புற அனையர்பால் நண்பு முற்றினை;
வன்பகை மனிதரின் வைத்த அன்பினை;
என்பு உற உருகுதி; அழுதி; ஏத்துதி;
உன்புகல் அவர்; பிறிது உரைக்க வேண்டுமோ?         6.4.5

6497. நண்ணினை மனிதரை; நண்பு பூண்டனை;
எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு
உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை;
திண்ணிது உன் செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ?         6.4.6

6498. அன்று வானரம் வந்து நம் சோலையை அழிப்பக்
"கொன்று தின்றிடுமின்!" எனத் தூதரைக் கோறல்
வென்றி அன்று என விலக்கினை; மேல்விளைவு எண்ணி;
துன்று தாரவன் துணை எனக் கோடலே துணிந்தாய்.         6.4.7

6499. 'அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை;
தஞ்சு என மனிதர்பால் வைத்த சார்பினை;
வஞ்சனை மனத்தினை; பிறப்பு மாற்றினை;
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ?         6.4.8

6500. 'பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை;
ஒழி சில புகலுதல் : ஒல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல் விளிதி" என்றனன்
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்.         6.4.9

வீடணன் விண்ணில் எழுந்து நின்று நீதி பல கூறுதல் (6501-6503)

6501. என்றலும் இளவலும் எழுந்து வான் இடைச்
சென்றனன் துணைவரும் தானும் சிந்தியா
நின்றனன்; பின்னரும் நீதி சான்றன
ஒன்று அல பல பல உறுதி ஓதினான்.         6.4.10

6502. 'வாழியாய்! கேட்டியால்; வாழ்வு கைம் மிக
ஊழி காண்குறும் நினது உயிரை ஓர்கிலாய்
கீழ்மையோர் சொற் கொடு கெடுதல் நேர்தியோ?
வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ?         6.4.11

6503. 'புத்திரர் குருக்கள் நின் பொருவு இல் கேண்மையர்
மித்திரர் அடைந்துேளார் மெலியர் வன்மையோர்
இத்தனை பேரையும் இராமன் வெஞ் சரம்
சித்திர வதை செயக் கண்டு தீர்தியோ?         6.4.12

வீடணன் இலங்கையை விடுத்துச் செல்லுதல் (6504-6506)

6504. 'எத்துணை வகையினும் உறுதி எய்தின
ஒத்தன உணர்த்தினேன்; உணர கிற்றிலை;
அத்த! என் பிழை பொறுத்து அருளுவாய் எனா
உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான்.         6.4.13

6505. அனலனும் அனிலனும் அரன் சம்பாதியும்
வினையவர் நால்வரும் விரைவின் வந்தனர்;
கனைகழல் காலினர் கருமச் சூழ்ச்சியர்
இனைவரும் வீடணனோடும் ஏயினார்.         6.4.14

6506. அரக்கனும் ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும்,
'குரக்கு இனத்தவரொடும் மனிதர், கொள்ளை நீர்க்
கரைக்கண் வந்து இறுத்தனர்' என்ற காலையில்,
'பொருக்கென எழுதும்'என்று எண்ணிப் போயினார்.         6.4.15

வீடணன் வானரத் தானையைக் காண்டல் (6507-6508)

6507. அளக்கரைக் கடந்து மேல் அறிந்த நம்பியும்
விளக்கு ஒளி பரத்தலின் பாலின் வெண்கடல்
வளத் தடந் தாமரை மலர்ந்தது ஆம் எனக்
களப் பெருந் தானையைக் கண்ணில் நோக்கினான்.         6.4.16

6508. 'ஊன் உடை உடம்பின உயிர்கள் யாவையும்
ஏனைய ஒருதலை நிறுத்தி எண்ணினால்
வானரம் பெரிது'என மறு இல் சிந்தையான்
தூநிறச் சுடுபடைத் துணைவர்ச் சொல்லினான்.         6.4.17

இனிச் செய்வது யாதனெ வீடணன் அமைச்சரை வினவுதல்

6509. 'அறம் தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனன்;
மறந்தும் நன்புகழ் அலால் வாழ்வு வேண்டலன்;
பிறந்த என் உறுதி நீ பிடித்தியால்'எனத்
துறந்தனன்; இனிச் செயல் சொல்லுவீர் என்றான்.         6.4.18

இராமனைக் காணுமாறு அமைச்சர்கள் கூறல்
6510. 'மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை;
தாட்சி இல் பொருள்தரும் தரும மூர்த்தியைக்
காட்சியே இனிக் கடன்'என்று கல்வி சால்
சூட்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார்.         6.4.19

வீடணன் அமைச்சர் சொல்லை உடன்பட்டு மகிழ்தல் (6511-6515)

6511. 'நல்லது சொல்லினீர்; நாமும் வேறு இனி
அல்லது செய்துமேல் அரக்கர் ஆதுமால்;
எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும்; புல்லி இப்பிறவி போக்குதும்.         6.4.20

6512. 'முன்புறக் கண்டிலேன்; கேள்வி முன்பு இலேன்;
அன்பு உறக் காரணம் அறிய கிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல் அவன்
புன்புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.         6.4.21

6513. ஆதி அம் பரமனுக்கு அன்பும் நல் அற
நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும்
வேதியர் அருளும் நான் விரும்பிப் பெற்றனென்
போதுறு கிழவனைத் தவம் முன் பூண்ட நாள்.         6.4.22

6514. 'ஆயது பயப்பது ஓர் அமைதி ஆயது;
தூயது நினைந்தது; தொல்லை யாவர்க்கும்
நாயகன் மலர்க்கழல் நணுகி நம்மனத்து
ஏயது முடித்தும்'என்று இனிது மேயினான்.         6.4.23

6515. 'இருளுற எய்துவது இயல்பு அன்றாம்'என
பொருள் உற உணர்ந்த அப் புலன்கொள் புந்தியார்
மருள் உறு சூழலின் மறைந்து வைகினார்;
உருளுறு தேரவன் உதயம் எய்தினான்.         6.4.24

இராமன் கடற்கரைக்கு வருதல்

6516. அப்புறத்து இராமன் அவ் அலங்கு வேலையைக்
குப்புறக் கருதுவான் குவளை நோக்கி தன்
துப்பு உறச் சிவந்தவாய் நினைந்து சோர்குவான்
இப்புறத்து இருங்கரை மருங்கின் எய்தினான்.         6.4.25

இராமன் அங்குக் கானல் முதலியவற்றை நோக்குதல் (6517-6519)

6517. கானலும் கழிகளும் மணலும் கண்டலும்
பானலும் குவளையும் பரந்த புன்னையும்
மேல்நிறை அன்னமும் பெடையும் வேட்கைகூர்
பூ நிறை சோலையும் புரிந்து நோக்கினான்.         6.4.26

6518. தரளமும் பவளமும் தரங்கம் ஈட்டிய
திரள் மணிக் குப்பையும் கனக தீரமும்
மருளும் மென் பொதும்பரும் மணலின் குன்றமும்
புரள் நெடுந் திரைகளும் புரிந்து நோக்கினான்.         6.4.27

6519. மின் நகு மணிவிரல் தேய வீழ்கண் நீர்
துன்னரும் பெரும் சுழி அழிப்பச் சோர்வினோடு
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால்
புன்னையம் பொதும்பரும் புக்கு நோக்கினான்.         6.4.28

இராமன் கடற்கரைக் காட்சிகளால் கவலை மிகுதல் (6520-6524)

6520. கூதிர் நுண் குறும்பனித் திவலைக் கோவை கால்
மோதி வெண் திரைபொரு முடவெண் தாழைமேல்
பாதி அம் சிறையிடைப் பெடையைப் பாடு அணைத்து
ஓதிமம் துயில்வ கண்டு உயிர்ப்பு வீங்கினான்.         6.4.29

6521. அருந்துதற்கு இனிய மீன் கொணர அன்பினால்
பெருந்தடங் கொம்பிடைப் பிரிந்த சேவலை
வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு
இருந்தது கண்டு நின்று இரக்கம் எய்தினான்.         6.4.30

6522. ஒருதனிப் பேடைமேல் உள்ளம் ஓடலால்
பெருவலி வயக்குருகு இரண்டும் பேர்கில
திருகு வெஞ்சினத்தன தறெுகண் தீயன
பொருவன கண்டு தன் புருவம் கோட்டினான்.         6.4.31

6523. உள்நிறை ஊடலில் தோற்ற ஓதிமம்
கண்ணுறு கலவியில் வெல்லக் கண்டவன்
தண்நிறப் பவளவாய் இதழை தன் பொதி
வெண்நிற முத்தினால் அதுக்கி விம்மினான்.         6.4.32

6524. இத்திறம் ஏய்திய காலை எய்துறும்
வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான்
ஒத்தனன் இராமனும் உணர்வு தோன்றிய
பித்தரின் ஒருவகை பெயர்ந்து போயினான்.         6.4.33

வீடணன் வருதல்         6.4.

6525. உறைவிடம் எய்தினான் ஒருங்கு கேள்வியின்
துறை அறி துணைவரோடு இருந்த சூழலின்
முறைபடு தானையின் மருங்கு முற்றினான்
அறைகழல் வீடணன் அயிர்ப்பு இல் சிந்தையான்.         6.4.34

வானரர் வீடணனை எதிர்த்தல் (6526-6530)

6526. முற்றிய குருசிலை'முழங்கு தானையின்
உற்றனர் நிருதர் வந்து'என்ன ஒன்றினார்
'எற்றுதிர்; பற்றுதிர்; எறிதிர்'என்று இடை
சுற்றினர் உரும் எனத் தழெிக்கும் சொல்லினார்.         6.4.35

6527. தந்தது தருமமே கொணர்ந்து தான்; இவன்
வெந்தொழில் தீவினை பயந்த மேன்மையான்
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும்; நம்
சிந்தனை முடிந்தன என்னும் சிந்தையார்.         6.4.36

6528. "'இருபது கரம்; தலை ஈரைந்து" என்பர்; இத்
திரு இலிக்கு; அன்னவை சிதைந்தவோ? என்பார்
பொரு தொழில் எம்மொடும் பொருதி போர்! என்பார்
ஒருவரின் ஒருவர் முன் உறுக்கி ஊன்றுவார்.         6.4.37

6529. 'பற்றினம் சிறையிடை வைத்துப் பாருடைக்
கொற்றவர்க்கு உணர்த்துதும்'என்று கூறுவார்;
'எற்றுவது அன்றியே இவனைக் கண்டு இறை
நிற்றல் என் பிறிது?'என நெருக்கி நேர்குவார்.         6.4.38

6530. 'இமைப்பதன் முன் விசும்பு எழுந்து போயபின்
அமைப்பது என் பிறிது? இவர் அரக்கர் அல்லரோ?
சமைப்பது கொலை அலால் தக்கது யாவதோ?
குமைப்பது நலன்'என முடுகிக் கூறுவார்.         6.4.39

அனுமன் ஆணையின்படி மயிந்தனும் துமிந்தனும் வருதல் (6531-6532)

6531. இயைந்தன இயைந்தன இனைய கூறலும்
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்
நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார்.         6.4.40

6532. விலக்கினர் படைஞரை; வேதம் நீதி நூல்
இலக்கணம் நோக்கிய இயல்பர் எய்தினர்
'சலம் குறி இலர்'என அருகு சார்ந்தனர்
புலக்குறி அறநெறி பொருந்த நோக்கினார்.         6.4.41

வீடணன் முதலியோரை யார் என வினவுதல்

6533. யார்? இவண் எய்திய கருமம் யாவது?
போர் அது புரிதிரோ? புறத்து ஓர் எண்ணமோ?
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம்
சோர்விலீர் மெய்ம் முறை சொல்லுவீர் என்றான்.         6.4.42

வீடணன் துணைவனான அனலன் விடை (6534-6538)

6534. 'பகலவன் வழிமுதல் பாரின் நாயகன்
புகல் அவன் கழல் அடைந்து உய்யப் போந்தனன்
தகவு உறு சிந்தையன் தரும நீதியன்
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான்.         6.4.43

6535. 'அறநிலை வழாமையும் ஆதி மூர்த்திபால்
நிறைவரு நேயமும் நின்ற வாய்மையும்
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மாமலர்
இறையவன் தர நெடுந் தவத்தின் எய்தினான்.         6.4.44

6536. "சுடு தியைத் துகில் இடை பொதிந்த துன்மதி!
இடுதியே சிறையிடை இறைவன் தேவியை;
விடுதியேல் உய்குதி; விடாது வேட்டியேல்
படுதி" என்று உறுதிகள் பலவும் பன்னினான்.         6.4.45

6537. 'மறம் தரு சிந்தையன் மதியின் நீங்கினான்
"பிறந்தனை பின்பு; அதின் பிழைத்தி; பேர்குதி;
இறந்தனை நிற்றியேல்" என்ன இன்னவன்
துறந்தனன்'என விரித்து அனலன் சொல்லினான்.         6.4.46

6538. மயிந்தனும் அவ் உரை மனத்து வைத்து'நீ
இயைந்தது நாயகற்கு இயம்புவேன்'எனா
பெயர்ந்தனன்'தம்பியும் பெயர்வு இல் சேனையும்
அயர்ந்திலிர் காமின்!'என்று அமைவது ஆக்கியே.         6.4.47

மயிந்தன் இராமன் அடி வணங்குதல்

6539. தருமமும் ஞானமும் தவமும் வேலியாய்
மருவரும் பெருமையும் பொறையும் வாயிலாய்க்
கருணை அம் கோயிலுள் இருந்த கண்ணனை
அருள் நெறி எய்திச் சென்று அடி வணங்கினான்.         6.4.48

மயிந்தன் இராமனுக்குக் கண்டதும் கேட்டதும் கழறல் (6540-6546)

6540. 'உண்டு உரை உணர்த்துவது ஊழியாய்!'எனப்
புண்டரீகத் தடம் புரையும் புங்கவன்
மண்டலச் சடைமுடி துளக்க'வாய்மையால்
கண்டதும் கேட்டதும் கழறல் மேயினான்.         6.4.49

6541. 'விளைவினை அறிந்திலம்; வீடணப் பெயர்
நளிமலை யாக்கையன் நால்வரோடு உடன்
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு
இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான்.         6.4.50

6542. "'கொல்லுமின், பற்றுமின்" என்னும் கொள்கையால்
பல்பெருந் தானை சென்று அடர்க்கப் பார்த்து, யாம்
"நில்லுமின்" என்று,
"நீர் யாவிர்? நும் நிலை
சொல்லுமின்''என்ன ஓர் துணைவன் சொல்லினான்.         6.4.51

6543. "'முரண்புகு தீவினை முடித்த முன்னவன்
கரண்புகு சூழலே சூழக் காண்பது ஓர்
அரண் பிறிது இல் என அருளின் வேலையைச்
சரண் புகுந்தனன்" என முன்னம் சாற்றினான்.         6.4.52

6544. "'ஆயவன் தருமமும் ஆதி மூர்த்தி பால்
மேயது ஓர் சிந்தையும் மெய்யும் வேதியர்
நாயகன் தர நெடுந் தவத்து நண்ணினான்
தூயவன்" என்பது ஓர் பொருளும் சொல்லினான்.         6.4.53

6545. "'கற்புடைத் தேவியை விடாது காத்தியேல்
எற்புடைக் குன்றம் ஆம் இலங்கை; ஏழை! நின்
பொற்பு உடை முடித்தலை புரளும் என்று ஒரு
நற் பொருள் உணர்த்தினன்" என்றும் நாட்டினான்.         6.4.54

6546. "'ஏம் தொழில் இராவணன் இனிய சொன்ன நீ
சாம் தொழிற்கு உரியை; என் சார்பு நிற்றியேல்;
ஆம் தினைப் பொழுதினில் அகல்தியால் எனப்
போந்தனன்" என்றனன் புகுந்தது ஈது'என்றான்.         6.4.55

வீடணனுக்கு அடைக்கலம் கொடுப்பது பற்றி இராமன் நண்பரின் கருத்தறிதல்

6547. அப்பொழுது இராமனும் அருகில் நண்பரை
'இப் பொருள் கேட்ட நீ இயம்புவீர் இவன்
கைப் புகற் பாலனோ? கழியற் பாலனோ?
ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான்.         6.4.56

கவிக்கூற்று

6548. தடமலர்க் கண்ணனைத் தடக்கை கூப்பி நின்று
'இடன் இது; காலம் ஈது'என்ன எண்ணுவான்
கடன் அறி காவலன் கழறினான் அரோ
சுடர்நெடு மணிமுடிச் சுக்கிரீவனே.         6.4.57

சுக்கிரீவன் கூறுகின்றான் (6549-6556)

6549. நனி முதல் வேதங்கள் நாலும் நாம நூல்
மனு முதல் யாவையும் வரம்பு கண்ட நீ
இனையன கேட்கவோ எம் அனோர்களை
வினவிய காரணம்? விதிக்கும் மேல் உளாய்!         6.4.58

6550. ஆயினும், விளம்புவென், அருளின் ஆழியாய்!
ஏயினது ஆதலின்,
'அறிவிற்கு ஏற்றன,
தூய'என்று எண்ணினும்,
'துணிவு அன்று'என்னினும்
மேயது கேட்டியால்! விளைவு நோக்குவாய்.         6.4.59

6551. "வெம் முனை விளைதலின் அன்று; வேறு ஒரு
சும்மையான் உயிர் கொளத் துணிதலால் அன்று;
தம் முனைத் துறந்தது தரும நீதியோ?
செம்மை இல் அரக்கரில் யாவர் சீரியோர்.         6.4.60

6552. தகை உறு தம்முனைத் தாயைத் தந்தையை
மிகை உறு குரவரை உலகின் வேந்தனை
பகை உற வருதலும் துறந்த பண்பு இது
நகை உறல் அன்றியும் நயக்கற் பாலதோ?         6.4.61

6553. வேண்டுழி இனியன விளம்பி வெம்முனை
பூண்டுழி அஞ்சி வெஞ் செருவில் புக்கு உடன்
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன்
ஆண் தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே?         6.4.62

6554. 'மிகைப் புலம் தருமமே வேட்ட போது அவர்
தகைப் புலம் துறந்து போய்ச் சார்தல் அன்றியே
நகைப் புலம் பொது அற நடந்து நாயக!
பகைப் புலம் சார்தலோ? பழியின் நீங்குமோ?         6.4.63

6555. 'வார்க்குறு வனைகழல் தம்முன் வாழ்ந்த நாள்
சீர்க்கு உறவு ஆய் இடைச் செறுநர் சீறிய
போர்க்கு உறவு அன்றியே போந்த போது இவன்
ஆர்க்கு உறவு ஆகுவன்? அருளின் ஆழியாய்!         6.4.64

6556. 'ஒட்டிய கனக மான் உருவம் ஆகிய
சிட்டனும் மருமகன் இழைத்த தீவினை
கிட்டிய போதினில் தவமும் கேள்வியும்
விட்டது கண்டும் நாம் விடாது வேட்டுமோ?         6.4.65

6557. கூற்றுவன் தன்னொடு இவ் உலகம் கூடி வந்து
ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளம்;
மாற்றவன் தம்பி நம்மருங்கு வந்திவண்
தோற்றுமோ அன்னவன் துணைவன் ஆகுமோ?         6.4.66

6558. "அரக்கரை ஆசு அறக் கொன்று நல் அறம்
புரக்க வந்தனம்" எனும் பெருமை பூண்ட நாம்
இரக்கம் இல் அவரையே துணைக் கொண்டோம் எனின்
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால்.         6.4.67

6559. விண்டுழி ஒரு நிலை நிற்பர்; மெய்ம் முகம்
கண்டுழி ஒரு நிலை நிற்பர்; கைப் பொருள்
கொண்டுழி ஒரு நிலை நிற்பர்; கூழுடன்
உண்டுழி ஒரு நிலை நிற்பர் உற்றவர்.         6.4.68

6560. 'வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால்
'தஞ்சு'என நம் வயின் சார்ந்து உளான் அலன்;
நஞ்சினிற் கொடியனை நயந்து கோடியோ?
அஞ்சன வண்ண!'என்று அறியக் கூறினான்.         6.4.69

கவிக்கூற்று

6561. அன்னவன் பின்னுற, அலகு இல் கேள்வியால்
தன் நிகர் பிறிது இலாத் தகைய சாம்பனை,
'என்னை உன் கருத்து?'என இறை வினாயினான்;
சொல் முறை நெறி தெரிந்து அவனும் சொல்லுவான்.         6.4.70

சாம்பவன் கூறுகின்றான் (6562-6566)

6562. 'அறிஞரே ஆயினும் அரிய தெவ்வரைச்
செறிஞரே ஆவரேல் கெடுதல் திண்ணமால்;
நெறிதனை நோக்கினும் நிருதர் நிற்பது ஓர்
குறி தனி உளது என உலகம் கொள்ளுமோ?         6.4.71

6563. வெற்றியும் தருகுவர்; வினையம் வேண்டுவர்
முற்றுவர்; உறு குறை முடிப்பர் முன்பினால்;
உற்றுறு நெடும்பகை உடையர்; அல்லதூஉம்
சிற்றினத் தவரோடும் செறிதல் சீரிதோ?         6.4.72

6564. 'வேதமும் வேள்வியும் மயக்கி வேதியர்க்கு
ஏதமும் இமையவர்க்கு இடரும் ஈட்டிய
பாதகர் நம் வயின் படர்வர் ஆம் எனின்
தீது இலராய் நமக்கு அன்பு செய்வரோ?         6.4.73

6565. "கைப் புகுந்து உறு சரண் அருளிக் காத்துமேல்
பொய்க் கொடு வஞ்சனை புணர்த்த போதினும்
மெய்க் கொள விளியினும்'விடுதும்" என்னினும்
திக்கு உறும் நெடும்பழி; அறமும் சீறுமால்.         6.4.74

6566. 'மேல் நனி விளைவது விளம்பல் வேண்டுமோ?
கானகத்து இறைவியோடு உறையும் காலையில்
மான் என வந்தவன் வரவை மானும் இவ்
ஏனையன் வரவும்'என்று இனைய கூறினான்.         6.4.75

இராமன் வினவ நீலன் தன் கருத்தைக் கூறத் தொடங்கல்
6567. பால்வரு பனுவலின் துணிவு பற்றிய
சால் பெருங் கேள்வியின் தானை நாயகன்
நீலனை'நின் கருத்து இயம்பு நீ'என
மேலவன் விளம்பலும் விளம்பல் மேயினான்.         6.4.76

நீலன் சொல்லுகின்றான் (6568-6573)

6568. 'பகைவரைத் துணை எனப் பற்றற்பால ஆம்
வகை உள; அன்னவை வரம்பு இல் கேள்வியாய்!
தொகையுறக் கூறுவென்;'குரங்கின் சொல்'என
நகையுறல் இன்றியே நயந்து கேட்டியால்.         6.4.77

6569. 'தம் குலக் கிளைஞரைத் தருக்கும் போரிடைப்
பொங்கினர் கொன்றவர்க்கு எளியர் போந்தவர்
மங்கையர் திறத்தினில் வயிர்த்த சிந்தையர்
சிங்கல் இல் பெரும் பொருள் இழந்து சீறினோர்.         6.4.78

6570. 'பேர் அபிமானங்கள் உற்ற பெற்றியோர்
போரிடைப் புறங் கொடுத்து அஞ்சிப் போந்தவர்
நேர்வரு தாயத்து நிரம்பினோர் பிறர்
சீரிய கிளைஞரை மடியச் செற்றுேளார்         6.4.79

6571. அடுத்தநாட்டு அரசியல் உடைய ஆணையால்
படுத்தவர் நட்டவர், பகைஞரோடு ஒரு
மடக்கொடி திறத்திடை வைத்த சிந்தையர்,
உடன்கொளத் தகையர், நம் உழை வந்து ஒன்றினால்.         6.4.80

6572. தாம் உற எளிவரும் தகைமையார் அலர்
நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால்
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின்
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம்?         6.4.81

6573. காலமே நோக்கினும் கற்ற நூல்களின்
மூலமே நோக்கினும் முனிந்து போந்தவன்
சீலமே நோக்கி யாம் தெரிந்து தேறுதற்கு
ஏலுமே? என்று எடுத்து இனைய கூறினான்.         6.4.82

மற்றை மந்திரக் கிழவரும் அவ்வாறே கூறுகின்றனர்
6574. மற்றுள மந்திரக் கிழவர் வாய்மையால்
குற்றம் இல் கேள்வியர் அன்பு கூர்ந்தவர்
'பற்றுதல் பழுது'எனப் பழுது உறா ஒரு
பெற்றியின் உணர்வினார் முடியப் பேசினார்.         6.4.83

இராமன் அனுமனை வினவுதல்

6575. 'உறுபொருள் யாவரும் ஒன்றக் கூறினார்;
செறிபெருங் கேள்வியாய்! கருத்து என் செப்பு'என
நெறிதெரி மாருதி என்னும் நேரிலா
அறிவனை நோக்கினான் அறிவின் மேலுளான்.         6.4.84

அனுமன் கூறுகின்றான் (6576-6594)

6576. 'இணங்கினர் அறிவிலர் எனினும் எண்ணுங்கால்
கணங்கொளல் நும்மனோர் கடன்மை காண்'எனா
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
நுணங்கிய கேள்வியன் நுவல்வ தாயினான்.         6.4.85

6577. 'எத்தனை உளர் தெரிந்து எண்ண'ஏய்ந்தவர்
அத்தனைவரும் ஒருபொருளை"அன்று" என
உத்தமர் அது தெரிந்து உணர ஓதினார்;
வித்தக! இனிச் சில விளம்ப வேண்டுமோ?         6.4.86

6578. 'தூயவர் துணிதிறன் நன்று தூயதே;
ஆயினும் ஒரு பொருள் உரைப்பன் ஆழியாய்!
"தீயன்" என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன்;
மேயின சில பொருள் விளம்ப வேண்டுமால்.         6.4.87

6579. 'வண்டு உளர் அலங்கலாய்! வஞ்சர் வாள்முகம்
கண்டதோர் பொழுதினில் தெரியும்; கைதவம்
உண்டு எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ?
விண்டவர் நம்புகல் விரும்பி வீழ்வரோ?         6.4.88

6580. 'உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற
மெள்ளத் தம் முகங்களே விளம்பும்; ஆதலால்
கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள்
பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ?         6.4.89

6581. 'வாலி விண்பெற அரசு இளையவன் பெறக்
கோலிய வரிசிலை வலியும் கொற்றமும்
சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின்
மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான்.         6.4.90

6582. 'செறிகழல் அரக்கர்தம் அரசு சீரியோர்
நெறி அலது; அகலின் நிலைக்கலாமையும்
எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர்
பிறிவு அருங் கருணையும் மெய்யும் பேணினான்.         6.4.91

6583. 'காலம் அன்று இவன் வரும் காலம்'என்பரேல்
வாலிது அன்று; உறுபகை வலியது ஏறியது;
ஏலும் இங்கு இவர்க்கு இனி இறுதி; என்றலால்
மூலம் என் துணைவரைப் பிரிவு முற்றினான்.         6.4.92

6584. 'தீத்தொழில் அரக்கர் தம் மாயச் செய்வினை
வாய்த்துளர் அன்னவை உணரும் மாண்பினால்
காய்த்தவர் அவர்களே கையுற்றார்; நமக்கு
ஏற்றது ஓர் உறுதியும் எளிதின் எய்துமால்.         6.4.93

6585. "'தெளிவு உறல் அரிது இவர் மனத்தின் தீமை; நாம்
விளிவது செய்குவர்" என்ன வேண்டுதல்
ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார்
எளியவர் திறத்து இவை எண்ணல் ஏயுமோ?         6.4.94

6586. "'கொல்லுமின் இவனை" என்று அரக்கன் கூறிய
எல்லையில்"தூதரை எறிதல் என்பது
புல்லிது; பழியொடும் புணரும்; போர்த்தொழில்
வெல்லலம் பின்னர்" என்று இடை விலக்கினான்.         6.4.95

6587. "மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய
ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும்
தூதரைக் கோறலும் தூய்து அன்றாம்" என
ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான்.         6.4.96

6588. 'எல்லியில் யான் இவன் இரண மாளிகை
செல்லிய போதினும் திரிந்த போதினும்
நல்லன நிமித்தங்கள் நனி நிகழ்ந்தன;
அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய்.         6.4.97

6589. 'நிந்தனை நறவமும் நெறி இல் ஊன்களும்
தந்தன கண்டிலென்; தரும தானமும்
வந்தனை நீதியும் பிறவும் மாண்பு அமைந்து
அந்தணர் மனை எனப் பொலிந்தது ஆம் அரோ.         6.4.98

6590. 'அன்னவன் தனிமகள்"அலரின்மேல் அயன்
சொன்னது ஓர் சாபம் உண்டு;"உன்னைத் துன்மதி
நல் நுதல்! தீண்டுமேல் நணுகும் கூற்று" என
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள்.         6.4.99

6591. "பெற்று உடைய பெருவரமும், பிறந்துடைய வஞ்சனையும், பிறவும் உன்கை
வில் தொடையின் விடுகணையால் வெந்து ஒழியும்'' எனக்கருதி விரைவில் வந்தான்;
உற்றுடைய பெருவரமும் உகந்துடைய தண் அளி உம் உணர்வும் நோக்கின்,
மற்று உடையர்தாம் உளரோ, வாள் அரக்கன் அன்றியே தவத்தின் மிக்கார்.         6.4.100

6592 'தேவர்க்கும், தானவர்க்கும், திசைமுகனே முதலாய தேவ தேவர்
மூவர்க்கும், முடிப்பரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றோம்;
ஆவத்தின் வந்து"அபயம்" என்றானை அயிர்த்து அகல விடுதும் என்றால்
கூவத்தின் சிறுபுனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாதோ? கொற்ற வேந்தே!         6.4.101

6593. "'பகை புலத்தோர் துணை அல்லர்" என்று இவனைப் பற்றேமேல் அறிஞர் பார்க்கின்
நகைப்புலத்தது ஆம் அன்றே; நல் தாயம் உளது ஆய பற்றால் மிக்க
தகைப்புலத்தோர் தந்தையர்கள் தம்பியர்கள் தமையர் இவர் தாமே அன்றே,
மிகைப்புலத்து விளைகின்றது ஒருபொருளைக் காதலிக்கின் விளிஞர் ஆவர்?         6.4.102

6594. 'ஆதலால், இவன் வரவு நல்வரவே'என உணர்ந்தேன், அடியனேன்; உன்
வேத நூல் எனத்தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்றுவிட்டான்;
காதல் நான்முகனாலும் கணிப்பரிய கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று
ஓதினான், ஓத நீர் கடந்து பகை தடிந்து உலகை உய்யக் கொண்டான்.         6.4.103

அனுமன் வார்த்தை கேட்டு மகிழ்ந்து இராமன் கூறுவது (6595-6609)

6595. மாருதி வினைய வார்த்தை செவிமடுத்து அமிழ்தின் மாந்திப்
'பேர் அறிவாள! நன்று! நன்று!!' எனப் பிறரை நோக்கிச்
'சீரிது; மேல் இம் மாற்றம் தெளிவுறத் தேர்மின்'என்ன
ஆரியன் உரைப்பது ஆனான்; அனைவரும் அதனைக் கேட்டார்.         6.4.104

வீடணனை விடலாகாமைக்கு இராமன் காட்டும் விளக்கம் (6596-6609)

6596. கருத்து உற நோக்கிப் போந்த காலமும் நன்று; காதல்
அருத்தியும் அரசின் மேற்றே; அறிவினுக்கு அவதி இல்லை;
"பெருத்து உயர் தவத்தினானும் பிழைத்திலன்" என்னும் பெற்றி
திருத்தியது ஆகும் அன்றே, நம்வயின் சேர்ந்த செய்கை.         6.4.105

6597. 'மற்று இனி உரைப்பது என்னோ? மாருதி வடித்துச் சொன்ன
பெற்றியே பெற்றி; அன்னது அன்று எனின், பிறிது ஒன்றானும்,
வெற்றியே பெறுக, தோற்க, வீக, வீயாது வாழ்க,
பற்றுதல் அன்றி உண்டோ, புகல் எமைப் பகர்கின்றானை.         6.4.106

6598. 'இன்று வந்தான் என்று உண்டோ? எந்தையை யாயை முன்னைக்
கொன்று வந்தான் என்று உண்டோ? புகலது கூறுகின்றான்;
தொன்று வந்து அன்பு பேணும் துணைவனும் அவனே; பின்னைப்
பின்றும் என்றாலும், நம்பால் புகழ் அன்றிப் பிறிது உண்டாமோ?         6.4.107

6599. 'பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி
மறந்த நாள் உண்டோ? என்னைச் சரண் என்று வாழ்கின்றானைத்
துறந்த நாட்கு இன்று வந்து துன்னினான் சூழ்ச்சி யாலே
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான்.         6.4.108

6600. 'இடைந்தவர்க்கு"அபயம் யாம்" என்று இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி ஆலம் உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்?         6.4.109

6601. பேடையைப் பிடித்துத், தன்னைப் பிடிக்கவந்து அடைந்த பேதை
வேடனுக்கு உதவி செய்து விறகு இடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள்
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ?         6.4.110

6602. 'போதகம் ஒன்று, கன்றி இடங்கர் மாப் பொருத போரின்,
"ஆதி அம் பரமே! யான் உன் அபயம்!" என்று அழைத்த அந்நாள்,
வேதமும் முடிவு காணா மெய்ப் பொருள் வெளிவந்து எய்தி,
மாதுயர் துடைத்த வார்த்தை மறப்பரோ, மறப்பு இலாதார்?         6.4.111

6603'மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் மாயன்,
தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே
என்னினும், அடைந்தோர் தம்மை ஏம் உற இனிதின் ஓம்பி,
பின்னும் வீடு அளிக்கும் என்றால், பிறிது ஒரு சான்றும் உண்டோ?         6.4.112

6604. 'நஞ்சினை மிடற்று வைத்த நகை மழு ஆளன்,"நாளும்
தஞ்சு''என, முன்னம், தானே தாதைபால் கொடுத்துச்,''சாதல்
அஞ்சினேன்; அபயம்!''என்ற அந்தணற்கு ஆகி, அந்நாள்,
வெஞ்சினக் கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ?         6.4.113

6605. "'சரண் எனக்கு யார்கொல்?" என்று சானகி அழுது சாம்ப,
"அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!" என்று அருளின் எய்தி,
முரணுடைக் கொடியோன் கொல்ல, மொய் அமர் முடித்து, தயெ்வ
மரணம் என் தாதை பெற்றது என் வயின் வழக்கு அன்று ஆமோ?         6.4.114

6606. உய்ய,'நிற்கு அபயம்'என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்
கையனும், ஒருவன் செய்த உதவியில் கருத்து இலானும்,
மை உறு நெறியின் நோக்கி மாமறை வழக்கில் நின்ற
மெய்யினைப் பொய் என்றானும், மீள்கிலா நரகின் வீழ்வார்.         6.4.115

6607. 'சீதையைக் குறித்த தேயோ,
"தேவரைத் தீமை செய்த
பேதையைக் கொல்வென்''என்று பேணிய விரதப் பெற்றி
வேதியர்,"அபயம்" என்றார்க்கு, அன்று, நான் விரித்துச் சொன்ன
காதையைக் குறித்து நின்ற அவ் உரை கடக்கல் ஆமோ?         6.4. 116

6608. 'காரியம் ஆக! அன்றே ஆகுக! கருணையோர்க்குச்
சீரிய தன்மை நோக்கின், இதனின்மேல் சிறந்தது உண்டோ?
பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தோர்க்குப் பொன்றா
ஆர் உயிர் கொடுத்துக் காத்தார், எண் இலா அரசர் அம்மா?         6.4.117

6609. 'ஆதலான்,"அபயம்" என்ற போதத்தே அபய தானம்
ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினீர் என்பால் வைத்த
காதலான்; இனி வேறு எண்ணக் கடவது என்? கதிரோன் மைந்த!
கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி'என்றான்.         6.4.118

சுக்கிரீவன் வீடணனை அழைத்து வரச் செல்லுதல்

6610. ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் அமைந்தது அன்றே;
தயெ்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே; தேறி,
கை புகற்கு அமைவது ஆனான்
'கடிதினின் கொணர்வல்'என்னா,
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்பால் விரைவில் சென்றான்.         6.4.119

சுக்கிரீவன் வரவை அறிந்து வீடணன் எதிர்வரல்

6611. வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளவல் காட்டித்
"தருக என்றான் அண்ணல் நின்னை; எதிர் கொளற்கு அருக்கன் தந்த
இருகுன்றம் அனைய தோளான் எய்தினன்''என்னலோடும்,
திரிகின்ற உள்ளத் தானும், அகம் மலர்ந்து அவன்முன் சென்றான்.         6.4.120

சுக்கிரீவனும் வீடணனும் தழுவிக் கொள்ளுதல்

6612. சொல்லருங் காலம் எல்லாம் பழகினும், தூயர் அல்லார்
புல்லலர் உள்ளம்; தூயர் பொருந்துவர், எதிர்ந்த ஞான்றே;
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற, இருவரும், ஒருநாள் உற்ற
எல்லியும் பகலும் போலத், தழுவினர், எழுவின் தோளார்.         6.4.121

இராமன் அடைக்கலம் அருளியதைச் சுக்கிரீவன் வீடணனுக்குத் தெரிவித்தல்

6613. தழுவினர் நின்ற காலை,
'தாமரைக் கண்ணன் தங்கள்
முழு முதல் குலத்திற்கு ஏற்ற முறைமையால் உவகை மூள
வழுவல் இல் அபயம் உன்பால் வழங்கினன் அவன் பொற் பாதம்
தொழுதியால், விரைவின்'என்று கதிரவன் சிறுவன் சொன்னான்.         6.4.122

சுக்கிரீவன் சொல்லைக் கேட்ட வீடணனின் விழுமிய மகிழ்ச்சி (6614-6618)

6614. சிங்க ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி புகாமுன்,
கங்குலின் நிறத்தினான் தன் கண், மழைத் தாரை கான்ற;
அங்கமும் மனம் அது என்னக் குளிர்ந்தது; அவ் அகத்தை மிக்குப்
பொங்கிய உவகை என்னப் பொடித்தன உரோமப் புள்ளி.         6.4.123

6615. "பஞ்சு" எனச் சிவக்கும் மென் கால் தேவியைப் பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை,
"வருக!" என்று அருள் செய்தானோ?
தஞ்சு எனக் கருதினானோ? தாழ்சடைக் கடவுள் உண்ட
நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ, நாயகன் அருளின் நாயேன்?         6.4.124

6616. 'மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான்; வானம் அத்து
உருளுறு தேரினானும், இலங்கை மீது ஓடும் அன்றே?
தரெுளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின், செய்யும்
அருள் இது வாயின் கெட்டேன்! பிழைப்பரோ அரக்கர் ஆனோர்?         6.4.125

6617. தீர்வு அரும் இன்னல் தம்மைச் செய்யினும் செய்ய சிந்தைப்
பேர் அருளாளர் தத்தம் செய்கையிற் பிழைப்பது உண்டோ?
கார் வரை நிறுவித், தன்னைக் கனல் எழக் கலக்கக் கண்டும்
ஆர்கலி அமரர் உய்ய அமிழ்து பண்டு அளித்தது அன்றே?         6.4.126

6618. துறவியின் உறவு பூண்ட தூயவர் துணைவன் என்னை
உறவு உவந்து அருளி, மீளா அடைக்கலம் உதவினானேல்,
அறவினை இறையும் இல்லா, அறிவு இலா, அரக்கன் என்னும்
பிறவியின் பெயர்ந்தேன்; பின்னும் நரகினில் பிழைப்ப தானேன்.         6.4.127

இராமன்பால் விரைவில் செல்லுமாறு சுக்கிரீவன் சொல்லுதல்

6619. திருத்திய உணர்வு மிக்க செங்கதிர்ச் செல்வன் செம்மல்,
'ஒருத்தரை நலனும் தீங்கும் தேரினும், உயிரின் ஓம்பும்
கருத்தினன் அன்றே, தன்னைக் கழல் அடைந்தோரை; காணும்
அருத்தியன், அமலன்; தாழாது ஏகுதி அறிஞ! என்றான்.         6.4.128

வீடணனும் சுக்கிரீவனும் இராமனை அடைதல்
6620. மொய்தவழ் கிரிகள் மற்றும் பலவுடன் முடுகிச் செல்ல,
மை தவழ் கிரியும் மேருக் குன்றமும் வருவது என்ன,
செய்தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய
எய்தவன் இருந்த சூழல், இருவரும் எய்தச் சென்றார்.         6.4.129

வீடணன் இராமனைக் காணுதல் (6621-6629)
6621. மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்ப
நாற் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாமப்
பாற்கடல் சுற்ற வில் கை வடவரை பாங்கு நிற்பக்
கார்க் கடல் கமலம் பூத்தது எனப் பொலிவானைக் கண்டான்.         6.4.130

6622. அள்ளி மீது உலகை வீசும் அரிக் குலச் சேனை நாப்பண்,
தெள்ளுதண் திரையிற்று ஆகிப் பிறிது ஒரு திறனும் சாரா
வெள்ளி வெண் கடலில் மேல் நாள் விண்ணவர் தொழுது வேண்டப்
பள்ளி தீர்ந்து இருந்தான் என்னப் பொலிதரு பண்பினானை;         6.4.131

6623. கோணுதற்கு அமைந்த கோலப் புருவம் போல் திரையுங் கூடப்,
பூணுதற்கு இனிய முத்தின் பொலி மணல் பரந்த வைப்பின்
காணுதற்கு அரிய நீள வெண்மையில் கருமை காட்டி,
வாள் நுதல் சீதை கண்ணின் மணி என வயங்கு வானை.         6.4.132

6624. படர்மழை சுமந்த காலைப் பருவ வான், அமரர் கோமான்
அடர்சிலை துறந்தது என்ன ஆரம்தீர் மார்பினானைக்
கடல் கடை மத்துத் தாம்பு கழற்றியது என்னக், காசின்
சுடர் ஒளி வலயம் தீர்ந்த சுந்தரத் தோளினானை;         6.4.133

6625. கற்றை வெண் நிலவு நீக்கிக் கருணை ஆம் அமிழ்தம் காலும்
முற்றுறு கலையிற்று ஆய முழு மதி முகத்தினானை;
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெறத், தான் பெற்ற
சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னியானை;         6.4.134

6626.வீரனை நோக்கி அங்கம் மென் மயிர் சிலிர்ப்பக் கண்ணீர்
வார, நெஞ்சு உருகி,"செங்கண் அஞ்சன மலை! அன்று ஆகின்
கார்முகில் கமலம் பூத்தது ஆம்; இவன் கண்ணன் கொல் ஆம்;
ஆர் அருள் சுரக்கும் நீதி அறம் நிறம் கரிதோ?''என்றான்.         6.4.135

6627.மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்கச்,
செம்மணி மகுடம் நீக்கித், திருவடி புனைந்த செல்வன்
தன் முனார், கமலத்து அண்ணல் தாதையார், சரணம் தாழ,
என்முனார் எனக்குச் செய்த உதவி என்று ஏம்பல் உற்றான்.         6.4.136

6628.'பெருந்தவம் இயற்றினோர்க்கும் பேர்வு அரும் பிறவி நோய்க்கு
மருந்து என நின்றான் தானே வடிக்கணை தொடுத்துக் கொல்வான்
இருந்தனன்; என்ற போது என் இயம்புவது? எல்லை தீர்ந்த
அருந்தவம் உடையர் அம்மா அரக்கர்!' என்று அகத்துள் கொண்டான்.         6.4.137

6629.கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர்மணி முடியன், கல்லும்
மரங்களும் உருக நோக்கும் காதலன், கருணை வள்ளல்
இரங்கினன் நோக்குந் தோறும், இருநிலத்து இறைஞ்சு கின்றான்;
வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான்         6.4.138

இராமன் வீடணனுக்கு இருக்கை அளித்தல்

6630.'அழிந்தது பிறவி'என்னும் அகத்து இயல் முகத்தில் காட்ட,
வழிந்த கண்ணீரின் மண்ணின் மார்பு உற வணங்கினானைப்
பொழிந்தது ஓர் கருணை தன்னால், புல்லினன் என்ன நோக்கி
எழுந்து, இனிது இருத்தி'என்னா, மலர்க் கையால் இருக்கை ஈந்தான்.         6.4.139

இராமன் வீடணனுக்கு இலங்கையரசுரிமை யீதல்
6631.ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து உவகை கூர,
"ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந்நாள்
வாழும்நாள் அன்று காறும், வளை எயிற்று அரக்கர் வைகும்
தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன்'என்றான்.         6.4.140

6632.தீர்த்தனது அருளை நோக்கிச் செய்ததோ? சிறப்புப் பெற்றான்
கூர்த்த நல் அறத்தை நோக்கிக் குறித்ததோ? யாது கொல்லோ?
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனித்தனி"வாழ்ந்தோம்" என்னா
ஆர்த்தன உலகில் உள்ள சர அசரம் அனைத்தும் அம்மா         6.4.141

வீடணனுக்கு முடிசூட்டுமாறு இலக்குவனை யேவுதல்

6633.'உஞ்சனன் அடியனேன்'என்று ஊழ்முறை வணங்கி நின்ற
அஞ்சன மேனி யானை அழகனும் அருளின் நோக்கித்
'தஞ்ச நல் துணைவனான தவறு இலாப் புகழான் தன்னைத்
துஞ்சல் இல் நயனத்து ஐய! சூட்டுதி மகுடம்'என்றான்         6.4.142

வீடணன் இராமனுடைய பாதுகையாகிய மகுடமே சூட்ட வேண்டுதல்

6634.விளைவினை அறியும் வென்றி வீடணன், என்றும் வீயா
அளவு அறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின் ஐய!
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடன்மை தீர
இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி'என்றான்.         6.4.143

இராமன் வீடணனைத் தம்பியாக ஏற்றுக் கொள்ளுதல்
6635.'குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்; எம் உழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.         6.4.144

வீடணன் இராமனுடைய திருவடி நிலைகளைச் சூட்டிக் கொள்ளுதல்

6636.'நடு இனிப் பகர்வது என்னே? நாயக! நாயினேனை
'உடன் உதித்தவர்கேளாடும் ஒருவன்'என்று உரையா நின்றாய்,
அடிமையில் சிறந்தேன்'என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித்
தொடுகழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக் கொண்டான்.         6.4.145

6637.திருவடி முடியில் சூடிச், செங்கதிர் உச்சி சேர்ந்த
அரு வரை என்ன நின்ற அரக்கர்தம் அரசை நோக்கி,
இருவரும் உவகை கூர்ந்தார்; யாவரும் இன்பம் உற்றார்;
பொரு அரும் அமரர் வாழ்த்திப், பூமழை பொழிவது ஆனார்.         6.4.146

6638.ஆர்த்தன, பரவை ஏழும்; அவனியும், அமரர் நாடும்,
வார்த் தொழில் புணரும் தயெ்வ மங்கல முரசும் சங்கும்;
தூர்த்தன கனக மாரி; சொரிந்தன, நறுமென் சுண்ணம்;
போர்த்தது, வானத்து, அன்று, அங்கு, எழுந்தது துழனிப் பொம்மல்.         6.4.147

பிரமனும் அறமும் இடர் நீங்கி மகிழ்தல்

6639.'மொழிந்த சொல் அமிழ்தம் அன்னாள் திறத்தினின் முறைமை நீங்கி
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று இடரில் தீர்ந்தான்,
செழுந் தனி மலரோன்; பின்னை, 'இராவணன் தீமைச் செல்வம்
அழிந்தது'என்று அறனும், தன்வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே.         6.4.148

வீடணனோடு பாசறையை வலம் வருமாறு இராமன் இலக்குவற்குப் பணித்தல்

6640.இன்னது ஓர் செவ்வித்து ஆக இராமனும், இலங்கை வேந்தன்
தன் நெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் காணப்,
பல் நெடும் தானை சூழப் பகலவன் சேயும் நீயும்
மன் நெடுங் குமர! பாடி வீட்டினை வலஞ் செய்க என்றான்.         6.4.149

வீடணனைப் பாடி வீடாகிய நகர்வலம் செய்வித்தல்

6641.அந்தம் இல் குணத்தினானை அடியிணை முடியினோடும்
சந்தன விமானம் ஏற்றி, வானரத் தலைவர் தாங்க,
'இந்திரற்கு அரிய செல்வம் எய்தினான் இவன்'என்று ஏத்தி
மந்தரத் தடந்தோள் வீரர் வலஞ் செய்தார் தானை வைப்பை.         6.4.150

கவிக்கூற்று

6642.தேடுவார் தேட நின்ற சேவடி, தானும் தேடி
நாடுவான், அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர்
ஆடுவார் பாவம் அஞ்சும் நீங்கி, மேல் அமரர் ஆவார்;
சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர்? கண்டீர்.         6.4.151

பெரியோர் வியப்பு

6643.இற்றை நாள் அளவும், பாரில் இருடிகள், இமையோர், ஞானம்
முற்றினார், அன்பு பூண்டார், வேள்விகள் முடித்து நின்றார்,
மற்றும் மாதவரும், எல்லாம், 'வாள் எயிற்று இலங்கை வேந்தன்
பெற்றது ஆர் பெற்றார்!'என்று வியந்தனர், பெரியோர் எல்லாம்.         6.4.152
------------------

6.5 இலங்கை வேள்விப் படலம் (6644- )

வீடணனுக்கு இராமன் இடமளித்தல்

6644. வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ் வழித்
தந்தனன் விடுத்த பின் இரவி'தன்கதிர்
சிந்தின வெய்ய'என்று எண்ணித் தீர்ந்தனன்.         6.5.1

இராமன் அந்திவந்தனை முடிக்க இரவு வருதல்

6645. சந்தி வந்தனைத் தொழில் முடித்துத் தன் நெடும்
புந்தி நொந்து இராமனும் உயிர்ப்பப் பூங்கணை
சிந்தி வந்து இறுத்தனன் மதனன்; தீ நிறத்து
அந்தி வந்து இறுத்தது; கறுத்தது அண்டமே.         6.5.2

விண்மீன்கள் விளங்குதல்

6646. மாத் தடந் திசைதொறும் மறைந்த வல் இருள்
கோத்தது கரும் கடல் கொள்ளை கொண்டு என;
நீத்த நீர்ப் பொய்கையில் நிறைந்த நாள்மலர்
பூத்த போல் மீன்களால் பொலிந்தது அண்டமே.         6.5.3

மல்லிகை மலர்தல்

6647. சில் இயல் கோதையை நினைந்து தேம்பிய
வில்லியைத் திரு மனம் வெதுப்பும் வெம்மையால்
எல்லியைக் காண்டலும் மலர்ந்த ஈட்டினால்
மல்லிகைக் கானமும் வானம் ஒத்ததே.         6.5.4

சந்திரன் எழுதல்

6648. ஒன்றும் உட் கறுப்பினோடு ஒளியின் வாள் உரீஇத்
'தனிதனி முகத்தினால் என்னைத் தாழ்த்து அற
வென்றவன் துணைவனை இன்று வெல்குவேன்'
என்றது போல வந்து எழுந்தது இந்துவே.         6.5.5

நிலவு வீசுதல்

6649. 'கண்ணினை அப்புறம் கரந்து போகினும்
பெண் இறை உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு'என
உள் நிறை நெடுங் கடல் உலகம் எங்கணும்
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான்.         6.5.6

கடல் ஒலித்தல்

6650. புடைக்க வன் திரை எடுத்து ஆர்க்கும் போர்க் கடல்
உடைக்கருந் தனிநிறம் ஒளித்துக் கொண்டவன்
அடைக்க வந்தான் எனை அரியின் தானையால்
கிடைக்க வந்தான்'எனக் கிளர்ந்தது ஒத்ததே.         6.5.7

நிலவொளி பாய்தல்

6651. மேல் உகத் தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம்
தோல் உகுத்தால் என அரவத் தொல்கடல்
வாலுகத்தால் இடைப் பரந்த வைப்பு எலாம்
பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால்.         6.5.8

தென்றலால் இராமன் வருந்தல்

6652. மன்றல் வாய் மல்லிகை எயிறு வண்டு இனம்
கன்றிய நிறத்தது நறவின் கண்ணது
குன்றின் வாய் முழையின் நின்று உலாய கொட்பது
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்துச் சென்றதால்.         6.5.9

மன்மதன் அம்புகளாலும் நிலவின் கதிர்களாலும் இராமன் வருந்துதல்

6653. கரத்தொடும் பாழிமாக் கடல் கடைந்துளான்
உரத்தொடும் கரனொடும் உருவ ஓங்கிய
மரத்தொடும் தொளைத்தவன் மார்பில் மன்மதன்
சரத்தொடும் பாய்ந்தன நிலவின் தாரைவாள்.         6.5.10

இராமன் உடல் முதலியவற்றை நோக்குதல்

6654. உடலினை நோக்கும்; இன் உயிரை நோக்கும்; உள்
இடரினை நோக்கும்; மற்று யாதும் நோக்கலன்;
கடலினை நோக்கும்; அக்கள்வன் வைகுறும்
திடரினை நோக்கும்; தன் சிலையை நோக்குமால்.         6.5.11

இராமன் சீதையின் நினைவால் சிந்தை கலங்கல்

6655. பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால்
பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான்
அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ?         6.5.12

சுக்கிரீவன் இராமனை நோக்கி வீடணனோடு மேல் நிகழ்வதை எண்ணுக எனல்

6656. ஆயது ஓர் அளவையின் அருக்கன் மைந்தன்'நீ
தேய்வது என்? காரியம் நிரப்பும் சிந்தையை;
மேயவன் தன்னொடும் எண்ணி மேல் இனித்
தூயது நினைக்கிலை'என்னச் சொல்லினான்.         6.5.13

6657. அவ்வழி உணர்வு வந்து அயர்வு நீங்கினன்
'செவ்வழி அறிஞனைக் கொணர்தி சென்று'என
'இவ்வழி வருதி'என்று இயம்ப எய்தினான்.
வெவ்வழி விலங்கி நல் நெறியை மேவினான்.         6.5.14

6658. மருக் கிளர் தாமரை வாச நாள் மலர்
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்
திரு கிளர் தாமரை பணிந்த செம்மலை
'இருக்க ஈண்டு எழுந்து'என இருந்த காலையில்.         6.5.15

6659.'ஆர்கலி இலங்கையின் அரணும் அவ் வழி
வார்கெழு கனைகழல் அரக்கன் வன்மையும்
தார்கெழு தானையின் அளவும் தன்மையும்
நீர்கெழு தன்மையாய்! நிகழ்த்துவாய்'என்றான்.         6.5.16

வீடணன் இராமனது வினாவிற்கு விடைகூறத் தொடங்குதல்

6660. எழுதலும்'இருத்தி'என்று இராமன் ஏயினான்
முழுது உணர் புலவனை; முளரிக் கண்ணினான்
பழுது அற வினவிய பொருளைப் பண்பினால்
தொழுது உயர் கையினான் தெரியச் சொல்லினான்.         6.5.17

இலங்கையின் பிறப்பு

6661. 'நிலையுடை வடவரை குலைய நேர்ந்து அதன்
தலை என விளங்கிய தமனியப் பெரு
மலையினை மும்முடி வாங்கி ஓங்கு நீர்
அலைகடல் இட்டனன் அனுமன் தாதையே.         6.5.18

இலங்கை சூழ் மதிலின் சிறப்பு

6662. 'ஏழு நூறு யோசனை அகலம் இட்ட கீழ்
ஆழம் நூறு யோசனை ஆழிமால் வரை
வாழியாய்! உலகினை வளைந்த வண்ணமே
சூழும் மா மதில்; அது சுடர்க்கும் மேலதால்.         6.5.19

மதிற்பொறி முதலியன

6663. 'மருங்குடை வினையமும் பொறியின் மாட்சியும்
இருங்கடி அரணமும் பிறவும் எண்ணினால்
சுருங்கிடும்; என்பல சொல்லில்? சுற்றிய
கரும் கடல் அகழ் அது; நீரும் காண்டிரால்.         6.5.20

இலங்கையின் வடக்கு வாயில் காப்போர்

6664. 'வடதிசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்
இடை இலர் எண் இரு கோடி என்பரால்;
கடை யுக முடிவினில் காலன் என்பது என்?
விடைவரு பாகனைப் பொருவும் வெம்மையார்.         6.5.21

மேற்றிசை வாயில் வீரர்

6665. 'மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு
ஏற்றமும் உள அவர்க்கு இரண்டு கோடி மேல்;
கூற்றையும் கண் பொறி குறுகக் காண்பரேல்
ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்பரால்.         6.5.22

தென் திசை வாயில் வீரர

6666. 'தென் திசை வாயிலின் வைகும் தீயவர்
என்றவர் எண் இரு கோடி என்பரால்;
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என்?
வன் திறல் யமனையும் அரசு மாற்றுவார்.         6.5.23

கிழக்கு வாயில் வீரர்

6667. 'கீழ்த்திசை வாயிலின் வைகும் கீழவர்
ஈட்டமும் எண் இரு கோடி என்பரால்;
கோட்டு இருந் திசை நிலைக் கும்பக் குன்றையும்
தாள் துணை பிடித்து அகன் தரையின் எற்றுவார்'.         6.5.24

விண்ணினும் மண்ணினும் காவல்செய் வீரர்

6668. 'விண் இடை விழித்தனர் நிற்கும் வெய்யவர்
எண் இரு கோடியின் இரட்டி என்பரால்;
மண்ணிடை வானவர் வருவர் என்றவர்
கண் இலர் கரை இலர் கரந்து போயினார்.         6.5.25

மதிலின் புறத்தும் அகத்தும் காப்போர்

6669. 'பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும்
உறங்கலர் உண் பதம் உலவை ஆதலால்
கறங்கு எனத் திரிபவர் கணக்கு வேண்டுமேல்
அறைந்துளது ஐ இரு நூறு கோடியால்.         6.5.26

நகர் காவல்

6670. 'இப்படி மதில் ஒரு மூன்று; வேறு இனி
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ?
மெய்ப் பெருந் திரு நகர் காக்கும் வெய்யவர்
முப்பது கோடியின் மும்மை முற்றினார்.         6.5.27

இராவணனால் சிறப்புப் பெற்ற வீரர்கள்

6671. 'சிறப்பு அவன் செய்திடச் செல்வம் எய்தினார்
அறப் பெரும் பகைஞர்கள் அளவு இல் ஆற்றலர்
உறப் பெரும் பகை வரின் உதவும் உண்மையர்
இறப்பு இலர் எண் இரு நூறு கோடியே!'.         6.5.28

கோயில் வாயில் காப்போர்

6672. "'விடம் அல விழி" எனும் வெகுளிக் கண்ணினர்
"கடன் அல இமைத்தலும்" என்னும் காவலர்
வடவரை புரைவன கோயில் வாயிலின்
இடம் வலம் வருபவர் எண் எண் கோடியால்.         6.5.29

அரண்மனை முன்றிலில் உள்ள வீரர்

6673. 'அன்றியும் அவன் அகன் கோயில் ஆய் மணி
முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின்
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார்
குன்றினும் வலியவர் கோடி கோடியால்.         6.5.30

தேர் முதலிய நால்வகைப் படைகளின் அளவு

6674. 'தேர் பதினாயிரம் பதுமம்; செம் முகக்
கார் வரை அவற்றினுக்கு இரட்டி; கால் வயத்து
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி; ஒட்டகம்
தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே.         6.5.31

6675. 'பேயினன் என் பல பிதற்றிப் பேர்த்து? அவன்
மா இரு ஞாலத்து வைத்த மாப்படை
தேயினும் நாள் எலாம் தேய்க்க வேண்டுவது
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய்!         6.5.32

இராவணன் துணைவரின் பெருமை கூறத் தொடங்குதல்
6676. 'இலங்கையின் அரண் இது படையின் எண் இது;
வலங்கையின் வாள் சிவன் கொடுக்க வாங்கிய
அலங்கல் அம் தோளவன் துணைவர் அந்தம் இல்
வலங்களும் வரங்களும் தவத்தின் வாய்த்தவர்.         6.5.33

கும்பன் பெருமை
6677. தும்பி ஈட்டமும், இரதமும், புரவியும், தொடர்ந்த
அம் பொன் மாப்படை ஐ இரு கோடி கொண்டு அமைந்தான்.
செம் பொன் நாட்டு உள சித்தரைச் சிறையிடை வைத்தான்
கும்பன் என்று உளன், ஊழி வெம் கதிரினும் கொடியான்.'         6.5.34

அகம்பன் பெருமை
6678. 'உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான்,
சுகம் பல் போர் அலால் வேறு இலன், பொரு படைத் தொகையான்,
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான்,
அகம்பன் என்று உளன், அலை கடல் பருகவும் அமைவான்.'         6.5.35

நிகும்பன் பெருமை
6679. 'பொருப்பை மீதிடும் புரவியும், பூட்கையும், தேரும்,
உருப்ப வில் படை ஒன்பது கோடியும் உடையான்,
செருப் பெய் வானிடைச் சினக் கடாய் கடாய் வந்து செறுத்த
நெருப்பை வென்றவன், நிகும்பன் என்று உளன், ஒரு நெடியோன்.'         6.5.36

        6.5.
மகோதரன் பெருமை
6680. 'பேயை யாளியை யானையைக் கழுதையைப் பிணித்த
ஆய தேர்ப் படை ஐ இரு கோடி கொண்டு அமைந்தான்
தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா
மாயையான் உளன், மகோதரன் என்று ஒரு மறவோன்.'         6.5.37

வேள்விப் பகைஞன் பெருமை
6681. 'குன்றில் வாழ்பவர் கோடி நால் ஐந்தினுக்கு இறைவன்
"இன்று உளார் பின்னை நாளை இலார்" என எயிற்றால்
தின்றுளான், பண்டு தேவரைப் பல் முறை செருவின்
வென்றுளான், உளன், வேள்வியின் பகைஞன், ஓர் வெய்யோன்.'         6.5.38

சூரியன் பகைஞன் பெருமை
6682. "'மண் உளாரையும் வானின் உள்ளாரையும் வகுத்தால்,
உண்ணும் நாள் ஒரு நாளினில்'' ஒளிர் படைத் தானை
எண்ணின் நால் இரு கோடியன், எரி அஞ்ச விழிக்கும்
கண்ணினான் உளன், சூரியன் பகை என்று ஓர் கழலான்.'         6.5.39

பெரும்பக்கன் பெருமை
6683. 'தேவரும், தக்க முனிவரும், திசை முகன் முதலா
மூவரும் பக்கம் நோக்கியே மொழிதர, முனிவான்,
தாவரும் பக்கம் எண் இரு கோடியின் தலைவன்,
மா பெரும் பக்கன் என்று உளன், குன்றினும் வலியான்.'         6.5.40

வச்சிரதந்தன் பெருமை
6684. உச்சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன்,
நச்சிரப்படை நால் இரு கோடிக்கு நாதன்,
முச்சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு அரும் மொய்ம்பன்,
வச்சிரத்து எயிற்றவன், உளன், கூற்றுவன் மாற்றான்.         6.5.41

பிசாசன் பெருமை
6685. அசஞ்சலப் படை ஐ இரு கோடியன், அமரின்
வசம் செயாதவன், தான் அன்றிப் பிறர் இலா வலியான்,
இசைந்த வெஞ் சமத்து இயக்கரை வேரோடும் முன் நாள்
பிசைந்து மோந்தவன், பிசாசன் என்று உளன், ஒரு பித்தன்.         6.5.42

6686. 'சில்லி மாப் பெரும் தேரோடும், கரி, பரி, சிறந்த
வில்லின் மாப்படை ஏழ் இரு கோடிக்கு வேந்தன்,
கல்லி மாப்படி கலக்குவன், கனல் எனக் காந்திச்
சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்று அறம் துறந்தோன்.'         6.5.43

விரூபாக்கன் பெருமை
6687. கை நாட்டன்ன எறிகடல் தீவிடை உறையும்
அலங்கல் வேல் படை ஐ இரு கோடிக்கும் அரசன்,
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான்,
விலங்கு நாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான்.         6.5.44

6688. நாமம் நாட்டிய சவம் எலாம் நாள்தொறும் ஒருவர்
ஈம நாடு இடை இடாமல்தன் எயிற்று இடை இடுவான்,
தாமம் நாட்டிய கொடிப் படைப் பதுமத்தின் தலைவன்,
தூம நாட்டத்தன் என்று உளன் தேவரைத் துரந்தான்.         6.5.45

போர்மத்தன், வயமத்தன் பெருமை
6689. 'போரில் மத்தனும், பொருவய மத்தனும், புலவர்
நீரில் மத்து எனும் பெருமையர்; நெடுங் கடற் படையார்;
ஆரும் அத்தனை வலி உடையார் இலை; அவரால்
பேரும், அத்தனை எத்தனை உலகமும்; பெரியோய்!         6.5.46

பிரகத்தன் பெருமை (6690-6691)
6690. இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன்
அன்னவன் பெருந் துணைவராய், அமர்த் தொழிற்கு அமைந்தார்?
சொன்ன சொன்னவர் படைத்துணை இரட்டியின் தொகையான்
பின்னை எண்ணுவான் பிரகத்தன் என்று ஒரு பித்தன்.         6.5.47

கும்பகன்னன் பெருமை
6691. சேனை காவலன்; இந்திரன் சிந்துரச் சென்னி
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல,
ஏனை வானவர் இருக்கை விட்டு இரியல் உற்று அலையச்
சோனை மாரியின் சுடு கணை பலமுறை துரந்தான்.         6.5.48

கும்பகன்னன் பெருமை
6692. தம்பி; முற் பகல் சந்திரர் நால்வரில் தயங்கும்
கும்ப மால் கரிக் கோடு இரு கைகளால் வாங்கிச்
செம்பொன் மால் வரை மதம் பட்டதாம் எனத் திரிந்தான்,
கும்ப கன்னன் என்று உளன் பண்டு தேவரைக் குமைத்தான்.         6.5.49

இந்திரசித்தின் பெருமை
6693. 'கோள் இரண்டையும் கொடுஞ்சிறை வைத்த அக் குமரன்
மூளும் வெம் சினம் அத்து இந்திர சித்து என மொழிவான்;
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னைத்,
தாளினும் உள, தோளினும் உள, இனம் தழும்பு.'         6.5.50

அதிகாயன் பெருமை
6694. தன்னையும் தறெும் தருமம் என்று இறை மனம் தாழான்,
முன்னவன் தரப் பெற்றது ஓர் முழு வலிச் சிலையான்,
அன்னவன் தனக்கு இளையவன், அப் பெயர் ஒழித்தான்,
பின் ஓர் இந்திரன் இலாமையின்; பேர் அதிகாயன்.         6.5.51

தேவாந்தகன், நராந்தகன், திரிசிரன் என்பார் பெருமை
6695. தேவராந்தகன் நராந்தகன், திரிசிரா, என்னும்
மூவர் ஆம்"தகை முதல்வராம் தலைவரும் முனையில்
போவராம்; தகை அழிவராம்'' எனத் தனிப் பொருவார்
ஆவராம் தகை இராவணற்கு அரும் பெறல் புதல்வர்.         6.5.52

இராவணன் பெருமை (6696-6700)
6696. இனைய தன்மையர் வலி இதாம் இராவணன் என்னும்
அனையவன் திறம் யான் அறி அளவு எலாம் அறைவென்;
தனையன், நான் முகன் தகை மகன் சிறுவற்குத் தவத்தால்,
முனைவர் கோன் வரம், முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான்.         6.5.53

வெள்ளிமலையை அள்ளி எடுத்தது
6697. எள் இல் ஐம் பெரும் பூதமும் யாவையும் உடைய
புள்ளி மான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும்
வெள்ளி அம் பெருங் கிரியினை வேரோடும் வாங்கி
அள்ளி விண் தொட எடுத்தனன் உலகெலாம் அனுங்க.         6.5.54

திசையானை மருப்பு ஒசித்த திறம்
6698. 'ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை,
ஊன்று கோடு இறத் திரள் புயத்து அழுத்திய உரவோன்,
தோன்றும் என்னவே துணுக்கம் உற்று இரிவர், அத்தொகுதி
மூன்று கோடியின் மேல் ஒரு முப்பத்து மூவர்.'         6.5.55

காலகேயரை வென்றமை
6699. குலங்கேளாடு தம் குல மணி முடியொடும் குறைய,
அலங்கல் வாள்கொடு காலகேயரைக் கொன்ற அதன்பின்,
'இலங்கை வேந்தன்" என்று உரைத்தலும், இடி உண்ட அரவின்
கலங்குமால் இனம் தானவர் தேவியர் கருப்பம்.'         6.5.56

வடதிசையில் குபேரனை வென்றமை
6700. 'குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன்,
திரண்ட மாடும், தன் திருவொடு நிதியமும், இழந்து,'
புரண்டு மான்திரள் புலி கண்டது ஆம் எனப், போனான்
இரண்டு மானமும், இலங்கை மா நகரமும் இழந்து.'         6.5.57

தென்திசையில் அந்தகனை வென்றது
6701. "'புண்ணும் செய்தது முதுகு" எனப் புறம் கொடுத்து ஓடி,
"உண்ணும் செய்கை அத் தசமுகக் கூற்றம் தன் உயிர்மேல்
நண்ணும் செய்கையது''எனக் கொடு, நாள் தொறும், தன் நாள்
எண்ணும் செய்கையன், அந்தகன், தன் பதம் இழந்தான்.'         6.5.58

மேற்றிசையில் வருணனை வென்றமை
6702. 'இருள் நன்கு ஆசு அற, எழு கதிரவன் நிற்க; என்றும்
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை, மண்டு அமரில்
பருணன் தன் பெரும் பாசமும் பறிப்பு உண்டு, பயத்தால்
வருணன் உய்ந்தனன், மகர நீர் வெள்ளத்து மறைந்து.'         6.5.59

இராவணன் தோள் வலிமை
6703. 'என்று, உலப்புறச் சொல்லுகேன், இராவணன் என்னும்
குன்று உலப்பினும் உலப்பு இலாத் தோளினான் கொற்றம்'
இன்று உலப்பினும், நாளையே உலப்பினும், சிலநாள்
சென்று உலப்பினும், நினக்கு அன்றிப், பிறர்க்கு என்றும் தீரான்.         6.5.60

அனுமன் இலங்கையில் செய்த வெற்றிச் செயல்கள்
6704. 'ஈடு பட்டவர் எண்ணிலர் தோரணத்து எழுவால்;
பாடு பட்டவர் பகுகடல் மணலினும் பலரால்;
சூடு பட்டது தொல்நகர்; அடுபுலி துரந்த
ஆடு பட்டது பட்டனர் அனுமனால் அரக்கர்.         6.5.61

கிங்கரரை வதைத்தது
6705. 'எம் குலத்தவர் எண்பதினாயிரர் இறைவ
கிங்கரப் பெயர் கிரியன தோற்றத்தர் கிளர்ந்தார்
வெங் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கிச்
சங்கரற்கு அழி முப்புரத்தவர் எனச் சமைந்தார்.         6.5.62

சம்புமாலியை வதைத்தது
6706. வெம்பும் மாக் கடல் சேனை கொண்டு எதிர்பொர வெகுண்டான்,
அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி
உம்பர் வானகத்து ஒரு தனி நமனைச் சென்று உற்றான்,
சம்பு மாலியும், வில்லினால் சுருக்குண்டு தலைவ!         6.5.63

பஞ்ச சேனாதிபதிகளை வதைத்தது
6707. 'சேனைக் காவலர் ஒர் ஐவர் உளர், பண்டு தேவர்
வானைக் காவலும் மானமும் மாற்றிய மறவர்,
தானைக் கார்வருங் கடலொடும், தமரோடும், தாமும்,
யானைக் கால்பட்ட செல் என, ஒல்லையின் அவிந்தார்.         6.5.64

அனுமன் அரக்கனை அழித்தது
6708. காய்த்த அக்கணத்து அரக்கர்தம் உடல் உகு கறைத் தோல்,
நீத்த எக்கரின், நிறைந்துள; கருங்கடல் நெருப்பின்
வாய்த்த அக்கனை, வரிசிலை மலையொடும் வாங்கி,
தேய்த்த அக் குழம்பு உலர்ந்தில, இலங்கையின் தரெுவில்.         6.5.65

அனுமனது வீரப் பெருமை
6709. சொன்ன மாமதில் இலங்கையின் பரப்பினில் துகைத்துச்
சின்னம் ஆனவர் கணக்கினை யாவரே தெரிப்பார்?
இன்னம் ஆர் உளர், வீரர் மற்று? இவன் சுட எரிந்த
அன்ன மா நகர் அவிந்தது அக் குருதியால் அன்று.         6.5.66

திரிகூட மலையும் வெந்தமை
6710. 'விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது எவனோ?
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்றுதான் அணிந்த
கலன்கேளாடும், அச் சாத்திய துகிலொடும், கதிர்வாள்
இலங்கை வேந்தனும் ஏழு நாள் விசும்பிடை இருந்தான்!         6.5.67

எரிந்த இலங்கை பண்டுபோல் ஆதல்
6711.'நொதுமல் திண்திறல் அரக்கனது இலங்கையை நுவன்றேன்;
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன்;
இது மற்று அவ்வழி எய்தியது; இராவணன் ஏவப்
பதுமத்து அண்ணலே பண்டுபோல் அந் நகர் படைத்தான்.         6.5.68

வீடணன் வந்ததற்கும் காரணமாவது அனுமன் வீரமே
6712.'காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும், கவியின்
வேந்தும், என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று; அவ் விலங்கை
தீந்தவா கண்டும், அரக்கரைச் செருவிடை முருக்கிப்
போந்தவா கண்டும் நான் இங்குப் புகுந்தது புகழோய்!'         6.5.69

அனுமன் செயல் கேட்டு இராமன் மகிழ்தல்
6713.கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான்,
வாள் கொள் நோக்கியைப், பாக்கியம் பழுத்தன மயிலை,
நாள்கள் சாலவும் நீங்கலின், நலம் கெட மெலிந்த
தோள்கள் வீங்கித், தன் தூதனைப் பார்த்து, இவை சொன்னான்.         6.5.70

அனுமனை இராமன் பாராட்டுதல் (6714-6716)
6714. 'கூட்டினார் படை பாகத்தின் மேற்படக் கொன்றாய்;
ஊட்டினாய் எரி, ஊர் முற்றும்; இனி அங்கு ஒன்று உண்டோ?
கேட்ட ஆற்றினால், கிளி மொழிச் சீதையைக் கிடைத்தும்
மீட்டு இலாதது என் வில் தொழில் காட்டவோ? வீர!         6.5.71

6715. 'நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம்;
பின் செய்தோம் சில; அவை இனிப் பீடு ஒன்று பெறுமே?
பொன் செய் தோளினாய்! போர்ப் பெரும் படையொடும் புக்கோம்;
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம்?         6.5.72

6716. 'என்னது ஆக்கிய வலியொடு அவ் இராவணன் வலியும்
உன்னது ஆக்கினை; பாக்கியம் உருக் கொண்டது ஒப்பாய்!
முன்னது ஆக்கிய மூவுலகு ஆக்கிய முதலோன்
பின் அது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென்; பெற்றாய்.'         6.5.73

தன்புகழ் கேட்ட அனுமன் நாணமும்
வானரப்படையின் வியப்பும்
6717. என்று கூறலும், எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி,
ஒன்றும் பேசலன் நாணினால், வணங்கினன் உரவோன்;
நின்ற வானரத் தலைவரும், அரசும், அந் நெடியோன்;
வென்றி கேட்டலும், வீடு பெற்றார் என வியந்தார்.         6.5.74
--------------------

6.6 வருணனை வழி வேண்டு படலம் ( 6718 - )

இராமன் கடலைக் கடக்கும் உபாயத்தைச் சிந்திக்குமாறு வீடணனுக்குக் கூறுதல்

6718. 'தொடக்கும் என்னின் இவ் உலகு ஒரு மூன்றையும் தோளால்
அடக்கும் வண்ணமும் அழித்தலும் ஒரு பொருள் அன்றால்;
கிடக்கும் வண்ண வெங் கடலினைக் கிளர் பெருஞ் சேனை
கடக்கும் வண்ணமும் எண்ணுதி எண்ணு நூல் கற்றாய்!'         6.6.1

வீடணன் கடலை இரந்து வழிவேண்டுமாறு இராமனுக்குக் கூறுதல்

6719. 'கரந்து நின்ற நின் தன்மையை, அது செலக் கருதும்;
பரந்தது உன் திருக் குல முதல் தலைவரால்; பரிவாய்
வரம் தரும், இந்த மாக் கடல்; படை செல, வழி வேறு
இரந்து வேண்டுதி எறிதிரைப் பரவையை'என்றான்.         6.6.2

வீடணன் மொழியை இராமன் ஏற்றுக் கொள்ளுதல்
6720. 'நன்று இலங்கையர் நாயகன் மொழி'என நயந்தான்,
ஒன்று தன் பெருந் துணைவரும் புடை செல, உரவோன்,
சென்று வேலையைச் சேர்தலும், விசும்பு இடை, சிவந்த
குன்றின் மேல் நின்று குதித்தன பகலவன் குதிரை.         6.6.3

இருள் புலர்தல்

6721. கொழுங் கதிர்ப் பகைக் கோள் இருள் நீங்கிய கொள்கை,
செழுஞ் சுடர்ப் பனிக் கலை எலாம் நிரம்பிய திங்கள்
புழுங்கு வெஞ் சினத்து அஞ்சனப் பொறிவரி அரவம்
விழுங்கி நீங்கியது ஒத்தது, வேலை சூழ் ஞாலம்.         6.6.4

இராமன் வருண மந்திரத்தை எண்ணுதல்

6722. 'தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக!'என்னும்
பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணை அம் கடல் கிடந்தனன், கருங்கடல் நோக்கி;
வருண மந்திரம் எண்ணினன், விதிமுறை வணங்கி.         6.6.5

ஏழுநாள் எண்ணியும் வருணன் வாராமை

6723. பூழி சென்று தன் திரு உருப் பொருந்தவும், புரைதீர்
வாழி வெங்கதிர் மணிமுகம் வருடவும், வளர்ந்தான்;
ஊழி சென்றன ஒப்பு என, ஒரு பகல்; அவை ஓர்
ஏழு சென்றன; வந்திலன், எறி கடற்கு இறைவன்.         6.6.6

இராமன் சினங்கொளல்

6724. 'ஊற்றம் மீக் கொண்ட வேலையான்,
'உண்டு'"இலை" என்னும்
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம், யாம்'எனும் மனத்தால்,
ஏற்றம் மீக் கொண்ட புனலிடை எரி முளைத் தென்னச்
சீற்றம் மீக் கொண்டு சிவந்தன, தாமரைச் செங்கண்.         6.6.7

இராமன் சினத்தால் புருவம் வளைதல்

6725. 'மாண்ட இல் இழந்து அயரும் நான், வழி, தனை வணங்கி,
வேண்ட,"இல்லை" என்று ஒளித்தது ஆம்' என மனம் வெதும்ப,
நீண்ட வில் உடை நெடுங் கனல் உயிர்ப்பொடு நெடுநாண்
பூண்ட வில் எனக் குனித்தன, கொழுங்கடைப் புருவம்.         6.6.8

இராமனது சினச் சிரிப்பு

6726."ஒன்றும் வேண்டலர் ஆயினும், ஒருவர் பால் ஒருவர்,
சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையில் தீரார்;
இன்று வேண்டியது எறிகடல் நெறிதனை மறுத்தான்;
நன்று! நன்று!'என நகையொடும் புகை உக நக்கான்.         6.6.9

இராமன் சின மொழி (6727-6731)

6727."'பாரம் நீங்கிய சிலையினன், இராவணன் பறிப்பத்
தாரம் நீங்கிய தன்மையன், ஆதலின், தகைசால்
வீரம் நீங்கிய மனிதன்''என்று இகழ்ச்சி மேல் விளைய,
ஈரம் நீங்கியது, எறிகடல் ஆம்' என இசைத்தான்.         6.6.10

6728. புரந்து கோடலும், புகழொடு கோடலும் பொருது,
துரந்து கோடலும் என்று இவை தொன்மையின் தொடர்ந்த;
இரந்து கோடலின் இயற்கையும் தருமமும் எஞ்சக்
கரந்து கோடலே நன்று; இனி நின்றது என் கழறி?         6.6.11

6729."'கான் இடைப் புகுந்து, இருங் கனி காயொடு நுகர்ந்த
ஊன் உடைப் பொறை உடம்பினன்'' என்று கொண்டு உணர்ந்த
மீனுடைக் கடல் பெருமையும், வில்லொடு நின்ற
மானுடச் சிறு தன்மையும், காண்பரால், வானோர்.         6.6.12

6730. 'ஏதம் அஞ்சி, நான் இரந்ததே,
"எளிது" என இகழ்ந்த
ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆகப்
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர் கொண்டு பொரும,
பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர், என் படைஞர்.         6.6.13

6731. 'மறுமை கண்ட மெய்ஞ் ஞானியர் ஞாலத்து வரினும்,
வெறுமை கண்ட பின், யாவரும் யார் என, விரும்பார்;
குறுமை கண்டவர் கொழுங்கனல் என்னினுங் கூசார்;
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார்.         6.6.14

6732. திருதி என்பது ஒன்று அழிதர, ஊழியில் சினவும்
பருதி மண்டிலம் எனப் பொலி முகத்தினன் பலகால்
'தருதி வில்'எனும் அளவையில், தம்பியும் வெம்பிக்
குருதி வெங்கனல் உமிழ்கின்ற கண்ணினன் கொடுத்தான்.         6.6.15

6733. வாங்கி வெஞ்சிலை வாளி பெய் புட்டிலும் மலைபோல்
வீங்கு தோள் அயல் வீக்கினன் கோதையின் விரலால்
தாங்கி நாணினைத் தாக்கினன் தாக்கிய தமரம்
ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்துளது ஊடல்.         6.6.16

இராமனம்பு விடுதல் (6734-6735)

6734. மாரியின் பெருந் துளியினும் வரம்பு இல வடித்த
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தெரிந்து
பார் இயங்கு இரும்புனல் எலாம் முடிவினில் பருகும்
சூரியன் கதிர் அனையன சுடுசரம் துரந்தான்.         6.6.17

6735. பெரிய மால்வரை ஏழினும் பெருவலி பெற்ற
வரி கொள் வெஞ் சிலை வளர் பிறையாம் என வாங்கித்,
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும்
எரியின் மும்மடி கொடியன சுடு சரம் எய்தான்.         6.6.18

இராமன் அம்பால் கடல் பட்டபாடு (6736-6772)

6736. மீனும் நாகமும் விண்தொடு மலைகளும் விறகா
ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த,
பேன நீர் நெடு நெய் என, பெய்கணை நெருப்பாக்
கூனை அங்கியின் குண்டம் ஒத்தது, கடற் குட்டம்.         6.6.19


6737. பாழி வல் நெடுங் கொடுஞ்சிலை வழங்கிய பகழி,
ஏழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி,
ஊழி வெங் கனல் கொழுந் துகள் உருத்து எழுந்து ஓடி,
ஆழி மால்வரைக்கு அப்புறத்து இருளையும் அவித்த.         6.6.20

6738. மரும தாரையின் எரி உண்ட மகரங்கள் மயங்கிச்
செரும, வான் இடை கற்பக மரங்களும் தீய,
நிருமியா விட்ட நெடுங் கணை பாய்தலின், நெருப்போடு
உருமு வீழ்ந்தனெச், சென்றன, கடல்துளி உம்பர்.         6.6.21

6739. கூடும் வெம்பொறிக் கொடுங்கனல் தொடர்ந்தன கொளுத்த,
ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன; உம்பர்
ஆடும் மங்கையர் கருங் குழல் விளர்த்தன அளக்கர்க்
கோடு நீத்து எழு கொழும்புகைப் பிழம்பு மீக் கொள்ள.         6.6.22

6740. நிமிர்ந்த செஞ்சரம் நிறம்தொறும் படுதலும், நெய்த்தோர்
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல; உருவத்
துமிந்த துண்டமும் பலபடத் துரந்தன, தொடர்ந்து
திமிங்கிலங்களும் திமிங்கில கிலங்களும் சிதறி.         6.6.23

6741. நீறு மீச்செல நெருப்பு எழப் பொருப்பு எலாம் எரிய,
நூறும் ஆயிர கோடியும் கடுங் கணை நுழைய,
ஆறு கீழ்ப்பட அளறுபட்டு அழுந்திய அளக்கர்ச்
சேறு தீய்ந்தன; காந்தின சேடன் தன் சிரங்கள்.         6.6.24

6742. மொய்த்த மீன்குலம் முதல் அற முருங்கின, மொழியின்
பொய்த்த சான்றவன் குலம் என, பொருகணை எரிய;
உய்த்த கூம்புடை நெடுங் கலம் ஓடுவ கடுப்ப,
தய்த்த அம்பொடும் திரிந்தன தால மீன் சாலம்.         6.6.25

6743. சிந்தி ஓடிய குருதி வெங் கனலொடு செறிய,
அந்தி வானகம் கடுத்தது, அவ் அளப்பரும் அளக்கர்;
பந்தி பந்திகளாய் நெடுங் கடுங்கணை படர,
வெந்து தீந்தன, கரிந்தன, பொரிந்தன சிலமீன்.         6.6.26

6744. வைய நாயகன் வடிக்கணை குடித்திட வற்றி
ஐய நீர் உடைத்தாய் மருங்கு அருங்கனல் மண்ட
கைகலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப
வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன சிலமீன்.         6.6.27

6745. குணிப்பருங் கொடும் பகழிகள் குருதிவாய் மடுப்பக்
கணிப்பரும் புனல் கடையுறக் குடித்தலின் காந்தும்
மணிப் பருந்தடங் குப்பைகள் மறிகடல் வெந்து
தணிப்பருந் தழல் சொரிந்தன போன்றன தயங்கி.         6.6.28

6746. எங்கும் வெள்ளிடைப் படுத்தலின், இழுதுடை இனமீன்
சங்கமும், கறி கிழங்கு என, இடை இடைத் தழுவி,
அங்கம் வெந்து பேர் அளறு இடை அடுக்கிய கிடந்த;
பொங்கு நல் நெடும் புனல் அறப் பொரிந்தன போன்ற.         6.6.29

6747. அதிரும் வெங்கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப,
வெதிரின் நல் நெடுங் கான் என வெந்தன, மீனம்;
பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் துணிந்தன பொழிந்த
உதிரமும் கடல் திரைகளும் பொருவன, ஒருபால்.         6.6.30

6748. அண்ணல் வெங் கணை அறுத்திட, தெறித்து எழுந்து அளக்கர்ப்
பண்ணை வெம்புனல் படப் பட, நெருப்பொடும் பற்றி,
மண்ணில் வேர் உறப் பற்றிய நெடுமரம், மற்றும்,
எண்ணெய் தோய்ந்து என எரிந்தன, கிரிக் குலம் எல்லாம்.         6.6.31

6749. தயெ்வ நாயகன் தெரிகணை,
'திசைமுகத்து ஒருவன்
வைவு இது ஆம் என, பிழைப்பு இல மனத்தினும் கடுக,
வெய்ய அந்நெருப்பு இடை இடை பொறிந்து எழ வெறிநீர்ப்
பொய்கை தாமரை பூத்து எனப் பொலிந்தது புணரி.         6.6.32

6750. செப்பின் மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல்
தப்புமே? அது கண்டனம் உவரியில்;'தணியா
உப்பு வேலை'என்று உலகு உறு பெரும்பழி நீங்கி,
அப்பு வேலையாய் நிறைந்தது; குறைந்ததோ, அளக்கர்?         6.6.33

6751. தாரை உண்ட பேர் அண்டங்கள் அடங்கலும் தானே
வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ?
பாரை உண்பது படர்புனல்; அப்பெரும் பரவை
நீரை உண்பது நெருப்பு எனும் அப்பொருள் நிறுத்தான்!         6.6.34

6752. மங்கலம் பொருந்திய தவத்து மாதவர்
கங்குலும் பகலும் அக்கடலுள் வைகுவார்
அங்கம் வெந்திலர் அவன் அடிகள் எண்ணலால்;
பொங்கு வெங்கனல் எனும் புனலில் போயினார்.         6.6.35

6753. தென்திசை குடதிசை முதல திக்கு எலாம்
துன்றிய பெரும்புகைப் படலம் சுற்றலால்
கன்றிய நிறத்தன கதிரவன் பரி
நின்றன; சென்றில; நெறியின் நீங்கின.         6.6.36

சக்கரவாகம்

6754. பிறிந்தவர்க்கு உறுதுயர் உணரும் பெற்றியால்
அறிந்திருந்து அறிகிலர் அனையர் ஆம் எனச்
செறிந்த தம் பெடைகளைத் தேடித் தீக் கொள
மறிந்தன கரிந்தன வாளப் புள் எலாம்.         6.6.37

தேவர்கள்

6755. கமை அறு கருங் கடல் கனலி கைபரந்து
அமை வனம் ஒத்த போது அறைய வேண்டுமோ?
சுமை உறு பெரும்புகைப் படலம் சுற்றலால்
இமையவர் இமைத்தனர் வியர்ப்பும் எய்தினார்.         6.6.38

6756. பூச் செலாதவள் நடை போல்கிலாமையால்
ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும்;
தீ செலா நெறி பிறிது இன்மையால் திசை
மீச்செலா; புனலவன் புகழின் வீந்தவால்.         6.6.39

கடற்பறவைகளும் மேகமும்

6757. பம்புறும் நெடுங்கடல் பறவை யாவையும்
உம்பரின் செல்லல் உற்று உருகி வீழ்ந்தன;
அம்பரம் அம்பரத்து ஏகல் ஆற்றல
இம்பரில் உதிர்ந்தன எரியும் மெய்யன.         6.6.40

இறவாத பறவைகளின் மயக்கம்

6758. பட்டன படப்பட படாத புட்குலம்
சுட்டு வந்து எரிக் கனல் படலம் சுற்றலால்
இட்டுழி அறிகில இரியல் போவன
முட்டை என்று எடுத்தன வெளுத்த முத்து எலாம்.         6.6.41

நீர்க்குரங்குகளின் செயல்

6759. 'வள்ளலைப் பாவியேம்"மனிசன்" என்று கொண்டு
எள்ளல் உற்று உறைந்தனம்; எண் இலாம்'என
வெள்ளி வெண் பற்களைக் கிழித்து விண் உறத்
துள்ளலுற்று இரிந்தன குரங்கு சூழ்ந்தில.         6.6.42

கடலிலுள்ள அவுணர் நிலை

6760. தாம் நெடுந் தீமைகள் உடைய தன்மையார்
மாநெடுங் கடல் இடை மறைந்து வைகுவார்
தூநெடுங் குருதி வேல் அவுணர் துஞ்சினார்;
மீ நெடுங் கிரி என மிதந்து வீங்கினார்.         6.6.43

விமானம் முதலியவற்றின் நிலை

6761. தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய
பசும் பொனின் மானங்கள் உருகிப் பாய்ந்தன;
அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம்;
விசும்பிடை விளங்கிய மீனும் வெந்தவே.         6.6.44

6762. செறிவுறு செம்மைய தீயை ஓம்புவ
நெறியுறு செலவின தவத்தின் நீண்டன.
உறுசினம் உறப் பல உருவு கொண்டன
குறு முனி எனக் கடல் குடித்த கூர்ங்கணை.         6.6.45

6763. மோதல் அம் கனைகடல் முருக்கும் தீயினால்
பூதலம் காவொடும் எரிந்து பொன்மதில்
வேதலும் இலங்கையும் மீளப் போயின
தூதன் வந்தான் எனத் துணுக்கம் கொண்டதால்.         6.6.46

6764. அருக்கனில் ஒளிவிடும் ஆடகக் கிரி
உருக்கு என உருகின உதிரம் தோய்ந்தன
முருக்கு எனச் சிவந்தன; முரிய வெந்தன
கரிக் குவை நிகர்த்தன பவளக் காடு எலாம்.         6.6.47

6765. பேருஉடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்
ஓர் இடத்து உயிர் தரித்து ஒதுங்க கிற்றில
நீரிடைப் புகும் அதின் நெருப்பு நன்று எனாப்
பாரிடைக் குதித்தன பதைக்கும் மெய்யன.         6.6.48

6766. சுருள்கடல் திரைகளைத் தொலைய உண்டு அனல்
பருகிடப் புனலில பகழி பார் இடம்
மருள் கொளப் படர்வன நாகர் வைப்பு எலாம்
இருள் கெடச் சென்றன இரவி போல்வன.         6.6.49

6767. கரும்புறக் கடல்கேளாடு உலகம் காய்ச்சிய
இரும்பு உறச் செல்வன இழிவ கீழ் உற
அரும் புறத்து அண்டமும் உருவி அப்புறம்
பெரும்புறக் கடலையும் தொடர்ந்து பின்செல்வ.         6.6.50

மணிகளும் பாம்புகளும்

6768. திடல் திறந்து உகும் மணித் திரள்கள் சேண்நிலம்
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன
கடல் திறந்து எங்கணும் வற்ற அக்கடல்
குடல் திறந்தன எனக் கிடந்த கோள் அரா.         6.6.51

மணியும் சங்கும்

6769. ஆழியின் புனல் அற மணிகள் அட்டிய
பேழையின் பொலிந்தன பரவை; பேர்வு அறப்
பூழையின் பொருகணை உருவப் புக்கன
மூழையின் பொலிந்தன முரலும் வெள்வளை.         6.6.52

குன்றும் முத்தும்

6770. நின்று நூறாயிரம் பகழி நீட்டலால்
குன்று நூறாயிரம் கோடி ஆயின;
சென்று தேய்வு உறுவரோ புலவர் சீறினால்?
ஒன்று நூறு ஆயின உவரி முத்து எலாம்         6.6.53

உயிர்களும் நெருப்பும்

6771. சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன்னுயிர்
வீடு பெற்றன; இடை மிடைந்த வேணுவின்
காடுபற்றிய பெருங் கனலின் கைபரந்து
ஓடி உற்றது நெருப்பு உவரி நீர் எலாம்.         6.6.54

கணை சுற்றும் கவ்விய கடல்

6772. காலவான் கடுங் கணை சுற்றும் கவ்வலால்
நீல வான் துகிலினை நீக்கிப் பூ நிறக்
கோலவான் தனி நெடுங் கூறை சுற்றினாள்
போல மாநில மகள் பொலிந்து தோன்றினாள்.         6.6.55

வடவைக் கனல்

6773. கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக்
கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு
உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால்
மற்றொரு கடல்புக வடவைத் தீயரோ.         6.6.56

அனற் கொழுந்து

6774. வாழியர் உலகினை வளைத்து வான் உறச்
சூழ் இரும் பெருஞ் சுடர்ப் பிழம்பு தோன்றலால்
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய
ஆழியின் பொலிந்தது அவ் ஆழி அன்ன நாள்.         6.6.57

6775. ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார்
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ?
மேல் நிமிர்ந்து எழுகனல் வெதுப்ப மீதுபோய்
வானவர் மலர் அயன் உலகின் வைகினார்.         6.6.58

இராமன் சதுமுகன் கணையைத் தொடுத்தல்

6776. 'இடுக்கு இனி எண்ணுவது என்னை? ஈண்டு இனி
முடுக்குவென் வருணனை'என்ன மூண்டு எதிர்
தடுக்க அரும் வெகுளியன் சதுமுகன் படை
தொடுத்தனன்; அமரரும் துணுக்கம் எய்தினார்.         6.6.59

பிரமன் கணை தொடுத்தமையால் தோன்றிய விளைவுகள்

6777. மழைக் குலம் கதறின; வருணன் வாய் உலர்ந்து
அழைத்தனன்; உலகமும் அடைத்த ஆறு எலாம்;
இழைத்தன நெடுந்திசை யாதும்; யார் இனிப்
பிழைப்பவர்? என்பது ஓர் பெரும் பயத்தினால்.         6.6.60

பெரும் புறக்கடல் முதலியன கொதித்தல்

6778. அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது; ஏழு
தணெ் திரைக் கடலின் செய்கை செப்பி என்? தேவன் சென்னிப்
பண்டைநாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள்; பார்ப்பான்
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே.         6.6.61

வருணன் வாராமை கண்டு அறிஞர் அலக்கணுறுதல்

6779. இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகு எலாம் ஈன்று மீளக்
கரக்கும் நாயகனைத் தானும் உணர்ந்து இவன் சீற்றம் கண்டும்
வரக் கருதாது தாழ்த்த வருணனின் மாறு கொண்ட
அரக்கரே நல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார்.         6.6.62

வருணனைப் பிற பூதங்கள் வைதல்

6780. 'உற்று ஒரு தனியே, தானே, தன்கணே, உலகம் எல்லாம்
பெற்றவன் முனியப் புக்கால் நடு இனிப் பிழைப்பது எங்ஙன்?
குற்றம் ஒன்று இலாதோர்மேலும் கோள் வரக் குறுகும்'என்னா,
மற்றைய பூதம் எல்லாம், வருணனை வைத மாதோ.         6.6.63

வருணன் தொழுத கையொடு தோன்றுதல்

6781. எழுசுடர்ப் படலையோடும் இரும்புகை நிரம்பி எங்கும்
வழி தெரிவு அறிகிலாத நோக்கினன் வருணன் என்பான்,
அழுது அழி கண்ணன், அன்பால் உருகிய நெஞ்சன், அஞ்சித்
தொழுது எழு கையன், நொய்தின் தோன்றினன், வழுத்தும் சொல்லான்.         6.6.64

வருணன் பணிவுரை பகர்ந்து செல்லுதல் (6782-6783)

6782. 'நீ எனை நினைந்த தன்மை, நெடுங் கடல் முடிவில் நின்றேன்
ஆயினேன் அறிந்திலேன்'என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க,
காய் எரிப் படலை சூழ்ந்த கருங்கடல் தரங்கத் தூடே,
தீ இடை நடப்பான் போலச் செறிபுனற்கு இறைவன் சென்றான்.         6.6.65

6783. வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன்; வாயில்
சிந்திய மொழியன், தீந்த சென்னியன், திகைத்த நெஞ்சன்,
வெந்து அழிந்து உருகும் மெய்யன், விழுப் புகைப் படலம் விம்ம,
அந்தரின் அலமந்து, அஞ்சி, துயர் உழந்து, அலக்கண் உற்றான்.         6.6.66

வருணன் இராமனிடம் அடைக்கலம் புகுதல்

6784. 'நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக! நீயே சீறின்,
கவயம் நின் சரணம் அல்லால், பிறிது ஒன்று கண்டது உண்டோ?
இவை உனக்கு அரியவோதான்; எனக்கு என வலி வேறு உண்டோ?
அவயம், நின் அவயம்!'என்னா, அடுத்து அடுத்து அரற்றுகின்றான்.         6.6.67

வருணன் இராமனைத் துதித்தல் (6785-6791)

6785. 'ஆழி நீ; அனுலும் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
ஊழி நீ; உலகும் நீயே; அவற்று உறை உயிரும் நீயே;
வாழியாய்! அடியேன் நின்னை மறப்பெனோ? வயங்கு செந்தீச்
சூழ் உற உலைந்து போனேன்; காத்தருள் சுருதி மூர்த்தி.         6.6.68

6786. 'காட்டுவாய் உலகம்; காட்டிக் காத்து, அவை கடையில் செந்தீ
ஊட்டுவாய்; உண்பாய், நீயே; உனக்கும் ஒண்ணாதது உண்டோ?
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய
வீட்டுவாய் நினையின்; நாயேற்கு இத்தனை வேண்டுமோ தான்?         6.6.69

6787. சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருள் காடு சாய்க்கும்
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே! மறையின் வாழ்வே!
பண்டை நான்முகனே ஆதி சராசரத்து உள்ளப் பள்ளப்
புண்டரீகத்து வைகும் புராதன! போற்றி, போற்றி!         6.6.70

6788."கள்ளமாய் உலகங் கொள்ளும் கருணையாய்! மறையில் கூறும்
எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள
வள்ளலே! காத்தி''என்ற மாகரி வருத்தம் தீரப்
புள்ளின்மேல் வந்து தோன்றும் புராதனா! போற்றி, போற்றி!         6.6.71

6789. 'அன்னை நீ; அத்தன் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே; பேறும் நீ; இழவும் நீயே;
என்னை,'நீ இகழ்ந்தது'என்றது எங்ஙனே? ஈசன் ஆய
உன்னை நீ உணராய்! நாயேன் எங்ஙனம் உணர்வேன், உன்னை?'         6.6.72

6790. பாய் இருள் சீக்கும் தயெ்வப் பரிதியைப் பழிக்கும் மாலை
மா இருங் கரத்தால், மண்மேல் அடியுறையாக வைத்து,
"தீயன சிறியோர் செய்தால், பொறுத்தலே பெரியோர் செய்கை
ஆயிர நாமத்து ஐயா! சரணம்''என்று அடியில் வீழ்ந்தான்.         6.6.73

6791. பருப்பதம் வேவது என்னப் படர் ஒளி படரா நின்ற
உருப்பெறக் காட்டி நின்று, 'யான் உனக்கு அபயம்'என்ன,
அருப்பு உறப் பிறந்த கோபம் ஆறினான், ஆறா ஆற்றல்
நெருப்பு உறப் பொங்கும் வெம்பால் நீர் உற்றது அனைய நீரான்.         6.6.74

இராமன் அபயம் அளித்து வருணன் வாராமைக்குக் காரணம் வினவுதல்

6792. 'ஆறினாம்; அஞ்சல்; உன்பால் அளித்தனம் அபயம்; அன்பால்
ஈறு இலா வணக்கம் செய்து, யாம் இரந்திட, எய்தாதே,
சீறுமா கண்டு வந்த திறத்தினைத் தெரிவதாகக்
கூறு நீ, அறிஞ'என்றான்; வருணனும், தொழுது கூறும்.         6.6.75

வருணன் வாராமைக்குக் காரணம் கூறுதல்

6793. 'பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற பண்பு
வார்த்தையின் அறிந்தது அல்லால், தேவர்பால் வந்திலேன், நான்;
தீர்த்த! நின் ஆணை, ஏழாம் செறிதிரைக் கடலில் மீனின்,
போர்த் தொழில் விலக்கப் போனேன் அறிந்திலேன், புகுந்தேன்'என்றான         6.6.76

இராமன் தன் அம்பிற்கு இலக்குயாதனெ வருணன் கூறுதல் (6794-6795)

6794. என்றலும், இரங்கி, ஐயன், 'இத்திறம் நிற்க இந்தப்
பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என்? புகறி'என்ன
வன்திறல் வருணன் யானும் உலகமும் வாழ்ந்தோம்'என்னக்
குன்று என உயர்ந்த தோளாய்! கூறுவல் என்று கூறும்.         6.6.77

வருணன் இலக்கு இது எனல்

6795. 'மன்னவ! மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார்,
அன்னவர் சத கோடிக்கும் மேல் உளர், அவுணர் ஆயோர்,
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன; எனக்கும் தீயார்;
மின் உமிழ் கணையை வெய்யோர் மேல் செல விடுதி'என்றான்.         6.6.78

இராமபாணம் அவுணரை அழித்து மீளல்

6796. நேடி நூல் தெரிந்துேளார் தம் உணர்விற்கும், நிமிர நின்றான்,
'கோடி நூறு ஆய தீய அவுணரைக் குலங்கேளாடும்
ஓடி நூறு'என்று விட்டான்; ஓர் இமை ஒடுங்கா முன்னம்
பாடி நூறு ஆக நூறி மீண்டது அப் பகழித் தயெ்வம்.         6.6.79

தீங்கினைச் செய்தவரே தீங்குற்றார்

6797. ஆய்வினை உடையர் ஆகி, அறம் பிழையாதார்க்கு எல்லாம்
ஏய்வன நலனே அன்றி, இறுதி வந்து அடைவது உண்டோ?
மாய்வினை இயற்றி, முற்றும் வருணன்மேல் வந்த சீற்றம்,
தீவினை உடையார்மாட்டே தீங்கினைச் செய்தது அன்றே.         6.6.80

தருமமே வலியது

6798. பாபமே இயற்றினாரைப், பல் நெடுங் காதம் ஓடித்,
தூபமே பெருகும் வண்ணம், எரி எழச் சுட்டது அன்றே,
தீபமே அனைய ஞானத் திருமறை முனிவர் செப்பும்
சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா!         6.6.81

இராமன் வருணனை வழி வேண்டுதல்

6799."மொழி'உனக்கு அபயம்'என்றாய்; ஆதலால், முனிவு தீர்ந்தேன்;
பழி எனக்கு ஆக என்று பாதகர் பரவை என்னும்
குழியினைக் கருதிச் செய்த குமண்டையைக் குறைத்து நீங்க
வழியினைத் தருதி''என்றான் வருணனை நோக்கி வள்ளல்.         6.6.82

வருணன் காலம் நீடிக்கும் எனல்

6800. ஆழமும் அகலம் தானும் அளப்பு அரிது எனக்கும் ஐய!
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை;
வாழியாய்! வற்றி நீங்கில், வரம்பு அறுகாலம் எல்லாம்
தாழும்; நின் சேனை உள்ளம் தளர்வுறும் தவத்தின் மிக்கோய்.         6.6.83

சேது கட்டிச் செல்லுக எனல்

6801. 'கல் என வலித்து நிற்பின், கணக்கு இலா உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உலந்து வீயும்; இட்டது ஒன்று ஒழுகாவண்ணம்
எல்லையில் காலம் எல்லாம் ஏந்துவென், எளிதின்; எந்தாய்!
செல்லுதி,"சேது" என்று ஒன்று இயற்றி, என் சிரத்தின் என்றான்.'         6.6.84

சேது கட்டுமாறு சேனைக்குப் பணித்தல்

6802. 'நன்று, இது புரிதும் அன்றே; நளிகடல் பெருமை நம்மால்
இன்று இது தீரும் என்னின், எளிவரும் பூதம் எல்லாம்;
குன்று கொண்டு அடுக்கி, சேது குயிற்றுதிர்'என்று கூறிச்
சென்றனன் இருக்கை நோக்கி; வருணனும் அருளின் சென்றான         6.6.85
---------------------
6.8. சேது பந்தனப் படலம் ( 6803 - )

சுக்கிரீவன் அறிஞரோடு எண்ணி நளனை அழைத்தல்

6803. 'அளவு அரும் அறிஞரோடு அரக்கர் கோமகற்கு
இளவலும் இனிது உடன் இருக்க எண்ணினான்
விளைவன விதிமுறை முடிக்க வேண்டுவான்
'நளன் வருக!'என்றனன் கவிக்கு நாயகன்.         6.7.1

சேது கட்ட நளன் உடன்படுதல்

6804. வந்தனன் வானரத் தச்சன்; மன்ன! நின்
சிந்தனை என்? என செறிதிரைக் கடல்
பந்தனை செய்குதல் பணி நமக்கு'என
நிந்தனை இலாதவன் செய்ய நேர்ந்தனன்.         6.7.2

நளன் சேது கட்டற்குரியன கொணர்க எனல்

6805. காரியம் கடலினை அடைத்துக் கட்டலே;
சூரியன் காதல! சொல்லி என் பல;
மேருவும் அணுவும் ஓர் வேறு உறாவகை
ஏர் உற இயற்றுவென்; கொணர்தி; என்றனன்         6.7.3

அணை கட்ட வருமாறு வானரர்களைச் சாம்பன் அழைத்தல்

6806. 'இளவலும் இறைவனும் இலங்கை வேந்தனும்
அளவு அறு நம் குலத்து அரசும் அல்லவர்
வளைதரும் கருங்கடல் அடைக்க வம்'எனத்
தளம் மலி சேனையைச் சாம்பன் சாற்றினான்.         6.7.4

வானரங்கள் மலைகளைக் கொணர்தல் (6807-6809)

6807. கரு வரை காதங்கள் கணக்கு இலாதன
இரு கையில் தோள்களில் சென்னி ஏந்தின
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள்
வருவன ஆம் என வந்த வானரம்.         6.7.5

6808. பேர்த்தன மலை சில; பேர்க்கப் பேர்க்க நின்று
ஈர்த்தன சில; சில சென்னி ஏந்தின;
தூர்த்தன சில; சில தூர்க்கத் தூர்க்க நின்று
ஆர்த்தன; சில சில ஆடிப் பாடின.         6.7.6

6809. கால் இடை ஒரு மலை உருட்டி கைகளின்
மேலிடை இரு மலை ஏந்தி விண் தொடும்
சூல் உடை மழைமுகில் சூழ்ந்து சுற்றிய
வால் இடை ஒருமலை ஈர்த்து வந்தவால்;         6.7.7

நளன் மலைகளை வாங்கியடுக்குதல் (6810-6811)

6810. முடுக்கினன்'தருக'என மூன்று கோடியர்
எடுக்கினும் அம்மலை ஒருகை ஏந்தியிட்டு
அடுக்கினன்; தன் வலி காட்டி ஆழியை
நடுக்கினன் நளன் எனும் நவையில் நீங்கினான்.         6.7.8

6811. மஞ்சினில் திகழ்தரு மலையை மாக் குரங்கு
எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே நளன்
விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில்
'தஞ்சம்!'என்றோர்களைத் தாங்கும் தன்மைபோல்.         6.7.9

அணை கட்டும்போது நிகழ்ந்தவை (6812-6847)

6812. சயக் கவிப் பெரும்படைத் தலைவர் தாள்களால்
முயல் கறை மதி தவழ் மூரிக் குன்றுகள்
அயக்கலின் முகில் குலம் அலறி ஓடின
இயக்கரும் மகளிரும் இரியல் போயினார்.         6.7.10

6813. வேர் உடை நெடுங்கிரி தலைவர் வீசின
ஓர் இடத்து ஒன்றின்மேல் ஒன்று சென்று உக
நீர் இடை நிமிர்பொறி பிறக்க நீண்ட ஈது
ஆர் உடை நெருப்பு?'என வருணன் அஞ்சினான்.         6.7.11

6814. ஆனிறக் கண்ணன் என்று ஒருவன் அங்கையால்
கான்நிற மலை கொணர்ந்து எறியக் கார்க்கடல்
தூநிற முத்தினம் துவலையோடும் போய்
வான்நிறை மீனொடு மாறு கொண்டவே         6.7.12

6815. சிந்துரத் தட வரை எறிய சேணிடை
முந்துறத் தெறித்து எழு முத்தம் தொத்தலால்
அந்தரத்து எழு முகில் ஆடையா அகன்
பந்தர் ஒத்தது நெடும் பரிதி வானமே.         6.7.13

6816. வேணுவின் நெடுவரை வீச மீமிசைச்
சேண் உறு திவலையால் நனைந்த செந்துகில்
பூண் உறும் அல்குலில் பொருந்திப் போதலால்
நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார்.         6.7.14

6817. தேன் இவர் தடவரை திரைக் கருங் கடல்
தான் நிமிர்தர இடை குவியத் தள்ளும் நீர்
மேல் நிமிர் திவலை மீச்சென்று மீடலால்
வானவர் நாட்டினும் மழை பொழிந்ததால்.         6.7.15

6818. மை உறு மலைகேளாடு மறிகடல் வந்து வீழ்ந்த
வெய்யவாய் மகரம் பற்ற வெருவின விளிப்ப, மேல் நாள்
பொய்கையின் இடங்கர் கவ்வ,
'புராதனா போற்றி'என்று
கை எடுத்து அழைத்த யானை போன்றன களிநல் யானை.         6.7.16

6819. அசும்பு பாய் தேனும், பூவும், ஆரமும் அகிலும், மற்றும்,
விசும்பு எலாம் உலவும் தயெ்வ வேரியின் மிடைந்து விம்மத்,
தசும்பு எலாம் வாசம் ஊட்டிச் சார்த்திய தண்ணீர் என்னப்,
பசும்புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது அன்றே.         6.7.17

6820. தேம் முதல் கனியும் காயும், தேனினோடு ஊனும், தயெ்வப்
பூ முதலாய எல்லாம், மீன் கொளப் பொலிந்தது அன்றே,
மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மானக் குன்றம்
தாம் முதலோடுங் கெட்டால் ஒழிவரோ, வண்மை தக்கோர்?         6.7.18

6821. மண்ணுறச் சேற்றுள் புக்குச் சுரிகின்ற மாலைக் குன்றம்
கள் நிறை போதும் காயும் கனிகளும் பிறவும் கவ்வ
எண் உறு மீன்கள் எல்லாம், வறியவர் என்னச் செல்ல,
உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த.         6.7.19

6822. கறங்கு எனத் திரியும் வேகக் கவிக் குலம் கதுவ வாங்கிப்
பிறங்கு இருங் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள்,
மறங்கிளர் மான யானை வயிற்றின ஆக, வாய் சோர்ந்து
உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார்?         6.7.20

6823. இழை எனத் தகைய மின்னின் எயிற்றின, முழக்கம் எய்த,
புழை உடைத் தடக்கை ஒன்றோடு ஒன்று இடை பொருந்தச் சுற்றி
கழை உடைக் குன்றின் முன்றில், உருமொடு கலந்த கால
மழை எனப் பொருத வேலை மகரமும் மத்த மாவும்.         6.7.21

6824. பொன்றின, சிறிய ஆய புண்ணியம் புரிந்தோர் போல,
குன்றுகள் குரக்கு வீரர் குவித்தனர், நெருப்புக் கோப்ப
ஒன்றின் மேல் ஒன்று வீழ, உகைத்து எழுந்து, உம்பர் நாட்டுச்
சென்று, மேல் நிலை பெறாது, திரிந்தன சிகரச் சில்லி.         6.7.22

6825. கூர் உடை எயிற்றுக் கோள் மாச் சுறவு இனம் எறிந்து கொல்ல,
போருடை அரியும், வெய்ய புலிகளும், யாளிப் போத்தும்,
நீர் இடைத் தோற்ற அன்றே? தம் நிலை நீங்கிற்று என்றால்
ஆர் இடைத் தோலார் மேலோர், அறிவிடை நோக்கின் அம்மா?         6.7.23

6826. ஒள்ளிய உணர்வு கூட உதவலர் எனினும் ஒன்றோ,
வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே?
துள்ளின, குதித்த, வானத்து உயர்வரைக் குவட்டில் தூங்கும்
கள்ளினை நிறைய மாந்தி, கவி எனக் களித்த மீன்கள்.         6.7.24

6827. மூசு எரி பிறக்க, மீக் கொண்டு, இறக்கிய முடுக்கம் தன்னால்,
கோய் சொரி நறவம் என்னத் தண்புனல் உகுக்கும் குன்றின்
வேய் சொரி முத்துக்கு, அம்மா விருந்து செய்திருந்த விண்ட
வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம்.         6.7.25

6828. விண் தலம் தொடு மால்வரை வேரோடும்
கொண்டு அலங்கு ஒளி வீரர் குவித்தலால்
திண் தலம் கடல் ஆனது; நீர் செல
மண் தலம் கடல் ஆகி மலைந்ததே.         6.7.26

6829. அய்யன் வேண்டின் அது இது ஆம் அன்றே
வெய்ய சீயமும் யாளியும் வேங்கையும்
மொய்கொள் குன்று முதலின மொய்த்தலால்
நெய்தல் வேலி குறிஞ்சி நிகர்த்ததால்.         6.7.27

6830. 'யான் உணாதன ஈங்கு இவை'என்னவே
தீன் உணாதன; என் இது செய்யுமே?
மான் உணாத திரைக்கடல் வாழ்தரு
மீன் உணாதன இல்லை விலங்கு அரோ.         6.7.28

6831. வவ்வில் அங்கு வளர்த்தவர் மாட்டு அருள்
செவ் விலங்கல் இல் சிந்தையர் தீர்வரோ
'இவ் விலங்கல் விடேம்'இனி என்ப போல்
எவ் விலங்கும் வந்து எய்தின வேலையே.         6.7.29

6832. கனி தரும் நெடுங்காய் தரும் நாள்தொறும்
இனிது அருந்தவம் நொய்தின் இயற்றலால்
பனி தரும் கிரி தம் மனம் பற்று உறும்
முனிவரும் முனியார் முடிவு உன்னுவார்.         6.7.30

6833. புலையின் வாழ்க்கை அரக்கர் பொருப்பு உளார்
தலையின் மேல் வைத்த கையினர் சாற்றுவார்
'மலை இலேம்; மற்று மாறு இனி வாழ்வது ஓர்
நிலை இலேம்'என்று இலங்கை நெருங்கினார்.         6.7.31

6834. முழுக்க நீரில் புகா முழுகிச் செலா
குழுக்கேளாடு அணை கோள் அரி யாளிகள்
இழுக்கு இல் பேர் அணையின் இரு பக்கமும்
ஒழுக்கின் மாலை வகுத்தன ஒத்தவால்.         6.7.32

6835. பளிக்கு மால் வரை முந்து படுத்தன
ஒளிக்கும் ஆழி கிடந்து என ஓர்கிலர்
'வெளிக்கு மால் வரை வேண்டும்'எனக் கொணர்ந்து
அளிக்கும் வானர வீரர் அநேகரால்.         6.7.33

6836. பாரினாள் முதுகும் நெடும் பாழ்பட
மூரி வானரம் வாங்கிய மொய்ம் மலை
வேரின் ஆம் என வெம் முழையின் உழை
சோரும் நாகம் நிலன் உறத் தூங்குமால்.         6.7.34

6837. அருணச் செம்மணிக் குன்று அயலே சில
இருள் நற் குன்றம் அடுக்கின ஏய்ந்தன
கருணைக் கொண்டல்'வறியன் கழுத்து'என
வருணற்கு ஈந்த வருண சரத்தையே.         6.7.35

6838. ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு இடம்
ஆய்ந்து கொள்ளும் அறிஞரின் ஆழ்கடல்
பாய்ந்த பண்டு உறையும் மலைப் பாந்தள்கள்.
போந்த மா மலையின் முழை புக்கவே.         6.7.36

6839. சேதுவின் பெருமைக்கு இணை செப்ப ஓர்
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்கொலோ
தூதன் இட்ட மலையின் துவலையால்
மீது விட்டு உலகு உற்றன மீன்களும்.         6.7.37

6840. நீலன் இட்ட நெடுவரை நீள் நில
மூலம் முட்டலின் மொய்புனல் கைம்மிக
கூலம் இட்டிய ஆர்கலி கோத்ததால்
ஓலமிட்டு எழுந்து ஓடி உலகு எலாம்         6.7.38

6841. மயிந்தன் இட்ட நெடுவரை வான் உற
உயர்ந்து முட்டி விழ எழுந்து ஓத நீர்
தியந்தம் முட்ட திசைநிலை யானையும்
பெயர்ந்து விட்டவை யாவும் பிளிறுவ         6.7.39

6842. இலக்கு வன் சரம் ஆயினும் ஏன்று எதிர்
விலக்கினும் விலங்காத விலங்கலால்
அலக்கண் எய்த அமுது எழ ஆழியைக்
கலக்கினான் மகன் மீளக் கலக்கினான்.         6.7.40

6843. மருத்தின் மைந்தன் மணி நெடுந் தோள் எனப்
பெருத்த குன்றம் கரடிப் பெரும் படை
விருத்தன் இட்ட விசையினின் வீசிய
திருத்தம் வானவர் சென்னியில் சென்றதால்.         6.7.41

6844. குமுதன் இட்ட குல வரை கூத்தரின்
திமிதம் இட்டுத் திரியும் திரைக் கடல்
துமி தம் ஊர்புக வானவர் துள்ளினார்
அமுதம் இன்னும் எழும் எனும் ஆசையால்.         6.7.42

6845. கன சினத்து உருமின் கடுங் கார் வரை
பனசன் இட்டன யாவும் பரிக்கிலன்
மன சினத்தன் அனந்தனும் வாழ்வு இகந்து
அன் அசனத் தொழில் மேற்கொள்வது ஆயினான்.         6.7.43

6846. எண் இல் எண்கு இனம் இட்ட கிரிக் குலம்
உண்ண உண்ணச் சென்று, ஒன்றினொடு ஒன்று உற,
சுண்ண நுண்பொடி ஆகித் தொலைந்தன,
புண்ணியம் பொருந்தாத முயற்சி போல்.         6.7.44

6847. ஆர ஆயிர யோசனை ஆழமும்
தீர நீண்டு பரந்த திமிங்கிலம்
பார மால் வரை ஏறப் பதைத்து உடல்
பேரவே குன்றும் வேலையும் பேர்ந்தவால்.         6.7.45

நளன் சேதுவை அமைத்த வகை (6848-6849)

6848. குலை கொளக் குறி நோக்கிய கொள்கையான்
சிலைகள் ஒக்க முறித்துச் செறித்து நேர்
மலைகள் ஒக்க அடுக்கி மணல் படத்
தலைகள் ஒக்கத் தடவும் தடக் கையால்.         6.7.46

6849. தழுவி ஆயிர கோடியர் தாங்கிய
குழுவி வானரர் தந்த கிரிக் குலம்
எழுவின் நீள் கரத்து ஏற்றிட இற்று இடை
வழுவி வீழ்வன கால்களின் வாங்குவான்.         6.7.47

மலை சுமந்துவரும் வானரங்கள் (6850-6853)

6850. மலை சுமந்து வருவன வானரம்
நிலையில் நின்றன செல்ல நிலம் பெறா
அலை நெடுங் கடல் அன்றியும் ஆண்டுத் தம்
தலையின் மேலும் ஓர் சேதுவும் தந்த போல்.         6.7.48

6851. பருத்த மால் வரை ஏந்திய பல்படை
நிரைத்தலின் சில செல்ல நிலம் பெறா
கரத்தின் ஏந்திய கார்வரை கண் அகன்
சிரத்தின் மேற்கொடு நீந்தின சென்றவால்.49

6852. ஆய்ந்து நீளம் அரிது சுமந்தன
ஓய்ந்த கால பசியின் உலர்ந்தன
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன்
மாந்தி மாந்தி மறந்து துயின்றவால்.         6.7.50

6853. போதல் செய்குநரும் புகுவார்களும்
மாதிரம் தொறும் வானர வீரர்கள்
'சேது எத்துணை சென்றது?'என்பார் சிலர்;
'பாதி சென்றது'எனப் பகர்வார் சிலர்.         6.7.51

மலைகளும் மரங்களும் கடலில் ஆழ்த்தப்படுவதால் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் (6854-6866)

6854. குறைவு இல் குங்குமமும் குகைத் தேன்களும்
நிறை மலர்க் குலமும் நிறைந்து எங்கணும்
துறைதொறும் கிரி தூக்கின தோய்தலால்
நறை நெடுங் கடல் ஒத்தது நாம நீர்.         6.7.52

6855. நெடும் பல் மால் வரை தூர்த்து நெருக்கவும்
துடும்பல் வேலை துளங்கியது இல்லையால்
இடும்பை எத்துணையும் மடுத்து எய்தவும்
குடும்பம் தாங்கும் குடிப் பிறந்தாரினே.         6.7.53

6856. கொழுந்து உடைப் பவளக் கொடியின் குலம்
அழுந்த உய்த்த அடுக்கல் தகர்ந்து அயல்
விழுந்த பல மணி இன் ஒளி மீமிசை
எழுந்த எங்கணும் இந்திர வில்லினே.         6.7.54

6857.பழுமரம் பறிக்க பறவைக் குலம்
தழுவி நின்று ஒருவன் தனித் தாங்குவான்
விழுதலும் புகல் வேற்று இடம் இன்மையால்
அழுது அரற்றும் கிளை என ஆனவால்.         6.7.55

6858.'தர வலோம் மலர்'என்று உயிர் தாங்கிய
மரம் எலாம் கடல் வீழ்தலும் வண்டு எலாம்
கரவு இலாளர் விழ களைகண் இலா
இரவலாளரின் எங்கும் இரிந்தவால்.         6.7.56

6859.தொக்கு அடங்கல ஓடும் துவலைகள்
மிக்கு அடங்கலும் போவன மீன் குலம்
அக் கருங் கடல் தூர அயல் கடல்
புக்கு அடங்கிடப் போவன போன்றவே.         6.7.57

6860.மூசு வண்டு இனம் மும்மத மாவின் பின்
ஆசை கொண்டன போல் தொடர்ந்து ஆடின
ஓசை ஒண் கடல் குன்றொடு அவை புக
வேசை மங்கையராம் என மீண்டவே.         6.7.58

6861.நிலம் அரங்கிய வேரோடு நேர் பறித்து
அலமரும் துயர் எய்திய ஆயினும்
வல மரங்களை விட்டில மாசு இலாக்
குல மடந்தையர் என்ன கொடிகளே.         6.7.59

6862.துப்பு உறக் கடல் தூய துவலையால்
அப்புறக் கடலும் சுவை அற்றன;
எப்புறத்து உரும் ஏறும் குளிர்ந்தன;
உப்பு உறைத்தன மேகம் உகுத்த நீர்.         6.7.60

6863 முதிர் நெடுங்கிரி வீழ முழங்குநீர்
எதிர் எழுந்து நிரந்தரம் எய்தலால்
மதியவன் கதிரின் குளிர் வாய்ந்தன
கதிரவன் கனல் வெங்கதிர்க் கற்றையே.         6.7.61

6864. நன்கு ஒடித்து நறுங் கிரி சிந்திய
பொன் கொடித் துவலைப் பொதிந்து ஓடுவ
வன் கொடிப் பவளங்கள் வயங்கலால்
மின் பொடித்தது போன்றன விண் எலாம்.         6.7.62

6865. ஓடும் ஓட்டரின் ஒன்றின் முன் ஒன்று போய்
காடும் நாடும் மரங்களும் கற்களும்
நாடும் நாட்டும் நளிர்கடல் நாட்டில் ஓர்
பூடும் ஆடுதல் இல்லை இப் பூமியில்.         6.7.63

6866. வரைப் பரப்பும் வனப் பரப்பும் உவர்த்
தரைப் பரப்புவது என்ன தனித்தனி
உரைப் பரப்பும் உறுகிரி ஒண்கவி
கரைப் பரப்பு கடற் பரப்பு ஆனதால்.         6.7.64

அணை கட்டி முடித்தமையால் வானரர் பேராரவாரஞ் செய்தல்

6867. உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை
முற்ற மூன்று பகல் இடை; முற்றவும்
பெற்ற ஆர்ப்பு விசும்பு பிளந்ததால்;
மற்று இவ் வானம் பிறிது ஒரு வான் கொலோ? 65

சேதுவின் தோற்றம்

6868. நாடுகின்றது என் வேறு ஒன்று? நாயகன்
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான்
'ஓடும் என் முதுகிட்டு'என ஓங்கிய
சேடன் என்னப் பொலிந்தது சேதுவே.         6.7.66

6869. மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென்மகள்
பொய்யன் ஈட்டிய தீமை பொறுக்கலாள்
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்.         6.7.67

6870. கான யாறு பரந்த கருங்கடல்
ஞான நாயகன் சேனை நடத்தலால்
'ஏனை யாறு இனி யான் அலது ஆர்?'எனா
வான யாறு இம்பர் வந்தது மானுமால்.         6.7.68

6871. கல் கிடந்து ஒளிர் காசு இனம் காந்தலால்
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை
எல் கடந்த இருள் இடை இந்திரன்
வில் கிடந்ததும் என்ன விளங்குமால்.         6.7.69

சேது கட்டி முடிந்தபின், சுக்கிரீவன், வீடணன் முதலியோர் இராமனிடம் சென்று தெரிவித்தல்

6872. ஆன பேர் அணை அன்பின் அமைத்தனர்;
கான வாழ்க்கைக் கவிக்குல நாதனும்
மான வேலை இலங்கையர் மன்னனும்
ஏனையோரும் இராமனை எய்தினார்.         6.7.70

6873. எய்தி'யோசனை ஈண்டு ஒரு நூறு உற
ஐ இரண்டின் அகலம் அமைந்திடச்
செய்ததால் அணை'என்பது செப்பினார்
வைய நாதன் சரணம் வணங்கியே.         6.7.71

6.8 ஒற்றுக் கேள்விப் படலம் (6874-6938)

இராமன், அணைகட்டி முடிந்தமை கூறிய சுக்கிரீவன் முதலியவரைத் தழுவி அணை காண விரைதல்

6874. ஆண்தகையும், அன்பினொடு தான் இடை எழுந்தே
நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி
ஈண்ட எழுக என்றனன்; இழைத்த படியெல்லாம்
காண்டல் அதன் மேல் நெடிய காதல் முதிர்கின்றான்.         6.8.1

இராமன் அணையை அடைதல்

6875. பண்டை உறையுட்கு எதிர் படைக் கடலின் வைகும்
கொண்டல், என வந்து, அவ் அணையைக் குறுகி நின்றான்
அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி அனையாளைக்
கண்டனன் எனப் பெரிய காதல் முதிர்கின்றான்.         6.8. 2

இராமன் அணையினமைதி கண்டு வியந்து உவந்து பாராட்டுதல் (6876-6877)

6876. நின்று, பெரிது உன்னி, இந் நெடுங்கடல் நிரம்பக்
குன்றுகொடு அடைத்து, அணை குயிற்றியது ஒர் கொள்கை,
அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான்
என்ற பொழுதின்கணும் இது என்று இயலும்? என்றான்.         6.8.3

6877. ஊழி முதல் நாயகன் வியப்பினொடு உவந்தான்;
ஆழம் செய்யும் அளவோ! இனி அது ஒன்றோ?
ஆழியின் இலங்கை நெடிது அத்திசையின் ஆமேல்
ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் ‘என்றான்.         6.8.4

இராமன் வானரப் படையுடன் அணைமீது செல்லுதல்

6878. நெற்றியில் அரக்கர் பதி செல்ல நிறை நல் நூல்
கற்று உணரும் மாருதி கடைக்குழை வரத் தன்
வெற்றி புனை தம்பி ஒரு பின்பு செல வீரப்
பொன் திரள்புயக் கருநிறக் களிறு போனான்.         6.8.5

அணைமீது சென்ற வானரப் படையின் தோற்றம் (6879-6880)

6879. இருங்கவி கொள் சேனை மணி ஆரம் இடறித் தன்
மருங்கு வளர் தணெ் திரை வயங்கு பொழில் மான
ஒருங்கு நனி போயினது; உயர்ந்த கரை ஊடே
கருங்கடல் புகப் பெருகு காவிரி கடுப்ப.         6.8.6

6880. ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள
கோது இல அருந்துவன கொள்ளையின் முகந்து உற்று
யாதும் ஒழியாவகை சுமந்து கடல் எய்தப்
போதலினும் அன்ன படை பொன்னி எனல் ஆகும்.         6.8.7

அணைமீது வானரப் படை செல்லுங்கால் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகள் (6881-6882)

6881. ஆயது நெருங்க அடியிட்டு அயல் இடாமல்
தேயும் நெறி மாடு திரை ஊடு விசை செல்லப்
போய சில பொங்குதொறு பொங்குதொறு பூசல்
பாய்புரவி விண் படர்வபோல் இனிது பாய்வ.         6.8.8

6882. மெய் இடை நெருங்க வெளி அற்று அயலில் வீழும்
பொய்யிடம் இலாத புனலில் புகல் இலாத
உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார்
கை இடை கொடுப்ப வழிசென்ற கரை இல்லை.         6.8.9

வானரர் குடைபிடித்தும் சாமரை வீசியும் இராமனை உபசரித்து வருதல் (6883-6884)

6883. இழைத்து அனைய வெம்கதிரின் வெம்சுடர் இராமன்
மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல்
தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம் உயர்ந்த
வழைத் தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர்.         6.8.10

6884. ஓம நெறிவாணர் மறை வாய்மை ஒருதானே
ஆம் அரசன் மைந்தர் திருமேனி அலசாமே
பூ மரன் இறுத்தவை பொருத்துவ பொருத்திச்
சாமரையின் வீசினர் படைத் தலைவர் தாமே.         6.8.11

இராமன் கடல் கடந்து கரையடைதல்

6885. அருங் கடகம் அம்கையில் அகற்றி அயர்வோடும்
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மனம் உன்னா
ஒருங்கு அடல் உயர்ந்த படர் தானையொடும் ஓதத்து
இருங்கடல் கடந்து கரை ஏறினன் இராமன்.         6.8.12

இராமன் சுவேலமலையில் தங்குதல்

6886. பெருந்தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால்
மருந்து அனைய தம்பியோடும் வன் துணைவரோடும்
அருந்ததியும் வந்தனை செய் அம்சொல் இளவஞ்சி
இருந்த நகரின் புறன் ஓர் குன்று இடை இறுத்தான்.         6.8.13

இராமன் நீலனிடம் படைவீடு அமைக்கும்படி பணித்தல்

6887. நீலனை இனிது நோக்கி, நேமியோன், ‘விரைய ‘நீ நம்
பால்வரு சேனைக்கு எல்லாம் இழைத்தியால் பாடி ‘என்னக்
கால்வரை வணங்கிப் போனான், கல்லினால் கடலைக் கட்டி,
நூல்வரை வழி செய்தானுக்கு அந் நிலை நொய்திற் சொன்னான்.         6.8.14

நளன் படைவீடமைத்தல்

6888. பொன்னினும் மணியினாலும் நான்முகன் புனைந்த பொற்பின்
நல் நலம் அமைய வாங்கி, நால்வகைச் சதுரம் நாட்டி,
இன்னர் என்னாத வண்ணம் இறைவற்கும் பிறர்க்கும் எல்லாம்
நல்நகர் நொய்தின் செய்தான்; தாதையும் நாணுக் கொண்டான்.         6.8.15

நளன் இராமனுக்கு இருக்கையமைத்தல்

6889. வில்லினாற்கு இருக்கை செய்யும் விருப்பினால், பொருப்பின் வீங்கும்
கல்லினால் கல்லை ஒக்கக் கடாவினான், கழைகளான
நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான், தருப்பை என்னும்
புல்லினால் தொடுத்து, வாசப் பூவினால் வேய்ந்து போனான்.         6.8.16

யாவரும் அவரவர்க்கு அமைத்த இருக்கையை அடைதல்

6890. வாயினும் மனத்தினானும் வாழ்த்தி, மன்னுயிர்கட்கு எல்லாம்
தாயினும் அன்பினோனைத் தாள் உற வணங்கித் தத்தம்
ஏயின இருக்கை நோக்கி எண் திசை மருங்கும் யாரும்
போயினர்; பன்னசாலை இராமனும் இனிது புக்கான்.         6.8.17

சூரியன் அத்தமித்தல்

6891. பப்பு நீர் ஆய வீரர் பருவரை கடலில் பாய்ச்சத்
துப்பு நீர் ஆய தூய சுடர்களும் கறுக்க வந்திட்டு
உப்பு நீர் அகத்துத் தோய்ந்த ஒளிநிறம் விளங்க, அப்பால்
அப்பு நீர் ஆடுவான் போல் அருக்கனும் அத்தம் சேர்ந்தான்.         6.8.18

சந்திரன் தோன்றுதல்

6892. மால் உறு குடக வானின், வயங்கிய வந்து தோன்றும்
பால் உறு பசு வெண் திங்கள், பங்கய நயனத்து அண்ணல்
மேல் உறு பகழி தூர்க்க வெகுண்டனன், விரைவின் வாங்கிக்
கால் உற வளைத்த காமன் வில் எனக் காட்டிற்று அன்றே.         6.8.19

தென்றல் சந்திரன் முதலியவை கொதித்தல்

6893. நூற்று இதழ்க் கமலம் தந்த நுண் நறுஞ் சுண்ணம் உண்ணத்
தீற்றி, மென் பனிநீர் தோய்ந்த சீதளத் தென்றல் என்னும்
காற்றினும் மாலையான கனலினும் காமன் வாளிக்
கூற்றினும் வெம்மை காட்டிக் கொதித்தது அக் குளிர் வெண் திங்கள்.         6.8.20

இராமன் தோள்மீது நிலாத் தவழும் தோற்றம்
6894. செயிர்ப்பினும் அழகு செய்யும் திருமுகத்து அணங்கைத் தீர்த்து
துயில் சுவை மறந்தான் தோளில் தூநிலாத் தவழும் தோற்றம்,
மயில் குலம் பிரிந்த மான மரகத மலை மேல் வன்னி
உயிர்ப்பு உடை வெள்ளைப் பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற.         6.8.21

இராமன் விரகதாபத்தால் வருந்துதல்
6895. மன் நெடு நகரம் மாடே வரவர, வயிரச் செங்கைப்
பொன் நெடுந் திரள் தோள் ஐயன், மெய் உறப் புழுங்கி நைந்தான்;
பல் நெடுங் காதத்தேயும் சுட வல்ல பவளச் செவ்வாய்
அந் நெடுங் கருங்கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ?         6.8.22

குரங்குருவொடு வானரப்படையுள் மறைந்து திரிந்த இராவணன் ஒற்றரை வீடணன் காணுதல் (6896-6898)
6896. இற்று இது காலம் ஆக, இலங்கையர் வேந்தன் ஏவ,
ஒற்றர் வந்து, அளவு நோக்கிக் குரங்கு என உழல்கின்றாரைப்
பற்றினன் என்ப மன்னோ! பண்டு தான் பலநாள் செய்த
நல்தவப் பயன்கள் துய்ப்ப முந்து உற போந்த நம்பி.         6.8.23

6897. பேர்வு உறு கவியின் சேனைப் பெருங் கடல் வெள்ளம் தன்னுள்
ஓர்வு உறும் மனத்தன் ஆகி, ஒற்றரை உணர்ந்து கொண்டான்;
சேர்வுறு பாலின் வேலைச் சிறுதுளி தறெித்த வேனும்
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான்.         6.8.24

6898. பெருமையும் சிறுமைதானும் முற்றுறு பெற்றி ஆற்ற
அருமையின் அகன்று, நீண்ட விஞ்சையுள் அடங்கித் தாமும்
உருவமும் தரெியா வண்ணம், ஒளித்தனர், உறையும் மாயத்து
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான்.         6.8.25

ஓற்றரை வீடணன் காட்ட இராமன் காணுதல்
6899. கூட்டிய விரல் திண்கையால் குரங்குகள் இரங்கக் குத்தி,
மீட்டு ஒரு வினை செய்யாமல், மாணையின் கொடியால் வீக்கிப்
பூட்டிய கையர் வாயால் குருதியே பொழிகின்றாரைக்
காட்டினன் கள்வர் என்னாக் கருணையங் கடலும் கண்டான்.         6.8.26

இராமன் குரங்குருவினின்ற ஒற்றரை நலியாது விடுக எனல்
6900. பாம்பு இழைப் பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான், ‘பல்லோர்
நோம் பிழை செய்த கொல்லோ குரங்கு? என, இரங்கி நோக்கித்
தாம் பிழை செய்தாரேனும், தஞ்சம் என்று அடைந்தார் தம்மை
நாம் பிழை செய்யல் ஆமோ? நலியலிர் விடுதிர் ‘என்றான்.         6.8.27

வீடணன், இவர் இராவணன் ஒற்றராகிய சுகசாரணர் என்று இராமனிடம் கூறுதல்
6901. அகன் உறப் பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன்,
‘நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர்;
தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர்;
சுகன் இவன்; அவனும் சாரன் ‘ என்பது தரெியச் சொன்னான்.         6.8. 28

ஒற்றர் நாங்கள் குரங்குகளே; வீடணன் எங்களைக் கொல்ல வந்த வஞ்சகன் என்று இராமனிடம் கூறுதல்
6902. கல்விக்கண் மிக்கோன் சொல்லக் கரு மன நிருதக் கள்வர்,
“வல் வில் கை வீர! மற்று இவ் வானரர் வலியை நோக்கி,
‘வெல்விக்கை அரிது ‘என்று எண்ணி, வினையத்தால் எம்மை எல்லாம்
கொல்விக்க வந்தான்; மெய்ம்மை; குரங்கு நாம்; கொல்க ‘‘ என்றார்.         6.8.29

வீடணன் மந்திரத்தால் ஒற்றர் அரக்கருருவொடு நிற்றல்
6903. ‘கள்ளரே காண்டி ‘என்னா மந்திரம் கருத்தில் கொண்டான்;
தெள்ளிய தரெிக்கும் தவெ்வர், தீர்வினை சேர்தலோடும்
துள்ளியின் இரதம் தோய்ந்து, தொல் நிறம் கரந்து வேறாய்
வெள்ளி போல் இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார்.         6.8.         6.8.30

இராமன், எது கருதி வந்தீர் என ஒற்றரை வினவுதல்
6904. மின் குலாம் எயிற்றர் ஆகி, வெருவந்து வெற்பின் நின்ற
வன்கணார் தம்மை நோக்கி, மணி நகை முறுவல் தோன்றப்
புன்கணார் புன்கண் நீக்கும் புரவலன், ‘போந்த தன்மை
என்கொலாம்? தரெிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் ‘என்றான்.         6.8.31

ஒற்றர் வேய் தரெிந்துரைக்க வந்தோம் எனல்
6905. தாய் தரெிந்து உலகு காத்த தவத்தியைத் தன்னைக் கொல்லும்
நோய் தரெிந்து உணரான் தேடிக் கொண்டவன் நுவல, ஆற்றின்
வாய் தரெிந்து, உணராவண்ணம் கழறுவார், வணங்கி, ‘மாய
வேய் தரெிந்து க்க வந்தோம் வினையினால் வீர ‘என்றார்.         6.8.32

இராமன் ஒற்றரிடம் கூறுதல் (6906-6910)
6906. ‘எல்லை இல் இலங்கைச் செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை
சொல்லுதிர்; மகர வேலை, கவிக்குல வீரர் தூர்த்துக்
கல்லினில் கடந்த வாறும் கழறுதிர்; “காலம் தாழ்த்த
வில்லினர், வந்தார் ‘‘ என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர். ‘         6.8.33

6907. ‘கொத்து உறு தலையான் வைகும் குறும்பு உடை இலங்கைக் குன்றம்,
தத்து உறு தடநீர் வேலை தனில், ஒரு சிறையிற்று ஆதல்,
ஒத்து உற உணர்ந்திலாமை, உயிரோடும் உறவினோடும்
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால். ‘         6.8.34

6908. ‘சண்டம் கொள் வேகமாகத் தனி விடை, உவணம், தாங்கும்
துண்டம் கொள் பிறையான், மௌலித் துளவினானோடும் தொல்லை
அண்டம் கொள் தேவர், வந்து, காப்பினும், அறம் இலானைக்
கண்டங்கள் பலவும், காண்பன் என்பதும் கழறுவீரால். ‘         6.8.35

6909. தீட்டிய மழுவாள் வீரன், தாதையைச் செற்றோன் சுற்றம்
மாட்டிய வண்ணமே, தன் வருக்கமும், மற்றும் முற்றும்,
வீட்டி, என் தாதைக்காக, மெய்ப்பலி, விசும்பு உ(ள்)ேளாரை
ஊட்டுவென் உயிர்கொண்டு ‘என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால்.         6.8.36

6910. தாழ்வு இலாத் தவத்து ஓர் தையல், தனி ஒரு சிறையில் தங்கச்
சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்த தன்னைத் தன் சுற்றத்தோடும்,
வாழ்வு எலாம் தம்பி, கொள்ள, வயங்கு எரி நரகம் என்னும்
வீழ்வு இலாச் சிறையின், வைப்பென்; என்பதும் விளம்புவீரால்.         6.8.37

இராமன் கட்டளையால் ஒற்றர் திரும்பிச் செல்லுதல்

6911. ‘நோக்கினிர் தானையெங்கும் நுழைந்தனிர்; இனி வேறு ஒன்றும்
ஆக்குவது இல்லையாயின், அஞ்சல் என்ற அஃது உண்டு ‘; என்றே
‘வாக்கினின் மனத்தின் கையின் மற்று இனி நலியா வண்ணம்,
போக்குமின் விரைவின் ‘என்றான்; ‘உய்ந்தனம் ‘என்று போனார்.         6.8.38

இராவணன் மந்திராலோசனை செய்தல் (6912-6914)

6912. அரவ மாக் கடல் அஞ்சிய அச்சமும்
உரவு நல் அணை ஓட்டிய ஊற்றமும்
வரவும் நோக்கி இலங்கையர் மன்னவன்
இரவின் எண்ணிட வேறு இருந்தான் அரோ.         6.8.39

6913. வார் குலாம் முலை மாதரும் மைந்தரும்
ஆரும் நீங்க அறிஞரோடு ஏகினான்
‘சேர்க ‘என்னின் அல்லால் இளந்தென்றலும்
சார்கிலா நெடு மந்திர சாலையே.         6.8.40

6914. உணர்வு இல் நெஞ்சினர் ஊமர் ப்பொருள்
புணரும் கேள்வியர் அல்லர் பொறி இலர்
கொணரும் கூனர் குறளர் கொழுஞ்சுடர்
துணரும் நல்விளக்கு ஏந்தினர் சுற்றினார்.         6.8.41

இராவணன் வினவுதல்

6915. ‘நணியர் வந்து மனிதர்; நமக்கு இனித்
துணியும் காரியம் யாது? ‘எனச் சொல்லினான்;
பணியும் தானவர் ஆதியர் பல் முடி
மணியினால் விளங்கும் மணித் தாளினான்.         6.8.42

மாலியவான் கூறுதல் (6916-6920)

6916. கால வெம் கனல் போலும் கணைகளால்
வேலை வெந்து நடுங்கி வெயில் புரை
மாலை கொண்டு வணங்கியவாறு எலாம்
சூலம் என்ன என் நெஞ்சைத் தொளைக்குமால்.         6.8.43

6917. ‘கிழிபடக் கடல் கீண்டது; மாண்டது
மொழி படைத்த வலி ‘; என மூண்டது ஓர்
பழி படைத்த பெரும் பயத்து அன்னவன்
வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால்.         6.8.44

6918. படைத்த மால் வரை யாவும் பறித்து வேர்
துடைத்த வானர வீரர் தம் தோள்களைப்
புடைத்தவாறும் புணரியைப் போக்கு அற
அடைத்தவாறும் என் உள்ளத்து அடைத்தவால்.         6.8.45

6919. காந்து வெம் சின வீரர் கணக்கு இலார்
தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத் தர
வேந்த! வெற்பை ஒருவன் விரல்களால்
ஏந்தி இட்டது என் உள்ளத்தில் இட்டதால்.         6.8.46

6920. சுட்டவா கண்டும் தொல் நகர் வேலையைத்
தட்டவா கண்டும் தா அற்ற தவெ்வரைக்
கட்டவா கண்டும் கண் எதிரே வந்து
விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ?         6.8.47

இராவணன் மாலியவானைச் சினந்து கூறுதல்

6921. என்று தாயைப் பயந்தோன் இயம்பலும்
தின்று வாயை விழிவழித் தீ உக
‘நன்று நன்று நம் மந்திரம் நன்று ‘எனா
‘என்றும் வாழ்தி இளவலொடு ஏகு ‘என்றான்.         6.8.48

மாலியவான் மௌனமுறச் சேனைத் தலைவன் கூறுதல் (6922-6925)

6922. ஈனமேகொல் இதம்? என எண்ணுறா
மோனம் ஆகி இருந்தனன் முற்றினான்;
ஆன காலை அடியின் இறைஞ்சிய
சேனை நாதன் இனையன செப்பினான்.         6.8.49

6923. கண் வயம்தர வேலை கடந்த அத்
திண்மை ஒன்றும் அலால் திசை காவலர்
எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அவ்
உண்மை ஒன்றும் உணர்ந்திலை போலுமால்.         6.8.50

6924. கூசி வானரர் குன்று கொடுங்கடல்
வீசினார் எனும் வீரம் விளம்புவாய்
ஊசி வேரோடும் ஓங்கலை ஓங்கிய
ஈசனோடும் எடுத்ததும் இல்லையோ.         6.8.51

6925. அதுகொடு என் சில; ஆர் அமர் மேல் இனி
மதி கெடும் தகையோர் வந்து நாம் உறை
பதி புகுந்தனர் தம்மைப் படுப்பது ஓர்
விதி கொடு உந்த விளைந்ததுதான் என்றான்.         6.8.52

வாயில் காவலன் இராவணனிடம் ஒற்றர் வரவு தரெிவித்தல்

6926. முற்றும் மூடிய கஞ்சுகன் மூட்டிய
வெற்று அனல் பொழி கண்ணினன் வேத்திரம்
பற்றும் அம் கையினன் படிகாரன் நின்று
‘ஒற்றர் வந்தனர் ‘என்ன உணர்த்தினான்.         6.8.53

இராவணன் கட்டளையால் ஒற்றர் இராவணனை யடைதல்

6927. வாயில் காவலன் கூற வயங்கு எரி
மேய வெங்கண் விறல் கொள் இராக்கதர்
நாயகன் ‘புகுத்து இங்கு ‘என ‘நன்று ‘எனப்
போய் அவன் புகுத்தப் புகுந்தார் அரோ.         6.8.54

ஒற்றர் இராவணனை வணங்குதல்

6928. மனைக்கண் வந்து அவன் பாதம் வணங்கினார்
பனைக்கை வன்குரங்கின் படர் சேனையை
நினைக்குந்தோறும் திடுக்கிடும் நெஞ்சினார்
கனைக்குந்தோறும் உதிரங்கள் கக்குவார்.         6.8.55

இராவணன் ஒற்றர்பால் வானரப்படையளவு முதலியவற்றை வினவுதல்

6929. ‘வெள்ள வாரி விரிவொடு அவ் வீடணத்
தள்ளவாரி நிலைமையும் தாபதர்
உள்ளவாறும் மின் ‘என்றான்; உயிர்
கொள்ள வாய் வெருவும் கொடுங் கூற்று அனான்.         6.8.56

ஒற்றர் கூறுதல் (6930-6938)

6930. அடியம் அந்நெடுஞ் சேனையை ஆசையால்
முடிய நோக்கலுற்றோம்; முதுவேலையின்
படியை நோக்கி அவ் வானம் படர்குறும்
கடிய வேகக் கலுழனில் கண்டிலம்.         6.8.57

6931. நுவல யாம் வரவேண்டிய நோக்கதோ
கவலை வேலை எனும் கரை காண்கிலாது
அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும்
துவலையே வந்து சொல்லியது இல்லையோ?         6.8.58

6932. ‘எல்லை நோக்கவும் எய்தில தாம் ‘எனும்
சொல்லை நோக்கிய மானிடன் தோள் எனும்
கல்லை நோக்கிக் கணைகளை நோக்கித் தன்
வில்லை நோக்கலும் வெந்தது வேலையே.         6.8.59

6933. தார் உலாம் மணி மார்ப! நின் தம்பியே
தேர் உலாவு கதிரும் திரிந்து தன்
பேர் உலாவும் அளவினும் பெற்றனன்
நீர் உலாவும் இலங்கை நெடுந்திரு         6.8.60

6934. சேது பந்தனம் செய்தனன் என்றது இப்
போது வந்த புது வலியோ? ஒரு
தூது வந்தவன் தோள் வலி சொல்லிய
ஏது அந்தம் இலாத இருக்கவே.         6.8.61

6935. மருந்து தேவர் அருந்திய மாலைவாய்
இருந்த தானவர் தம்மை இரவி முன்
பெருந்திண் மாயற்கு உணர்த்திய பெற்றியில்
தரெிந்து காட்டினன் நும்பி சினத்தினால்.         6.8.62

6936. பற்றி வானர வீரர் பனைக் கையால்
எற்றி எங்களையே நெடுந் தோள் உறச்
சுற்றி ஈர்த்து அலைத்துச் சுடர்போல் ஒளிர்
வெற்றி வீரற்குக் காட்டி விளம்பினான்.         6.8.63

6937. “‘சரங்கள் இங்கு இவற்றால் பண்டு தான் உடை
வரங்கள் சிந்துவென் ‘என்றனன்; மற்று எமைக்
குரங்கு அலாமை தரெிந்தும் அக் கொற்றவன்
இரங்க உய்ந்தனம்; ஈது எங்கள் ஒற்று “ என்றார்.         6.8.64

6938. மற்றும் யாவையும் வாய்மைய வானவன்
சொற்ற யாவையும் சோர்வு இன்றிச் சொல்லினார்
‘குற்றம் யாவையும் கோெளாடு நீங்குக;
இற்றை நாள் முதல் ஆயு உண்டாக ‘என்றார்         6.8.65
------------------

6.9 இலங்கை காண் படலம் (6939 - 6986 )

இராவணன் வினவச் சேனை காப்பாளன் சொல்லத் தொடங்குதல்

6939. வைதனெக் கொல்லும் வில் கை மானிடர், மகர நீரை
நொய்தினின் அடைத்து, மானத் தானையான் நுவன்ற நம் ஊர்
எய்தினர் என்ற போதின், வேறு இனி எண்ண வேண்டும்
செய்திறன் உண்டோ? என்ன, சேனை காப்பாளன் செப்பும்.         6.9.1

சேனை காவலன் மறுமொழி (6940-6943)

6940. ‘விட்டனை மாதை என்ற போதினும், “வெருவி, வேந்தன்
பட்டது ‘‘ என்று இகழ்வர் விண்ணோர்; பற்றி இப்பகையைத் தீர,
ஒட்டல் ஆம் போரில் ஒன்னார் ஒட்டினும், உம்பி ஒட்டான்;
கிட்டிய போது, செய்வது என்? இனிக் கிளத்தல் வேண்டும்.         6.9.2

6941. ஆண்டு சென்று அரிகேளாடு மனிசரை அமரில் கொன்று
மீண்டு நம் இருக்கை சேர்தும் என்பது மேல் கொண்டோமேல்,
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ?
வேண்டியது எய்தப் பெற்றால் வெற்றியின் விழுமிது அன்றோ!         6.9.3

6942. ஆயிரம் வெள்ளம் ஆன அரக்கர்தம் தானை ஐய!
தேயினும் ஊழி நூறு வேண்டுமால்; சிறுமை என்னோ?
நாயினம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால்
நீ உருத்து எழுந்த போது, குரங்கு எதிர் நிற்பது உண்டோ?         6.9.4

6943. வந்தவர், தானையோடு மறிந்து மாக் கடலில் வீழ்ந்து
சிந்தினர் இரிந்து போகச் சேனையும் யானும் சென்று,
வெம் தொழில் புரியும் ஆறு காணுதி; விடை ஈக என்னா,
இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏய்ந்த சொன்னான்.         6.9.5

மாலியவான் அறிவுரை (6944-6954)

6944. மதி நெறி அறிவு சான்ற மாலியவான், “ நல் வாய்மை
பொது நெறி நிலையது ஆகப் புணர்த்துதல் புலமை ‘என்னா,
‘விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும், மீண்டு
செது நெறி நிலையினாரே ‘ என்பது தரெியச் சொல்லும்.         6.9.6

6945. “‘பூசற்கு முயன்று நம்பால், பொரு திரைப் புணரி வேலித்
தேசத்துக்கு இறைவன் ஆன தசெரதன் சிறுவனாகி,
மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும்
ஈசற்கும் ஈசன் வந்தான் ‘‘ என்பதோர் வார்த்தை இட்டார்.         6.9.7

6946. அன்னவற்கு இளவல் தன்னை, “அருமறை, ‘பரம் ‘என்று ஓதும்
நல்நிலை நின்று, தீர்ந்து, நவை இலா உயிர்கள் தோறும்
தொல்நிலை பிரிந்தான் என்னப் பலவகை நின்ற தூயோன்
இன் அணை ‘‘ என்ன யாரும் இயம்புவர்; ஏது யாதோ?         6.9.8

6947. “‘அவ்வவர்க்கு அமைந்த வில்லும், குலவரை அவற்றின் ஆன்ற
வெவ் வலி வேறு வாங்கி, விரிஞ்சனே விதித்த, மேல் நாள்;
செவ் வழி நாணும், சேடன்; தரெிகணை ஆகச் செய்த
கவ்வு அயில், கால நேமிக் கணக்கையும் கடந்தது ‘‘ என்பார்.         6.9.9

6948. “‘வாலி மா மகன் வந்தானை, “வானவர்க்கு இறைவன் “ என்றார்;
நீலனை, ‘உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் “ என்றார்;
காலனே ஒக்கும் தூதன் “காற்று எனும் கடவுள் “ என்றார்;
மேலும் ஒன்று த்தார் : “அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல்“ என்றார்.         6.9.10

6949. “‘அப்பதம் அவனுக்கு ஈந்தான், அரக்கர் வேர் அறுப்பதாக
இப்பதி எய்தினான் அவ் இராமன் ‘‘ என்று எவரும் சொன்னார்;
ஒப்பினால் க்கின்றாரோ? உண்மையே உணர்த்தினாரோ?
செப்பி என்? “குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் ‘என்றார்.         6.9.11

6950. ‘ஆயது தரெிந்தோர், தங்கள் அச்சமோ? அறிவோ? ‘யார்க்கும்
சேயவள், ‘எளியள் ‘என்னா, சிந்தையின் இகழல் அம்மா!
“தூயவள் அமிழ்தினோடும் தோன்றினாள், என்றும் தோன்றாத்
தாய் அவள், உலகுக்கு எல்லாம் ‘‘ என்பதும், சாற்றுகின்றார்.         6.9.12

6951. “‘கானிடை வந்ததேயும் வானவர் கடாவவேயாம்;
மீன் உடை அகழி வேலை விலங்கல் மேல் இலங்கை வேந்தன்
தானுடை வரத்தை எண்ணி, தருமத்தின் தலைவர் தாமே
மானுட வடிவம் கொண்டார் ‘‘ என்பது ஓர் வார்த்தை இட்டார்.         6.9.13

6952. “ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு உள அடுத்த “ என்றார்;
“தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறிய, தக்கோன்
ஏயின தூதன் எற்ற, பற்று விட்டு, இலங்கைத் தயெ்வம்
போயினது ‘‘ என்றும் சொன்னார்; ‘‘புகுந்தது போரும் ‘‘ என்றார்.         6.9.14

6953. “‘அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் அரக்கர் ‘என்ன,
நம் பரத்து அடங்கும் மெய்யன், நாவினில் பொய் இலாதான்,
உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞானத்
தம்பியே சாற்றிப் போனான் ‘‘ என்பதும் சமையச் சொன்னார்.         6.9.15

6954. ‘ஈது எலாம் உணர்ந்தேன் ஆயும், என்குலம் இறுதி உற்றது
ஆதியின் இவனால் என்றும், உன்தன் மேல் அன்பினாலும்,
வேதனை நெஞ்சின் எய்த, வெம்பி, யான் விளைவ சொன்னேன்,
சீதையை விடுதி ஆயின், தீரும் இத்தீமை ‘என்றான்.         6.9.16

மாலியவான் மொழிகளை இராவணன் இகழ்ந்துரைத்தல் (6955-6960)

6955. ‘மற்று எலாம் நிற்க, வந்த மனிதர் வானரங்கள், வானில்
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை
சொற்றவாறு அன்றியேயும், “தோற்றி நீ “ என்றும் சொன்னாய்
கற்றவா நன்று போ ‘என்று, இனையன கழறல் உற்றான்.         6.9.17

6956. ‘பேதை மானிடவரோடு குரங்கு அல, பிறவே ஆக,
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அப்புறத்தது ஆக,
காது வெஞ்செரு வேட்டு, என்னைக் காந்தினர் கலந்த போதும்,
சீதைதன் திறத்தின் ஆயின், அமர்த் தொழில் திறம்புவேனோ?         6.9.18

6957. ‘ஒன்று அல, பகழி, என் கைக்கு உரியன; உலகம் எல்லாம்
வென்றன; ஒருவன் செய்த வினையினும் வலிய; “வெம்போர்
முன்தருக ‘என்ற தேவர் முதுகு புக்கு அமரில் முன்னம்
சென்றன; இன்று வந்த குரங்கின்மேல் செல்கலாவோ?         6.9.19

6958. ‘சூலம் ஏய் தடக் கை அண்ணல் தானும், ஓர் குரங்காய்த் தோன்றி
ஏலுமேல், இடைவது அல்லால் என்செய வல்லன் என்னை?
வேலை நீர் கடைந்த மேல் நாள் உலகு எலாம் வெருவ வந்த
ஆலமோ விழுங்க, என் கை அயில் முகப் பகழி? அம்மா!         6.9.20

6959. ‘அறிகிலை போலும், ஐய! அமர் எனக்கு அஞ்சிப் போன
எறி சுடர் நேமியான் வந்து ஏற்கிலும், என் கை வாளி,
பொறி பட, சுடர்கள் தீயப் போவன; போக்கு இலாத
மறி கடல் கடைய, வந்த மணிகொலாம், மார்பில் பூண?         6.9.21

6960. ‘கொற்ற வாள் இமையோர் கோமான் குரங்கினது உருவம் கொண்டால்,
அற்றை நாள், அவன்தான் விட்ட அயில் படை அறுத்து மாற்ற,
இற்ற வான் சிறைய ஆகி விழுந்து, மேல் எழுந்து வீங்காப்
பொற்றை மால் வரைகேளா, என் புயநெடும் பொருப்பும்? என்றான்.         6.9.22

இருள் நீங்குதல்

6961. உள்ளமே தூது செல்ல உயிர் அனார் உறையுள் நாடும்
கள்ளம் ஆர் மகளிர் சோர, நேமிப் புள் கவற்சி நீங்க,
கொள்ளை பூண்டு அமரர் வைகும் குன்றையும் கொடிற்றில் கொண்ட
வெள்ள நீர் வடிந்தது என்ன, வீங்கு இருள் விடிந்தது அன்றே.         6.9.23

கதிரவன் தோன்றுதல்

6962. இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி,
பொன்மதில் புறத்து நாளும் போகின்றான், ‘போர் மேற்கொண்டு
மன்னவர்க்கு அரசன் வந்தான்; வலியமால் ‘என்று, தானும்
தொல் நகர் காண்பான் போல, கதிரவன் தோற்றம் செய்தான்.         6.9.24

இராமன் தன் பரிவாரங்களுடன் சுவேலமலைமேல் ஏறுதல்

6963. ‘அருந்ததி அனைய நங்கை அவ் வழி இருந்தாள் ‘என்று
பொருந்திய காதல் தூண்ட, பொன் நகர் காண்பான் போல,
பெருந் துணை வீரர் சுற்ற, தம்பியும் பின்பு செல்ல,
இருந்த மா மலையின் உச்சி ஏறினன் இராமன், இப்பால்.         6.9.25

மலைமேல் ஏறிய இராமனது தோற்றப் பொலிவு (6964-6967)

6964. செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல,
இரு திறல் வேந்தர் தாங்கும் இணை நெடுங் கமலக் கையான்,
பொரு வலி வய வெஞ்சீயம் யாவையும் புலியும் சுற்ற,
அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி அரசு அனையன் ஆனான்.         6.9.26

6965. கதம் மிகுந்து இரைத்துப் பொங்கும் கனைகடல் உலகம் எல்லாம்
புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்தம் புரமும், பொற்பும்,
சிதைவு செய் குறியைக் காட்டி வடதிசைச் சிகரக் குன்றின்,
உதயம் அது ஒழியத் தோன்றும், ஒரு கரு ஞாயிறு ஒத்தான்.         6.9.27

6966. துமிலத் திண் செருவின் வாளிப் பெரு மழை சொரியத் தோன்றும்
விமலத் திண் சிலையன், ஆண்டு ஓர் வெற்பினை மேய வீரன்,
அமலத் திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன,
கமலத் திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான்.         6.9.28

6967. மல் குவடு அனைய திண் தோள் மானவன், மானம் இல்லாக்
கல் குவடு அடுக்கி வாரிக் கடலினைக் கடந்த காட்சி
நல் குவடு அனைய வீரர் ஈட்டத்தின் நடுவண் நின்றான்,
பொன் குவட்டு இடையே தோன்றும் மரகதக் குன்றம் போன்றான்.         6.9.29

மலைமேல் நின்று இலங்கை நகரத்தினைக்கண்ட இராமன் அதன் எழில்மிக்க பலவகைக் காட்சிகளையும் இலக்குவனுக்கு எடுத்துரைத்தல்

6968. அணை நெடுங் கடலில் தோன்ற, ஆறிய சீற்றத்து ஐயன்,
பிணை நெடுங் கண்ணி என்னும் இன்னுயிர் பிரிந்த பின்னை,
துணை பிரிந்து அயரும் அன்றில் சேவலின் துளங்குகின்றான்,
இணை நெடுங் கமலக் கண்ணால் இலங்கையை எய்தக் கண்டான்.         6.9.30

இராமன் இலங்கையின் எழில்கண்டு இலக்குவனுக்குக் காட்டுதல் (6969-6985)

6969. ‘நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம்
வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த காலை,
இந்திரன் இருக்கை என்பர்; இலங்கையை எடுத்துக் காட்டார்;
அந்தரம் உணர்தல் தேற்றார், அருங் கவிப் புலவர் அம்மா!         6.9.31

6970. பழுது அற விளங்கும் செம்பொன் தலத்திடைப் பரிதி நாண
முழுது எரி மணியின் செய்து முடிந்தன, முனைவராலும்
எழுத அருந் தகைய ஆய மாளிகை, இயையச் செய்த
தொழில் தரெிகிலவால், தங்கண் சுடர்மணிக் கற்றை சுற்ற.         6.9.32

6971. விரிகின்ற கதிர ஆகி, மிளிர்கின்ற மணிகள் வீச,
சொரிகின்ற சுடரின் சும்மை விசும்புறத் தொடரும் தோற்றம்,
அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி மடுத்த தீயால்
எரிகின்றது ஆயே காண், இக் கொடி நகர் இருந்தது இன்னும்.         6.9.33

6972. ‘மாசு அடப் பரந்த மான மரகதத் தலத்து வைத்த
காசு இடைச் சமைந்த மாடம், கதிர்த் தழைக் கற்றை சுற்ற
ஆசு அறக் குயின்ற வெள்ளி அகல்மனை அன்னம் ஆக,
பாசடைப் பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய்!         6.9.34

6973. தீச் சிகை சிவணுஞ் சோதிச் செம்மணி செறியச் செய்த
தூச் சுடர் மாடம் ஈண்டித் துறுதலால், கருமை தோன்றா
மீச் செலும் மேகம் எல்லாம், விரிசுடர் இலங்கை வேவ,
காய்ச்சிய இரும்பு மானச் சேந்து ஒளி கஞல்வ, காணாய்.         6.9.35

6974. வில் படி திரள் தோள் வீர! நோக்குதி வெங் கண் யானை
அல் படி நிறத்த வேனும், ஆடகத் தலத்தை ஆழ,
கல் படி வயிரத் திண் கால் நகங்களின் கல்லி, கையால்
பொன் பொடி மெய்யின் வீசி, பொன் மலை என்னப் போவ.         6.9.36

6975. ‘பூசல் வில் குமர! நோக்காய் புகர் அற விளங்கும் பொற்பின்
காசுடைக் கதிரின் கற்றைக் கால்களால் கதுவு கின்ற
வீசு பொன் கொடிகள் எல்லாம், விசும்பினின் விரிந்த மேக
மாசு அறத் துடைத்து, அவ் வானம் விளக்குவ போல்வ மாதோ!         6.9.37

6976. நூல் படத் தொடர்ந்த பைம் பொன் சித்திரம் நுனித்த பத்திக்
கோல் படு மனைகள் ஆய குலமணி எவையும் கூட்டி,
சால் படுத்து அரக்கன் மாடத் தனி மணி நடுவண் சார்த்தி,
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இம் மூதூர்.         6.9.38

6977. நல் நெறி அறிஞ! நோக்காய் நளி நெடுந் தரெுவின் நாப்பண்
பல் மணி மாடப் பத்தி நிழல் படப் படர்வ, பண்பால்
தம் நிறம் தரெிகிலாத, ஒரு நிறம் சார்கிலாத,
இன்னது ஓர் குலத்த என்று புலப்படா, புரவி எல்லாம்.         6.9.39

6978. ‘வீர! நீ பாராய் மெல்லென் பளிங்கினால் விளங்குகின்ற;
மாரனும் மருளச் செய்த மாளிகை, மற்றோர் சோதி
சேர்தலும் தரெிவ; அன்றேல், தரெிகில; தரெிந்த காட்சி
நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர.         6.9.40

6979. ‘கோல்நிறக் குனிவில் செங்கைக் குமரனே! குளிர் வெண் திங்கள்
கால் நிறக் கதிரின் கற்றை தறெ்றிய அனைய காட்சி
வால் நிறத் தரளப் பந்தர், மரகதம் நடுவண் வைத்த,
பால் நிறப் பரவை வைகும் பரமனை நிகர்ப்ப, பாராய்.         6.9.41

6980. ‘கோள் அவாவு அரி ஏறு அன்ன குரிசிலே! கொள்ள நோக்காய்
நாள் அவாம் மின்தோய் மாடத்து உம்பர், ஓர் நாகர் பாவை,
காள வார் உறையின் வாங்கும் கண்ணடி, விசும்பில் கவ்வி
வாள் அரா விழுங்கிக் காலும் மதியினை நிகர்த்த வண்ணம்.         6.9.42

6981. ‘கொற்ற வான் சிலைக் கை வீர! கொடி மிடை மாடக் குன்றை
உற்ற வான் கழுத்தவான ஒட்டகம், அவற்றது உம்பர்ச்
செற்றிய மணிகள் ஈன்ற சுடரினைச் செக்காரத்தின்
கற்றை அம் தளிர்கள் என்னக் கவ்விய நிமிர்வ, காணாய்!         6.9.43

6982. ‘வாகை வெஞ் சிலைக்கை வீர! மலர்க்குழல் புலர்த்த, மாலைத்
தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற,
வேக வெங் களிற்றின் வன் தோல் மெய்யுறப் போர்த்த தையல்
பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையைப் பாராய்!         6.9.44

6983. ‘காவலன் பயந்த வீரக் கார்முகக் களிறே! கற்ற
தேவர்தம் தச்சன் நீலக் காசினால் திருந்தச் செய்த,
ஈவது தரெியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த
பாவ பண்டாரம் அன்ன செய் குன்றம் பலவும் பாராய்!         6.9.45

6984. ‘பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட, பிடியுண்டு, அன்பின்
துணைவரைப் பிரிந்து போந்து, மருங்கு எனத் துவளும் உள்ளப்
பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர், பருவம் நோக்கும்
கண மயில் குழுவின், நம்மைக் காண்கின்றார் தம்மைக் காணாய்!         6.9.46

6985. ‘நாழ் மலர்த் தரெியல் வீர! நம் படை காண, வானத்து
யாழ் மொழித் தரெிவை மாரும் மைந்தரும் ஏறுகின்றார்,
‘வாழ்வு இனிச் சமைந்தது அன்றே ‘ என்று மா நகரை எல்லாம்
பாழ் படுத்து இரியல் போவார் ஒக்கின்ற பரிசு பாராய்!         6.9.47

வானர சேனையைக் காண எண்ணி, இராவணன் கோபுரத்தின் மேல்நிலையை அடைத்தல்

6986. இன்னவாறு இலங்கை தன்னை இளையவற்கு இராமன் காட்டி,
சொன்னவா சொல்லா வண்ணம் அதிசயம் தோன்றும் காலை,
அன்ன மா நகரின் வேந்தன், அரிக் குலப் பெருமை காண்பான்,
சென்னி வான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர்ச் சேர்ந்தான்.         6.9.48
--------------------


This file was last updated on10 September 2016.
.